யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 15

கனவு – 15

 

இந்த உலகத்தில் கடைமை தவறாதவன் யார் என்று கேட்டால் அது காலம் ஒன்றே. மழை வந்தால் என்ன? வெயில் அடித்தால் என்ன? பனி பொழிந்தால் என்ன? சுனாமியே வந்து சுருட்டிப் போட்டால் என்ன? எதைப் பற்றியும் கவலைப்படாமல் காலம் தன் பாட்டில் அதன் வேலையைச் செய்யும். ஆம்! நாட்கள் அதுபாட்டில் நிற்காது ஓடிக் கொண்டே இருந்தன.  

 

முகாமையாளர் பற்றி அன்றைக்கு வைஷாலி சஞ்சயனிடம் தெரிவித்த நாளிலிருந்து தினமும் தவறாது வேலை முடிய அவனே வைஷாலியை வீட்டுக்கு அழைத்துச் செல்வான். இதைப் பொறுக்க மாட்டாத முகாமையாளர் ஏதாவது இடையூறுகள் கொடுத்துக் கொண்டே தான் இருந்தார். சில நாட்கள் மிகவும் தாமதமாகச் செல்லக் கூடியதாக வேலை கொடுத்தார். அதனால் ஆறு மணிக்கே வங்கிக்கு அவளை அழைத்து வரச் செல்லும் சஞ்சயன் நீண்ட நேரம் காத்துக் கொண்டிருக்க வேண்டி ஏற்படும்.

 

அவன் உள்ளே வந்து அமருவது பிடிக்காமல் அதற்கும் கடைசியில் தடை போட்டுப் பார்த்தார். அன்றும் சஞ்சயன் வழக்கம் போல ஆறு மணிக்கே வங்கிக்குச் செல்ல, வாசலிலே தடுத்த காவலாளி சஞ்சயனைப் பார்த்துப் பணிவுடன் கூறினான்.

 

“அண்ணா…! ரொம்ப ஸொரி அண்ணா… மனேஜர் ஃபாங் கஸ்டமர் சேவிஸ் நேரம் முடிய வெளி ஆட்களை உள்ளே விட வேணாம் என்று சொல்லுறார். குறை நினைக்காதையுங்கோ…”

 

“ஓகேடா… இதில குறை நினைக்க என்ன இருக்கு…? நான் வெளியவே வெய்ட் பண்ணுறேன்…”

 

கூறியவன் வங்கிக்கு வெளியே மோட்டார் சைக்கிளில் அமர்ந்து கைத்தொலைபேசியில் கேம் விளையாட ஆரம்பித்தான். வேலையை முடித்துக் கொண்டு அன்று கொஞ்சம் சீக்கிரமாகவே வைஷாலி வந்து விட்டாள். சஞ்சயன் மோட்டார் சைக்கிளை உயிர்ப்பிக்க அதில் ஏறி அமர்ந்தவள்,

 

“நேரா வீட்டயே போவம் சஞ்சு… அதுல்யாவும் நைட் நிப்பாள். வீட்டயே சமைச்சுச் சாப்பிடுவம்…”

 

அவனும் சம்மதமாய் தலையசைத்து விட்டு, வைஷாலி வீட்டை நோக்கி வண்டியைச் செலுத்தினான். இதுவும் இப்போது அடிக்கடி நடப்பது தான். வைஷாலிக்கு வேலை முடிய மிகத் தாமதமாகுமிடத்து இருவரும் அருகிலேயே எங்கேயாவது உணவகத்தில் சாப்பிட்டு விட்டுச் செல்வார்கள். நேரத்தோடு வீடு திரும்பினால் வைஷாலி சமைக்க சஞ்சயன் அவள் வீட்டிலேயே சாப்பிட்டு விட்டுத் தனது வீடு திரும்புவான்.

 

பாவம் அந்த முகாமையாளர். அவர் செய்யும் ஈனத்தனங்களால் இவர்கள் அன்பு மேன்மேலும் புதுப்பிக்கப்படுவதையும் மேலும் இறுக்கமாகுவதையும் அறிந்தால் அவர் என்ன செய்வாரோ?

