Tamil Madhura புறநானூற்றுக் கதைகள் அடிப்படை ஒன்றுதான் – புறநானூற்றுச் சிறுகதை

அடிப்படை ஒன்றுதான் – புறநானூற்றுச் சிறுகதை

 

ரு சமயம் சங்கப் புலவர்கள் யாவரும் கூடியிருந்த அவையில் பாண்டிய மன்னன் புலவர்களை நோக்கி ஒரு ஐயத்தை வெளியிட்டான். ”குபேரன் முதல் கோவணாண்டி வரை வாழ்க்கைக் கயிற்றில் ஒரே நூலில் கோக்கப்பட்டிருந்தும் அவர்களுக்குள் தகுதியினால் வேறுபாடு ஏன்? அடிப்படையில் ஒற்றுமை என்பதே கிடையாதோ? 

பாண்டியனுடைய இந்த வினாவே அர்த்தமற்றதாகப்பட்டது, புலவர்களில் அநேகருக்கு என்ன நோக்கத்தோடு இதை அவன் கேட்கிறான்?’ என்பதும் அவர்களுக்கு விளங்க வில்லை. அவர்கள் திகைத்துப் பேசாமல் இருந்துவிட்டார்கள். நக்கீரரால் மட்டும் அப்படி இருக்க முடியவில்லை . அவர் விடை கூறினார்: 

“மன்னர் மன்னவா! ஜீவனம் என்ற ஒரே வரிசையில் உலக நூலில் உயிர் முத்துக்கள் பரம்பொருளால் தொடுக்கப் பெற்றிருக்கின்றன. அவைகளில் ஏற்றத்தாழ்வு என்பது காணும் கண்களாலே ஏற்படும் ஒரு வகை மயக்க உணர்வே ஒழிய, உண்மையாக நோக்கினால் வாழ்வின் அடிப்படையில் ஒருமை தான் உலகெங்கும் நிலவுகிறது! 

‘புலவர் பெருந்தகையே! உங்கள் விடை எனக்கு மிகவும் மகிழ்ச்சி ஊட்டுகின்றது. ஆனால் வாழ்க்கை அடிப்படையின் அந்த ஒருமைப்பாட்டை எனக்கு நீங்களே விளக்கிக் காட்டினீர் களாயின் நலமாயிருக்கும் என்று எண்ணுகின்றேன்.” 

”நல்லது அரசே! என்னால் நிரூபித்துக் காட்டுவதற்கு முடியும். ஆனால் அதற்குத் தாங்கள் என்னுடைய நிபந்தனை ஒன்றையும் அங்கீகரித்துக் கொள்ள வேண்டி நேரிடுகிறது” 

“என்ன நிபந்தனை? கூசாமல் கூறுங்கள் நக்கீரரே!” 

”இந்த அரியணை, இந்த அரண்மனை, வனப்பு வடிவமான இந்த மதுரை மாநகரம் எல்லாவற்றையும் ஒரே ஒரு நாள் நீங்கள் துறந்து என்னோடு புறப்பட வேண்டும் அரசே!” 

‘நக்கீரரே! நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்? எனக்கு நீங்கள் சொல்வது ஒன்றும் விளங்கவில்லையே? எங்கே புறப்பட்ட வேண்டும் நான்? எதற்காகப் புறப்பட வேண்டும்?” 

”பொதியமலைக் காடுகளுக்கு என்னோடு புறப்பட வேண்டும் அரசே! வாழ்க்கையின் அடிப்படை ஒருமையைத் தெரிந்து கொள்வதற்காக 

வாழ்க்கையின் அடிப்படை ஒருமை என்பது ஏதாவது ஒரு மூலிகையா என்ன, பொதியமலைக் காட்டில் அது கிடைப்பதற்கு? 

 

பொதியமலைக் காட்டுக்கு ஒரு நாள் உம்மோடு நான் வந்தால் அது விளங்கிவிடுமா?‘ 

உடலுக்கு மூலிகை மட்டும் மலைகளிலே கிடைக்கவில்லை அரசே! அகண்டாகாரமான இந்தப் பேருலகத்தில் வாழ்வுஎன்ற ஒரு தத்துவப்புதிருக்கு வேண்டிய மூலிகைகள் இரண்டே இரண்டு இடங்களில்தான் கிடைக்கின்றன அரசே! ஒன்று மலை மற்றொன்று கடல்.” 

