Tamil Madhura பயணங்கள் முடிவதில்லை - 2019,Uncategorized சிகிரியா – யாழ் சத்யா

சிகிரியா – யாழ் சத்யா


நிமிடத்தில் உலகத்தையே சுற்றிவரும் உள்ளத்திற்கு ஊர் சுற்றுவது பிடித்தம் இல்லாமல் போய்விடுமா?

புது இடங்களுக்குச் செல்வதும்; அந்த இடங்களின் வரலாறுகளை அறிந்து கொள்வதும்; பிரதானமாக அந்த இடத்தின் பிரசித்தி பெற்ற உணவுகளை ருசி பார்ப்பதும் எனக்கு மிகவும் பிடித்தமான விடயம். பால்ய பருவத்திலிருந்து பிள்ளையுடன் பூங்கா செல்லும் இன்றைய நாள் வரை ஊர் சுற்றிப் பார்க்க செல்வதென்றால் முதல் ஆளாகத் தயாராகுவது நானாகத்தான் இருப்பேன்.

நான் ஐந்தாறு தடவைகளுக்கு மேல் மிகவும் விரும்பிச் சென்ற ஒரு இடத்தைப் பற்றித்தான் இப்போது உங்களோடு பகிர்ந்து கொள்ளப் போகிறேன். 

சிகிரியா!

இலங்கையில் மாத்தளை மாவட்டத்தில் தலைநகர் கொழும்பிலிருந்து சுமார் நூற்றியறுபத்தாறு கிலோ மீட்டர்கள் தூரத்தில் அமைந்துள்ளது இந்த அழகிய குன்று. யுனெஸ்கோவினால் உலகப் பாரம்பரியச் சொத்தாக அறிவிக்கப்பட்டுள்ள சிகிரியா உண்மையிலேயே காண்போரைக் கொள்ளை கொள்ளும் ஒரு உலக அதிசயம் என்று தான் சொல்வேன். 

இலங்கையில் நடந்த அசாதாரண யுத்த சூழ்நிலைகளால் யாழ் மாவட்டத்தை விட்டு வெளியே செல்வதென்பது எங்களுக்கெல்லாம் ஒரு காலத்தில் எட்டாக் கனியாக இருந்தது. அப்போதெல்லாம் பாடப் புத்தகங்களில் மட்டும் தான் நாங்கள் இவ்வாறான வரலாற்று இடங்களைக் கூடப் பார்த்துத் தெரிந்து கொள்ள முடியும். சமூகக் கல்விப் பாடப் புத்தகத்தில் இந்த இடத்தின் படத்தைப் பார்த்ததிலிருந்தே, ஒரு தடவையாவது இங்கே சென்று விட மாட்டேனா என்ற ஆவலும் ஏக்கமும் என்னைப் பாடாய்படுத்திக் கொண்டிருந்தன. அவ்வாறிருந்த போது தான் யுத்த நிறுத்த உடன்படிக்கையின்படி சில வருடங்கள் நாடு சாதாரண நிலைக்குத் திரும்பி வெளி மாவட்டங்களுக்குச் சென்று வரக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டது.

நான் எட்டாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்த பொழுது முதன் முதலாக யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு சென்ற வேளையில் தூரத்திலிருந்து சிகிரியா குன்றைப் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. சிங்கம் ஒன்று தனது முன்னங்காலை ஊன்றி அமர்ந்திருந்தது போன்ற இதன் புறத் தோற்றத்தைப் பார்த்ததுமே உள்ளே சென்று பார்க்க வேண்டும் என்ற பேராவல் என்னில் கொளுந்து விட்டு எரிய ஆரம்பித்தது. 

இரு வருடங்கள் கழித்து பாடசாலைச் சுற்றுலா மூலம் அந்த அரிய வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. மற்றைய மாணவிகளோடு சந்தோஷமாகப் பேசிச் சிரித்துக் கொண்டே மனம் கொள்ளா மகிழ்ச்சியோடு சுற்றி வர மரங்கள் அடர்ந்த காடுகளின் நடுவே இருந்த சிங்கக் குகையை நோக்கி என் பயணத்தை ஆரம்பித்தேன். 