 

அன்று அதுல்யாவும் வீட்டில் இருந்தாள். இவர்கள் இருவரும் சென்றதும் தேநீர் போட்டு எடுத்து வர, சஞ்சயன் தொலைக்காட்சியை உயிர்ப்பித்து விட்டு நன்றியோடு தேநீரை வாங்கிப் பருகினான்.

 

“டொக்டர்…! உங்கட தேத்தண்ணிக்காவே ஓடி வந்தனான். முயல்குட்டியும் ஒரு தேத்தண்ணி போடுவாள் பாருங்கோ… மாட்டுக்கு வைக்கிற களனித் தண்ணி போல…”

 

அப்போது முகம் கழுவி விட்டு உடை மாற்றி வந்த வைஷாலியின் காதில் சஞ்சயன் சொன்னது விழுந்து விட,

 

“டேய் பக்கி! இப்ப உனக்குப் பிடிச்ச கணவாய் கறி தான் வைக்கப் போறன்… உனக்கு வேணுமோ…? வேண்டாமோ…?”

 

“ஹி… ஹி… ஹி… நான் உன்னைச் சொல்லுவனா வைஷூ… நீ போய் கறியை வை டார்லிங்…”

 

“ஹூம்…! அந்தப் பயம் இருக்கட்டும்… பாரன் ஆளை… வாய்க்கு ருசியாகச் சமைச்சுத் தாறன் தானே… ஏதோ தேத்தண்ணி மட்டும் நல்லா வருது இல்லை… எனக்குப் பசுப்பாலில ஊத்திப் பழக்கம் இல்லை… அதுக்கு ஓவராத்தான் நக்கல் அடிச்சிட்டு இருக்கிறாய்… மவனே…! உதை வாங்குவாய்… இனி ஒரு தரம் குறை சொன்னியோ…”

 

வைஷாலி ஒரு குடுமிப் பிடிச் சண்டைக்குத் தயாராவதைப் பார்த்த அதுல்யா,

 

“சஞ்சு சும்மா விளையாட்டுக்குச் சொன்னால் நீ வேற… இதுகள் ரெண்டுக்கும் இடையில மாட்டுப்பட்டு நான் படும்பாடு இருக்கே… ஆண்டவரே… என்னைக் காப்பாற்றும்…”

 

கூறியவள் வைஷாலியின் கையில் தேநீரை வைத்தாள்.

 

“முதல்ல இதைக் குடி… அப்புறம் சமைக்கலாம். நான் சோறு போட்டிட்டன். கறி மட்டும் வச்சால் சரி… கணவாய் எல்லாம் கிளீன் பண்ணி வெட்டி வைச்சிட்டன். பச்சை மிளகாய், வெங்காயம் எல்லாம் வெட்டி வைச்சிருக்கிறன். நீ கறி வைச்சால் தான் டேஸ்ட்டாக இருக்கும் வைஷூ… அதுதான் நான் வைக்கல…”

 

“ஓகே அதுல்யா…”

 

என்றவள் சஞ்சயனை முறைத்து விட்டுத் தேநீரைப் பருகியவள் சமையலை ஆரம்பித்தாள். கறி வைத்ததும் சுடச்சுட ஒரு பிடி பிடித்து விட்டு சஞ்சயன் விடை பெற்றான்.

 

“நாளைக்கு ஒரு பத்து மணி போல வாறன் என்ன? டொக்டர் நீங்களும் சமந்தவும் வாற என்றால் ப்ரெண்டிட காரை எடுத்து வருவம் என்று பார்த்தன். நீங்கள் காய் வெட்டிட்டியளே…”

 

“ஸொரி சஞ்சு… சமந்தட பேரன்ட்ஸ்ஸ போய் மீட் பண்ணப் போறம். அவைய எங்கட வீட்ட போய் அப்பாவோட கல்யாண விசயம் கதைக்கச் சொல்லலாம் என்று இருக்கிறம். இன்னும் எவ்வளவு காலத்துக்குத் தான் தள்ளிப் போடுறது?”

