எங்கள் வியாபாரம் காய்கனி கடை. அழியும் பொருள் மற்றும் அதிகாலையில் தொடங்க வேண்டியதும், விடுமுறை எடுக்க முடியா தொழில். என் அப்பா உடன் எங்கும் சுற்றுலா சென்றது இல்லை. எங்க ஐயம்மா இருக்கும் போது இருக்கண்குடி மற்றும் ஏரல் கோவிலுக்கு என் அப்பா உடன் சென்றது. முதலில் நாங்கள் சென்று விடுவோம். மதிய உணவுக்கு அதாவது எங்களை திருப்பி அழைக்க வந்து கலந்து கொள்வார்கள்.
இருக்கண்குடி சென்ற அனுபத்தை பகிர விரும்புகிறேன். அன்று ஆறு நிறைய தண்ணீர் ஓடிய காலம். அழகாக தண்ணீரில் துழாவி குளிப்போம். அத்தை, சித்தப்பா வீடுகள் என ஏழு குடும்பங்களும் போவோம். சோலையப்பன், வெங்கடு, சீனி, தங்கமாரி, செல்வி, தம்பி பாப்பா எனும் நான். எல்லோரையும்விட மூத்தவள் நான். அரட்டி உருட்டி எல்லோரோடும் சுற்றும் கெத்து இருக்கே…என்ன ஒரு சுகம். மணக்க மணக்க முந்தின இரவே உணவு தயாராகும். பொதுவில் சமைக்கும் உணவு சுவை எப்பவுமே கொஞ்சம் தூக்கலே. இட்லி & தக்காளி சட்னி காலை உணவாகவும்,
நிறைய நல்லெண்ணெய் ஊற்றி கிண்டிய சுவையான புளியோதரை. புளிப்பு பார்க்கிறேன் என சுற்றி உட்கார்ந்து போட்டி போட்டு கைகளில் வாங்கி உண்போம். சுடச்சுட, ஊதி ஊதி சாப்பிடும் சுகம் தேங்காய் மட்டும் வைத்து உரலில் ஆட்டிய சட்னி என உணவோடு போய் தங்கிடுவோம்.பசி வரும் வரை குளிக்க, பின் வயிறு முட்ட உண்ண .. மாமா, சித்தப்பாக்கள் கைகளில் பொய் நீச்சல் அடித்து தண்ணீரை விட்டு வெளியே வர விரும்பா மனம் என அழகாக இயற்கையோடு வளர்ந்த காலம். குடிக்க பாட்டில் தண்ணீர் இல்ல. ஆற்றின் அருகில் நாங்களே சுயமாக ஊற்று தோண்டி குடிக்க தண்ணீர் எடுப்போம். ஒவ்வொரு முறையும் புதிதாக ஊற்று தோண்டி தண்ணீர் எடுப்போம். அங்கே அருகில் நம்மைப்போல் தங்கும் சிறுவர்களுடன் கூட்டணி என ..அழகான நினைவுகள்.
இன்று தண்ணீர் ஓடியே தடமேயின்றி மணலும் இல்லாமல் காய்ந்து…..ஆற்றை தொலைத்து ….நினைக்கவே மனம் வலிக்குது. 9௦ குழந்தைகள் மிக கொடுத்து வைத்தவர்களே. இயற்கையோடு வாழும் பேறு பெற்றவர்கள். என்ன சுயநல வாதிகளும் கூட தாங்கள் மட்டும் அனுபவித்து, காத்து அடுத்த தலைமுறைக்கு கடத்தாத பொறுப்பற்றவர்களும் கூட.
எங்கள் அப்பா வரவும், சின்னச்சின்ன விளையாட்டு சாமான்கள் வாங்கி மகிழ்வுடன் திரும்புவோம். குறிப்பிட்ட நேரம் மட்டுமே பேருந்து வரும். ஓடிபோய் அதில் சிறுவர்கள் ஏறி இடம் பிடிப்போம். ஏறி ஆட்களை ஏலம் போட்டு, ஏலே எல்லோரும் ஏறிட்டிங்களா, வரிசையாக பேரை கத்தி ஒரே களபராமாக இருக்கும். சில சமயம் இடம் கிடைக்காவிட்டால்..மூச்சு முட்ட கூட்டத்தில் நின்று, பெரியவர்கள் அணைத்து நெருக்கடியில் அரண் அமைத்து காப்பது சுகம்.
அந்த நெரிசலிலும் சாத்தூர் வெள்ளரிப்பிஞ்சு பை நிறைய வாங்கி, மனம் நிறைய வீடு திரும்புவோம். அடுத்து போகும் நாளை எண்ணிக் காத்திருப்போம்.
இன்று தனிக் குடும்பங்களாக இயந்திரத்துடன் இயந்திர வாழ்க்கை…ம்ம்ம்ம்ம்ம்.
அது ஒரு அழகிய நிலாக்காலம் ….
- பொன் செல்லம்.