”வீண் விவாதம் எதற்கு நக்கீரரே? ஒரு நாள் என்ன? ஒரு வாரம் ஆனாலும் உம்முடன் பொதியமலைக் காடுகளில் சுற்று வதற்கு நான் தயார்! தத்துவம் எப்படியாவது விளங்கினால் சரி” 

அரசவையில் இந்த விவாதம் நடந்து முடிந்த இரண்டு நாட்களுக்குப் பின் எளிய உடையும், தோற்றமும் கொண்டு நக்கீரரைப் பின்பற்றிப் பொதியமலைக் காடுகளில் சுற்றிக் கொண்டிருந்தான் பாண்டியன் உக்கிரப் பெருவழுதி. 

காட்டு வழியில் நடந்து சென்று கொண்டே இருக்கும்போது திடீரென்று நக்கீரர் பாண்டியனுக்கு ஒரு மரத்தடியைச் சுட்டிக் காட்டினார். அவன் பார்த்தான். ஆச்சரியத்துக்குரிய எந்தக் காட்சியும் அங்கே மரத்தடியில் தென்படவில்லை. காட்டுப் பகுதிகளில் சர்வ சாதாரணமாக நடக்கக்கூடிய ஒன்றைத்தான் அவன் அங்கே கண்டான். 

குரூரமான தோற்றத்தையுடைய ஒரு வேடன் அங்கே மரத்தடியில் வில்லும் கையுமாகக் காத்துக் கொண்டிருந்தான். அவன் கண்கள் சுற்றும் முற்றும் வேட்டைக்குரிய மிருகங்கள் எவையேனும் வருகின்றனவா என்று சுழன்று சுழன்று துழாவிக் கொண்டிருந்தன. பறவைகளைப் பிடிப்பதற்காகப் பக்கத்திலே அவனே வலையும் விரித்திருந்தான். ஆனால் வலையில் அன்று அதுவரை ஒரு பறவைகூடச் சிக்கியதாகத் தெரியவில்லை . 

”அது சரி பார்த்தாகிவிட்டது. இந்த வேடன் மரத்தடியில் வில்லோடு நின்று கொண்டிருப்பதிலிருந்து என்ன தத்துவம் கிடைக்கிறது நக்கீரரே?” பாண்டியன் கேட்டான். 

நக்கீரர் அவனுக்கு மறுமொழி சொல்லவில்லை; ‘பொறு! பின்பு சொல்லுகிறேன்’ என்பதற்கு அறிகுறியாகக் கையால் ஜாடை காட்டிவிட்டு அவனையும் அழைத்துக்கொண்டு அந்த வேடனை நெருங்கினார். 

“ஏன் அப்பா, இப்படி வில்லும் கையுமாக இங்கேயே காத்திருக்கிறாய்?” நக்கீரர் வேடனை நோக்கிக் கேட்டார். 

”அதையேன் கேட்கிறீர்கள் ஐயா? நேற்று நடு இரவிலிருந்து காத்துக்கிடக்கிறேன். உறக்கமில்லை. உணவில்லை. இதுவரை ஒரு மிருகம் கூட வேட்டைக்கு அகப்படவில்லை. போங்கள்!” 

வேடனின் இந்த மறுமொழியைக் கேட்டு நக்கீரர் பாண்டியன் உக்கிரப் பெருவழுதியைப் பார்த்து ஒரு இளநகை புரிந்தார். ஆனால் நக்கீரர் எதற்காகத் தன்னை நோக்கி அப்படி நகைத்தார் என்பதன் விளக்கமே பாண்டியனுக்கு அப்போது 

தெளிவாகவில்லை. 

“ஆமாம், நீ ஏன் காட்டிலுள்ள மிருகங்களை வேட்டையாடு கின்றாய்? வேறு வகையில் நீ வாழமுடியாதா?” நக்கீரருடைய இந்த இரண்டாம் கேள்வி அந்த வேடனைச் சற்றே திடுக்கிடும்படியாகச் செய்தது. ஆயினும் சமாளித்துக்கொண்டு விடை கூறினான் அவன். 