 

“அதுவும் சரி தான் டொக்டர். குட் லக்… எல்லாம் நல்ல படியாகக் கல்யாணம் நடக்கும். யோசிக்காதையுங்கோ… அப்ப நீ ரெடியா இரு வைஷூ… சரி… நான் போய்ட்டு வாறன். ரெண்டு பேரும் வடிவாக் கதவைப் பூட்டிக் கொண்டு படுங்கோ… குட் நைட்…”

 

கூறி விட்டு மோட்டார் சைக்கிளை உதைத்தான். அவன் சென்றதும் தோழிகள் இருவரும் பேசிக் கொண்டிருந்து விட்டுத் தூங்கச் சென்றனர். அடுத்த நாள் காலையில் அதுல்யா தனது காதலனுடன் புறப்பட்டுச் செல்ல, வைஷாலி ஆறுதலாகவே எழுந்து தயாராகிக் காத்திருந்தாள்.

 

சஞ்சயன் வர இருவரும் நுவரேலியா மாவட்டத்தில் இருந்த அம்பேவளை பசு மாட்டுப் பண்ணையைச் சென்றடைந்தார்கள். அம்பேவளை “லிட்டில் நியூசிலாந்து” என்று அழைக்கப்படும் ஒரு பசுமையான குளுகுளு நகரம். இலங்கையில் அம்பேவளை பால் உற்பத்திப் பொருட்கள் மிகப் பிரசித்தி பெற்றவை.

 

இப்போதெல்லாம் வைஷாலியும் சஞ்சயனும் வார இறுதிகளில் எங்காவது வெளியே சுற்றுவதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தனர். ஊரை விட்டு ஒதுங்கி இருந்தமையாலோ என்னவோ, வைஷாலியும் தனது கூட்டை விட்டு வெளிவந்தவளாய் வாழ்க்கையை அதன் போக்கில் ரசித்து வாழப் பழகிக் கொண்டிருந்தாள். அவ்வாறு அன்று அவர்கள் வந்த இடம் தான் இந்த பால் பண்ணை.

 

மலையகத்தில் எந்தப் பக்கம் திரும்பினாலும் கண்களுக்கு விருந்து தான். இருந்தாலும் அம்பேவளையின் சிறப்புக்கு முக்கிய காரணம் அங்கே பரந்து விரிந்து காணப்படும் புல்வெளிகள் தான். தேயிலைத் தோட்டங்கள் இருந்தாலும் பச்சை நிற வெல்வெட் கம்பளம் விரித்தது போல பசுமையாகக் காட்சியளிக்கும் இந்த புல்வெளிகளின் அழகு அதைப் பார்த்து அனுபவித்தவர்களால்தான் புரிந்து கொள்ள முடியும். அப்படியொரு மன அமைதியை அளிக்கக் கூடிய பேரழகு அது.

 

பெரியதொரு புல்வெளியை அடுத்துத் தான் பண்ணை இருந்தது. பசு மாடுகள் பெரிய மடியோடு கூட்டம் கூட்டமாக மேய்ந்து கொண்டிருந்த காட்சியைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போலிருந்தது. பசுக்களின் ஒரு புறக் காதில் அதற்குரிய இலக்கத் தகடை அணிவித்திருந்தார்கள். அதைப் பார்த்த வைஷாலி,

 

“சஞ்சு…! எனக்கு இந்த மாடுகளுக்கு காதில நம்பர் பிளேட் போட்டிருக்கிறதைப் பார்க்க மாட்டுக்கு தோடு போட்டு விட்டதைப் போல கியூட்டாக இருக்குடா…”

 

“ஹா… ஹா…. நீ சொன்ன பிறகு பார்க்க எனக்கும் அப்பிடித்தான் இருக்குடி…”

 

பேசிச் சிரித்தவாறே பண்ணையின் உள்ளே பசுக்கள் இருந்த இடத்தை அடைந்தார்கள். அத்தனை நேரம் வைஷாலி முகத்தில் இருந்த மகிழ்ச்சி சடுதியில் மறைந்தது.