நுழைவாயிலில் இருந்து உள்ளே சென்றால் இரு மருங்கும் அடர்ந்த மரங்கள் பரவியிருக்க, அதன் அருகே விட்டு விட்டுச் செவ்வக வடிவிலான நீர்த் தேக்கங்கள் நீண்டிருக்க, நட்ட நடுவே சிகிரியா குன்றை நோக்கி நேர் கோடாய் செம்மண் பாதை ஒன்று ஓடியது. குன்றின் அழகையும் இரு பக்கமும் காணப்பட்ட சிறு தடாகங்களின் அழகையும் ரசித்தவாறே அந்த மண் பாதையில் நடந்து சிங்கத்தின் கால் பகுதியை அடைந்தோம். 

சிங்கத்தின் பாதங்கள் இரண்டின் நடுவே அமைக்கப்பட்டிருந்த படிகளினூடே ஏறி மேலே இருந்த குகையை நோக்கிச் செல்ல ஆரம்பித்தோம். இருநூறு மீட்டர்கள் அளவே உயரம் என்றாலும் மேலே செல்லச் செல்ல கொஞ்சம் மூச்சு வாங்கத்தான் செய்தது. இருந்தாலும் குகையின் உள்ளே இருக்கும் இந்தியாவின் புகழ் பெற்ற அஜந்தா ஓவியங்களுக்கு ஒப்பான சிகிரியா குகை ஓவியங்களை நேரில் பார்க்கும் ஆவல் களைப்பை மறக்கடிக்கச் செய்து உற்சாகத்தோடே தொடர்ந்து ஏற வைத்தது. அது வரைக்கும் இலங்கை ரூபா நாணயங்களிலும் தாள்களிலுமே பார்த்திருந்த ஓவியங்களை நேரில் பார்ப்பதென்பது வரமல்லவா? 

இடையிடையே அகன்ற படிகள் என்றாலும் சில இடங்களில் காணப்பட்ட மிகக் குறுகலான ஒடுங்கிய படிகள் ஏதோ பெரிய சாகசம் செய்வது போன்ற எண்ணத்தையும் தோற்றுவிக்காமல் இல்லை. ஒரு வழியாகக் குகையை அடைந்தால் பூக்கள் ஏந்திய வெற்று மார்புக் கன்னிகளின் ஓவியங்கள் மங்கைப் பருவத்திலிருந்த எங்களை நாணிக் கோண வைத்தன. ஓவியங்களின் பாதுகாப்புக் கருதி புகைப்படங்கள் எடுப்பது முற்றாகத்தடை செய்யப்பட்டிருந்தமையால் அந்த புராதன பொக்கிசங்களை எங்கள் கண்களுக்கு மட்டும் விருந்தாக்கிக் கொண்டு குன்றின் உச்சியை அடைந்தோம்.

குன்றின் உச்சியிலும் காணப்பட்ட நீர்த் தடாகங்கள் எங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தின. ராணிகள் நீராடுவதற்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்டவையாகவும் இவை இருந்தன என்று படித்த ஞாபகம் மனதில் நிழலாடிச் சென்றது. உச்சியிலிருந்து சுற்றி வரப் பார்த்த போது எங்கும் பச்சைப் பசேலெனக் காடுகளே காட்சியளித்தன. எங்கோ தூரத்தில் வெள்ளையாய் ஒரு புத்த பகவான் சிலை உருவமும் கண்ணில் பட்டது. 

உண்மையில் இந்தக் குன்றில் தனது கோட்டையை அமைத்த அரசனின் புத்திசாலித்தனத்தை எண்ணி வியக்காமலிருக்க முடியவில்லை. சுற்றி வர ஆழ்ந்த அகழி சூழ்ந்திருக்க குன்றின் மேலே குகைக்குள் கட்டிய கோட்டைக்குள் எந்த எதிரியால் நுழைய முடியும் என்று எண்ணினேன். பாடப் புத்தகங்களிலும் செவி வழிக் கதைகள் மூலமாகவும் கேட்ட கோட்டையின் வரலாற்றை அந்த நேரத்தில் அசைபோடாமல் இருக்க முடியவில்லை.

தாதுசேனன் என்ற மன்னன் கி.பி 455 முதல் 473 வரை தென்னிந்திய மன்னர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து நாட்டை மீட்டு அநுராதபுரத்திலிருந்து ஆட்சி புரிந்து வந்தான். அவனது பட்டத்து ராணிக்குப் பிறந்த மகன் மொகலான. தாதுசேனனுக்கு தாழ்ந்த குலத்தைச் சேர்ந்தவளோ அல்லது பல்லவ நாட்டைச் சேர்ந்தவளோ என்று சொல்லப்படும் பெண்ணொருத்தி இரண்டாவது மனைவியாக இருந்தாள். அவளுக்குப் பிறந்த மகன் காசியப்பன், மொகலானவை விட வயதில் மூத்தவன்.  