”ஐயா! உண்டு, உடுத்து வாழ வேண்டிய மனிதன் தானே நானும் மிருகங்களை வேட்டையாடுவது இழிதொழில்தான். ஆனால், நான் இந்தத் தொழிலை விட்டுவிட்டால் உண்ண இறைச்சிக்கும், உடுக்கத் தோலுக்கும் எங்கே போவேன்? கல்வியறிவற்ற காட்டுப் பயலான எனக்கு வேறு எந்தத் தொழிலும் தெரியாதே ஐயா!” 

வேடன் இந்த விடையைக்கூறி முடித்ததும் நக்கீரர் மீண்டும் பாண்டியனை நோக்கிப் பொருள் பொதிந்த சிரிப்பு ஒன்றை 

 

வெளியிட்டார். பாண்டியனுக்கோ அதன் பொருள் இப்போதும் விளங்கவில்லை. ‘தன் சிரிப்பின் பொருளை உக்கிரப் பெருவழுதி இன்னும் சரியாக உணர்ந்து கொள்ளவில்லை என்பதை அவனுடைய முகக் குறிப்பிலிருந்தே நக்கீரர் அனுமானித்துக் கொண்டார். 

”அரசே! போகலாமா?நக்கீரர் பாண்டியன் காதருகே மெல்லிய குரலில் கேட்டார். இருவரும் அந்த வேடனிடம் விடை பெற்றுக் கொண்டு புறப்பட்டனர். சிறிது தொலைவு வந்ததும், ”இந்த வேடன் மறுமொழி கூறிய போதெல்லாம் என்னைப் பார்த்து நகை புரிந்தீர்களே, அதற்கு அர்த்தமென்ன?” பாண்டியன் கேட்டான்

அதற்கு அர்த்தம் இருக்கத்தான் இருக்கிறது! அந்த அர்த்தத்தைச் சொல்லுவதற்கு முன்னால் உன்னிடமும் சில கேள்விகளை நான் கேட்க வேண்டியிருக்கிறது. தயவு செய்து சினமோ ஆத்திரமோ அடைந்துவிடாமல் தவறாகவும் புரிந்து கொள்ளாமல் என்னுடைய அந்தக் கேள்விகளுக்கு அமைதியாக நீ பதில் கூற வேண்டும்.” 

சரி நக்கீரரே! கேளுங்கள், பதில் கூறுகிறேன்.’‘ 

அரசே! உங்களுக்கும் இந்த வேடனுக்கும் ஏதாவது ஒற்றுமையைக் காண்கின்றீர்களா? இல்லையா?’ 

“என்ன நக்கீரரே! இப்படிக் கேட்கிறீர்கள்? நான் பாண்டி நாட்டுப் பேரரசன்; இவன் வெறும் காட்டு வேடன், படிப்பறி 

வற்றவன்; நாகரிகமற்றவன். இவனுக்கும் எனக்கும் என்ன ஒற்றுமை இருக்க முடியும்? நீங்கள் என்னைக் கேள்வி கேட்கிறீர்களா? அல்லது கேலி செய்கிறீர்களா?” 

– ”நீங்களும் ஒரு மனிதன் ! நானும் ஒரு மனிதன்! இந்த வேடனும் ஒரு மனிதன் தான்; இந்த ஓர் ஒற்றுமையையாவது நீங்கள் ஒப்புக் கொள்ள முடியுமா இல்லையா?” 

“சரி! இவனையும் ஒரு மனிதன் என்றே வைத்துக் கொள்வோம்! அப்புறம். மேலே கூறுங்கள்.” 

 

“பாண்டிய மன்னா! உனக்கும் எனக்கும் இந்த வேடனுக்கும் இன்னும் எண்ணற்ற எல்லா மனிதர்களுக்கும் உயிர் வாழ உணவும், மானத்தை மறைக்கத் துணியும் என்ற இந்த இரண்டு தேவையும் அவசியம்தானே? இதில் ஏதும் வேற்றுமை கற்பிக்க முடியாது அல்லவா?” 

ஆமாம்! உணவு, உடை இவை பொதுவானவைதான்? மேலே சொல்லுங்கள்!‘ 

மன்னராகிப் பிறருக்குச் சிறிதும் உரிமையின்றிக் கடல் சூழ்ந்த ஒரு நாடு முழுவதையுமே ஒரு குடைக்கீழ் ஆளும் பேரரசன் நீ! ஆனால் எனக்கும் இந்த வேடனுக்கும் உனக்கும் இறைவன் அளித்திருக்கும் கைகால் முதலிய அவயவங்கள் கூடக்குறையவாஇருக்கின்றன!‘ 

இல்லை வேடனுக்கும் உங்களுக்கும் அரசனாகிய எனக்கும் – ஏன் எல்லோருக்குமே இறைவன் கொடுத்த உடல் ஒரே 

அமைப்புள்ள உடல்தான்.” 