 

சாணத்தின் மணத்தோடு மாட்டுத் தொழுவங்களுக்கே உரிய வாசத்தோடு காட்சியளித்தது அந்த இடம். அங்கே  பசுக்கள் தலையை மட்டும் வெளியே நீட்டியபடி இருக்க உடல் உள்ளேயுமாக ஒரே சீராக வரிசையாக அடைக்கப்பட்டிருந்தன. அவற்றின் முன்னால் பசும்புற்கள் போடப் பட்டிருந்தன. அந்தப் பசுக்களும் உணவொன்றே பிரதானமாக அந்தப் புற்களை அசை போட்டபடி இருந்தன.

 

அவற்றின் கனத்த மடியில் பால் எடுப்பதற்குரிய இயந்திரங்கள் பூட்டப் பட்டிருந்தன. அவற்றில் இருந்து உறிஞ்சப்படும் பால் குழாய்கள் ஊடாகச் சென்று பெரியதொரு கொள்கலனை அடையும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தன.

 

இந்தக் காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்த வைஷாலி சஞ்சயனை நெருங்கி அவன் வலது கையைத் தன்னோடு கோர்த்து இறுகப் பற்றிக் கொண்டாள்.

 

“சஞ்சு…! ப்ளீஸ்… வெளியே போவம்… எனக்குத் தலை சுத்துற போல கிடக்கு…”

 

அவள் மெல்லிய குரலில் கூறவும் உடனேயே அவளை அணைத்துக் கொண்டு வெளியேறினான் சஞ்சயன். அவளை பண்ணையின் வெளியேயிருந்த ஒரு பாறையில் அமர வைத்தவன் தானும் அருகே அமர்ந்து கொண்டான். தோள் பையிலிருந்து தண்ணீரை எடுத்துக் குடிக்கக் கொடுத்தான். அவளும் நீரைக் குடித்துத் தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டாள்.

 

“என்ன கொடுமை சஞ்சு இது…? இப்பிடியா பால் கறந்து யோக்கட், தயிர், மில்க் பவுடர் எல்லாம் செய்யிறாங்க… பார்க்கவே சகிக்க முடியலை… அடைச்சு வைச்சு மெசினைப் பூட்டிப் பால் கறக்கிறதெல்லாம் மிருக வதைத் தடுப்புச் சட்டத்தில சேராதா? இந்த பசுக்களைப் பார்… எவ்வளவு சந்தோசமாக மேயுதுகள்… அப்படி விடாமல் எதுக்கு இப்படி அடைச்சு வைச்சுக் கொடுமைப் படுத்துறாங்க… எனக்குப் பார்க்கவே ஏதோ செய்யுது… இனி நான் பாலே குடிக்க மாட்டன்… மில்க் புரொடக்ட் ஒண்டும் சாப்பிட மாட்டன்…”

 

பொங்கியவளை அமைதிப் படுத்தினான் சஞ்சயன்.

 

“ஹேய் ரிலாக்ஸ்டி முயல்குட்டி… சும்மா எடுத்ததுக்கும் டென்சன் ஆகாதை என்று சொல்லுறனான். பொதுவாக எல்லாப் பசுக்களும் இப்பிடி இந்த புல்வெளிகளிலதான் மேயுங்கள். பால் எடுக்கிற நேரம் மட்டும் அடைச்சு வைச்சு எடுத்திட்டு அப்புறமாகத் திறந்து மேய விடுவாங்க…

 

நீயே யோசிச்சுப் பார்… இவ்வளவு பசுக்கும் இத்தனை லீட்டர் பாலையும் கறக்க எவ்வளவு ஆட்கள் தேவை? மெசின் பூட்டியிருக்கிறதைப் பார்க்க எங்களுக்கு ஒரு மாதிரி இருந்தாலும் அதுகளுக்கு நொந்தால் கத்துங்கள் தானே… ஒரு பசுக்கூட சத்தம் போடாமல் புல்லைச் சாப்பிடுறதைப் பார்க்கத் தெரியேல்லையா இது வலிக்காது என்று.

 

இப்போ எல்லாம் அம்மாமாருக்கே பால் வராட்டில் மெசின் பூட்டி பம்ப் செய்து பால் எடுத்துக் குழந்தைக்கு பருக்கிறாங்க தானே. இதுவும் அது போல தான்டி…”

 

சஞ்சயன் கூறக் கூற அதிலுள்ள யதார்த்தம் புரிந்து அமைதியானாள் வைஷாலி.