காசியப்பன் வயதில் மூத்தவனாக இருந்தாலும் கூடத் தனக்குப் பின் தன் இரண்டாவது மகன் மொகலானவே அரசை ஆட்சி செய்வான் என தாதுசேனன் பிரகனப்படுத்தினான். காசியப்பனுக்கு அப்பிரகடனம் பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தது. தந்தைக்குப் பின்னர் நாட்டை ஆள வேண்டும் என்ற கனவோடு வாழ்ந்தவன் அவன். அதனால் தந்தையைக் கொலை செய்து, ஆட்சியைக் கைப்பற்ற திட்மிட்டான். 

ஒருமுறை காசியப்பன், தந்தை தாதுசேனனிடம் சென்று, “உன் செல்வத்தை எங்கு ஒளித்து வைத்திருக்கிறாய்?”, என்று கேட்ட போது, “கலாவெல” என்ற பிரமாண்டமான குளத்துக்கு அவனை அழைத்துச் சென்று குளத்தைக் காட்டி, “இது தான் என் சொத்து” என்றானாம் தாதுசேனன். கலாவெல, யோத எல போன்ற பதினெட்டுக் குளங்களை விவசாயத்துக்காக தாதுசேனன் கட்டுவித்தான்.

தாதுசேனனின் பிரதான தளபதியாக இருந்தவன் காசியப்பனின் தாயின் சகோதனான மிகாரா. இவன் தாதுசேனனின் மகளையும் மணந்து தாதுசேனனின் மருமகனும் கூட. மிகாரா தனது மனைவியை மிகவும் கொடுமைப்படுத்தி வந்தான். மகள் மேல் மிகுந்த பாசம் வைத்திருந்த தாதுசேனனால் மகளுக்கு நேர்ந்த கொடுமைகளைச் சகிக்க முடியவில்லை. மிகாரவின் நடவடிக்கைகளுக்குப் பாடம் புகட்ட எண்ணி மிகாரவின் தாயை எரித்துக் கொன்றான். இதனால் மேலும் கோபம் கொண்ட மிகாரா, தாதுசேனனைப் பழி தீர்க்கும் சந்தர்ப்பத்துக்காகக் காத்திருந்தான். 

அந்த வேளையில் காசியப்பன், தந்தை தாதுசேனனைக் கொல்ல எண்ணியது மிகாரவுக்கும் தனது வஞ்சத்தைத் தீர்க்க ஏதுவாக அமைந்தது. அதனால் தந்தையைக் கொலை செய்யக் காசியப்பனுக்கு உதவி புரிந்தான். தாதுசேனனின் உடலை சிறைச்சாலை சுவருக்குள் வைத்து பூசி மெழுகினான், மிகாரா. தாதுசேனனின் உடலை கலாவெல குளத்தின் அணைக்கட்டில் புதைத்தார்கள் என்றொரு கதையும் உண்டு. தந்தையைக் கொன்றதும் காசியப்பன் ஆட்சியைக் கைப்பற்றி ஆளத் தொடங்கினான். 

புத்த மதத்துக்கு எதிராக காசியப்பன் செயற்பட்டதால், அவனை மக்களும், புத்த பிக்குகளும் வெறுத்தனர். மக்களின் வெறுப்பிலிருந்து தன்னை மீட்க பல நல்ல காரியங்களை காசியப்பன் செய்தான். ஆனால் மக்களும் புத்த பிக்குகளும் அவன் செயல்களை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் காசியப்பன் மன உளைச்சலுக்கு ஆளானான். அதேநேரம் அவன் சகோதரன் மொகலானவாலும் தனக்கு ஆபத்து வரலாம் என்று எண்ணினான். 

பாதுகாப்பானதும் மனதுக்கு அமைதி தரக் கூடியதுமான ஒரு இடத்தில் பௌத்த நூல்களில் சொல்லப்பட்டது போல முகில்களைத் தழுவிச் செல்லும் ஒரு சொர்க்கபுரியை அமைக்கத் திட்டமிட்டான். அதற்கு அவன் தேர்ந்தெடுத்த இடம் தான் சிகிரியாக் குன்று.    