‘அரசே செல்வத்தாலும் பதவியாலும், உங்களுக்கும் இந்த வேடனுக்கும் வேறுபாடு இருக்கலாம்! உனக்குச் செல்வத்தைக் கொடுத்த இறைவனும், வேடனுக்கும் உனக்கும் வேற்றுமை கற்பித்துக் காட்ட ஒரு கருவியாக அதை அளித்தானில்லை. பிறருக்கு ஈதல், அறம் செய்தல் முதலிய செயல்களுக்காகவே அந்தச் செல்வத்தை உங்களிடம் அளித்துள்ளான் இறைவன். அதை நீங்களாகவே அனுபவித்து விடவும் முடியாது. அனுபவித்தால் அது உங்களிடம் நிலைக்கவும் நிலைக்காது. விரைவில் தப்பிச் சென்றுவிடும். எனவே கடல் சூழ்ந்த உலகத்தைத் தன் ஒரே வெண் கொற்றக்குடைக்கீழ், பிறரெவர்க்கும் சொந்தமின்றி ஆளும் ஏகச்சக்ராதிபதிக்கும், இரவும் பகலும் தூங்காமல் வில்லால் வயிற்றுக்கு உணவும் உடலுக்கு உடையும் தேடும் படிப்பறிவில்லாத இந்த வேடனுக்கும் வாழ்க்கை அடிப்படை ஒன்றுதான்!” நக்கீரர் கூறி நிறுத்தினார். 

பாண்டியன் உக்கிரப் பெருவழுதி நக்கீரரைக் கைகூப்பி வணங்கினான். ”பாவலர் திலகமே! உண்மை புரிந்துவிட்டது. 

 

அடிப்படை ஒன்றேதான்” என்ற சொற்கள் பாண்டியனிடமிருந்து வெளிவந்தன. 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

வேண்டாம் போர் – புறநானூற்றுச் சிறுகதைவேண்டாம் போர் – புறநானூற்றுச் சிறுகதை

  சோழன் நலங்கிள்ளியும் நெடுங்கிள்ளியும் உடன் பிறந்த உறவுமுறை உடையவர்கள்தாம். ஆனாலும் பகைமை, பொறாமை என்று ஏற்பட்டுவிட்டால் பின்பு உறவையும் உடன் பிறப்பையும் பார்த்துக் கொண்டு இருக்கக் கூடியவர்கள் யார்?  பல காரணங்களால் இவர்கள் இருவருக்கும் இடையே இருந்த சுமுகமான நிலையும்

எவனோ ஒரு வேடன்! – புறநானூற்றுச் சிறுகதைஎவனோ ஒரு வேடன்! – புறநானூற்றுச் சிறுகதை

  கொல்லி மலையின் அடிவாரம். அது வளம் நிறைந்த பகுதி. புலவர் வன்பரணரும் அவரோடு வந்திருந்த இன்னிசை வாணர்களாகிய பாணர்களும் வழிநடைக் களைப்புத் தீர அங்கே தங்கியிருந்தனர். அன்றைய , பகற்பொழுதை அங்கே கழித்தாக வேண்டும்.  கொல்லி மலையில் மிருகங்கள் அதிகம்.

இரண்டு பகைகள் – புறநானூற்றுச் சிறுகதைஇரண்டு பகைகள் – புறநானூற்றுச் சிறுகதை

  அதியமானுக்கு ஒரு புதல்வன் இருந்தான். வாலிபப் பருவத்தினனாகிய அப்புதல்வனுக்குப் பொகுட்டெழினி என்று பெயர். நல்ல வளர்ச்சியும் உடற்கட்டும் பார்த்தவர்களை உடனே கவரும் அழகான தோற்றமும் இவனுக்குப் பொருந்தியிருந்தன.  அந்தத் தோற்றத்தை வெறும் அழகான தோற்றம் என்று மட்டும் சொல்லிவிட முடியாது.