குன்றின் மேல் அவன், தான் வாழ்வதற்கு மிகுந்த பாதுகாப்பான ஒரு கோட்டையை அமைத்தான். அத்தோடு மட்டுமன்றி கண்ணுக்குக் குளிர்ச்சியாக அழகிய பூந்தோட்டங்களும், குளிப்பதற்கு நீர் தடாகங்களையும் தோற்றுவித்தான். குன்றத்தின் மேற்கு பக்கத்தில் அழகிய அரை நிர்வாணப் பெண்களின் பலநூற்றுக்கணக்கான சித்திரங்களை, இந்தியாவில் உள்ள அஜந்தா குகைச் சித்திரங்களைப் போன்று, ஓவியக் கலைஞர்களைக் கொண்டு வரைவித்தான். அப்பெண்கள் பற்றிய விளக்கமும், வரைந்த சித்திரக் கலைஞர் யார் போன்ற விளக்கங்களும் இப்போது இல்லை. 

காலப்போக்கில் அச்சித்திரங்களில் பல மழை, காற்று காரணங்களாலும், மனிதர்களின் நாச வேலைகளினாலும் அழிந்து போயின. இருந்தாலும் கூட அச்சித்திரங்களில் சில இன்றும் இலங்கையின் சரித்திர வரலாறு படைத்த ஓவியங்களாக கருதப்படுகின்றன.

அவ் ஓவியங்களில் காட்சியளிக்கும் பெண்கள்கள் அப்ஸரஸ்கள் எனவும், தாரா என்ற பெண் தெய்வம் எனவும் பல விதமான கதைகள் உலாவுகின்றன. அவ் இளம்பெண்கள் காசியப்பனின் அந்தப்புரத்து பெண்கள் என்றதொரு பேச்சும் உண்டு. புத்த பிக்குகளின் ஆதரவைப் பெறாத காசியப்பன், தன் கோபத்தை அவர்கள் மேல் காட்ட பெண்களை சித்திரமாக வரைந்தான் என்றும் கூறப்படுவதுண்டு. சித்திரத்தில் சில பிழைகள் இருக்கிறது என்பது சிலர் கருத்து. எது எப்படியானாலும் குப்தா சக்கரவர்த்தி காலத்தில் வரையப்பட்ட அஜந்தா குகைச் சித்தரங்களைப் போன்றவை சிகிரியா சித்திரங்கள். காசியப்பனுக்கு சித்திரக் கலையிலும் கவிதை புனைவதிலும் ஆர்வமுண்டு என்கிறது வரலாறு.

பதினான்கு வருடங்கள் சிகிரியா கோட்டையில் இருந்து காசியப்பன் ஆட்சி புரிந்தாலும் தனது தந்தையைக் கொலைசெய்த நினைவினால் பாதிக்கப்பட்டான். அவனது இராணுவத் தளபதி மிகாராவுக்கும் அவனுக்கும் இடையேலான உறவில் பாதிப்பு ஏற்பட்டது.  மிகாரா பெரிய விழாவொன்றை நடத்த விரும்ப, காசிப்பன் அதற்கு அனுமதி வழங்காததே அவர்களுக்கிடையேலான உறவு பாதிப்டையக் காரணம் என்கிறது வரலாறு. இதனால் காசியப்பன் மீது கோபம் கொண்ட மிகாரா, மறைமுகமாக காசியப்பனின் சகோதரன் மொகலானவுக்கு உதவிசெய்தான். அவ்வேளை மொகலானா, காசிப்பனுக்கு எதிராகப் போர்புரிய தென் இந்தியாவில் இருந்தபடி படை ஒன்றைத் திரட்டிக் கொண்டிருந்தான்.

கி.பி 495 இல் காசிப்பனுக்கும், தென் இந்தியாவில் இருந்து படையோடு திரும்பிய அவன் சகோதரன் மொகலானவுக்கும் இடையே போர் நடந்தது. அந்தப்போரில் காசியப்பனின் இராணுவத் தளபதி மிகாரா மறைமுகமாக மொகலானவுக்கு ஆதரவு வழங்கினான். போரில், காசியப்பன் தனது யானை மேல் ஏறிச்சென்ற போது ஒரு சதுப்பு நிலத்தை எதிர்கொள்ள நேர்ந்தது. அதனால் போர் புரிய உகந்த இடமொன்றை காசிப்பன் தேடித் திரும்பியபோது அவனது படை வீரர்கள் மன்னன் பயத்தால் திரும்புகிறான் என நினைத்து சிதறி ஓட ஆரம்பித்தார்கள். 

இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மொகலான, காசியப்பனைத் தாக்கினான். தனது தம்பியிடம் தோல்வியை ஒப்புக்கொண்டால் தான் கைதாக வேண்டும் என உணர்ந்து கொண்ட, காசியப்பன் கத்தியால் தன் கழுத்தை வெட்டித் தற்கொலை செய்து கொண்டான். காசியப்பனின் உடல் சிகிரியாவுக்கு அருகே உள்ள பிதுரங்கல குன்றில் புதைக்கப்பட்டது என்கிறது வரலாறு.

போரில் வெற்றி பெற்ற மொகலான கி.பி 497 இலிருந்து 515 ஆம் ஆண்டு வரை சிகிரியாவில் இருந்து தலைநகரை அனுராதபுரத்துக்கு மாற்றி ஆட்சி புரிந்தான். விதவையான காசியப்பனின் மனைவியைத் திருமணம் செய்து கொண்டான். பின்னர் இவனது மகன் குமார தாதுசேனனினால் இவனது ஆட்சி முறியடிக்கப்பட்டது. 

பதவி மோகம், அதிகார ஆக்கிரமிப்புகள் என்பவை அரச காலத்தில் சாதாரணமாக நடந்தேறிய விடயம் தான். சிகிரியா விடயத்தில் இந்த அழகிய கோட்டை உதயமாக இந்தப் பதவிப் பிரச்சினை காரணமாக இருந்திருந்தாலும் இன்று இலங்கைக்குப் பேரும் புகழையும் தேடித் தரும் பாரம்பரியச் சொத்தாக விளங்குகின்றது. 

எப்போது சிகிரியா போனாலும் பலதரப்பட்ட வெளிநாட்டவர்களை அங்கே காணக் கூடியதாக இருக்கும். சார்க் அமைப்பைச் சேர்ந்த நாட்டவர்களுக்கு 15 அமெரிக்க டொலர்களும் மற்றைய நாட்டவர்களுக்கு 30 அமெரிக்க டொலர்களும் உள்ளூர் மக்களுக்கு இலங்கை ரூபா நூறும் நுழைவுக் கட்டணமாக அறவிடப்படுகின்றது. குன்றின் உச்சியில் சில நேரங்களில் குளவிகளின் தாக்குதல்கள் ஏற்படவும் வாய்ப்புண்டு என்பதால் சுற்றுலாப் பிரயாணிகள் மிகக் கவனமாக இருக்க வேண்டும். அத்தோடு அங்கே சுவர்களில் எழுதுவது தண்டனைக்குரிய குற்றம் ஆகும். 

அதிக உயரமற்ற குன்றானாலும் குடிதண்ணீரோடு ஏற ஆரம்பிப்பது சாலச் சிறந்தது. காலை நேரத்தில் சென்றால் ஓரளவுக்குக் கூட்டத்தைத் தவிர்க்கலாம். குன்றின் அடிவாரத்தில் காணப்படும் சிறு உணவுச்சாலைகளும் கைவினை, கலைப் பொருட்கள், ஞாபகார்த்த சின்னங்கள் விற்கும் கடைகளில் இலங்கையைப் பிரதிபலிக்கும் பல விதமான பொருட்களை வாங்கலாம். பல தரப்பட்ட விலைகளில் காணப்படும் இப்பொருட்கள் உங்கள் பயணத்தை நினைவூட்ட ஏதுவாக இருக்கும். 

இலங்கையில் வசிப்பவர்கள் என்றாலும் சரி, இலங்கைக்குச் செல்பவர்களானாலும் சரி தவற விடாது கண்டுகளிக்க வேண்டிய ஒரு இடம் சிகிரியா. எனது அனுபவங்களையும் நான் அறிந்த வரலாற்றையும் உங்களோடு பகிர்ந்து கொண்டுள்ளேன் மக்கா. எனது இந்த சிகிரியா பயணத்தின் முடிவு உங்கள் பயணத்தின் ஆரம்பமாக இருக்கும் என்று நம்புகிறேன். 

ஏனெனில் பயணங்கள் முடிவதில்லை!

நன்றி.
என்றும் அன்புடன்

யாழ் சத்யா.                    

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் – 28மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் – 28

28 அந்த உணவுத் திருவிழா வெற்றிகரமாக முடிந்தது. மதுரா டிவி, வைகை டிவி முதலிவை போட்டி போட்டுக் கொண்டு அதைப் பற்றி பேச, பஹரிகா ஒரே நாளில் ஏகப்பட்ட பேரைச் சென்றடைந்தது. அதிதிக்கும் இது ஒரு நல்ல விளம்பரமாக இருந்தது என்றால்