 

“சரி… எழும்பு… பக்டரியையும் போய்ப் பார்த்திட்டு வருவம்…”

 

“இல்லைடா… எனக்கு மூட் இல்லை. பசிக்குது… சாப்பிடப் போவம்…”

 

சம்மதித்தவன் ஒரு உணவகத்துக்கு அழைத்துச் சென்றான். இருவரும் உண்டு முடித்ததும் அருகிலிருந்த பூங்காவிற்கு சென்றார்கள்.

 

சில நேரங்களில் சுற்றித் திரிவதை விடப் பிடித்தவர்களோடு ஒன்றாக அமர்ந்து முகம் பார்த்துப் பேசுவது கூட இன்பம் தானே.

 

சிறுவர்கள் விளையாட ஒரு ஓரமாக அமைக்கப்பட்டிருந்த ஊஞ்சலிலும் ராட்டினத்திலும் சில குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். மதிய நேரம் என்றபடியால் பூங்காவில் ஓரிருவர் தான் இருந்தார்கள். அப்போது ஒரு ஒன்றரை வயதுக் குழந்தையொன்று தத்தக்கப் பித்தக்க நடையோடு வந்து வைஷாலியின் கையைப் பிடித்து இழுத்து தூக்கச் சொல்லியது.

 

ஆனால் அவளோ முகம் கறுத்து இறுக்கம் பரவ அமைதியாக இருக்கவும், சஞ்சயன் அந்தக் குழந்தையைத் தூக்கி விளையாட்டுக் காட்டினான். அவன் தூக்கிப் போட்டுப் பிடிக்க கெக்கட்டமிட்டுச் சிரித்த பிள்ளையோடு சிறிது நேரம் விளையாடி விட்டுத் தன் மகவின் சந்தோசச் சிரிப்பை ஆசையோடு பார்த்துக் கொண்டிருந்த தாயிடம் கொடுத்து அனுப்பினான்.

 

வைஷாலியோ எந்த அரவமும் இல்லாமல் அமர்ந்திருந்தாள். அவளின் வெறுமை படிந்த முகத்தைப் பார்த்தவனிடத்தே பலத்த யோசனை தோன்றியது.

 

“வைஷூ…! உன்னோட கொஞ்சம் கதைக்க வேணும்…:

 

“ம்…”

 

“நேற்று விசாலியோட கதைச்சனான்…”

 

அதுவரைக்கும் சிரத்தையின்றி எங்கோ வெறித்திருந்தவள் அவனை அதிர்ந்து நோக்கினாள்.

 

“விசாலி இவ்வளவு வருசமா எத்தினையோ தரம் என்னோட கதைக்க ட்ரை பண்ணினவள். நான் அவளிட குரலைக் கேட்டதுமே கட் பண்ணிடுவன். மெயில் கூடப் போட்டவள். நான் எல்லாத்தையும் வாசிக்காமலே டிலீட் பண்ணிடுவன். அம்மா,  அக்காட்டச் சொல்லி கூட எவ்வளவோ முயற்சி செய்தாள். நான், அம்மா அக்கா உன்ர பேரை எடுத்தாலே என்னோட கதைக்க வேணாம் என்று அவைய அடக்கிடுவேன். எவ்வளவு முட்டாள் தனமாக நடந்து இருக்கன் என்று இப்பத்தானே விளங்குது  

 

உனக்கும் முரளிக்கும் இடையில் சின்னப் பிரச்சினை கூட வரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை வைஷூ. எங்க விசாலியோட கதைச்சால் நீ எப்பிடி இருக்கிறாய்? எங்க இருக்கிறாய்? என்று கேட்டு மனசைக் கட்டுப்படுத்த முடியாமல் முரளிக்குப் பண்ணின சத்தியத்தை மீறி உன்னைப் பார்க்க வந்து, அதால உன்ர வாழ்க்கையில ஏதாவது பிரச்சினை வந்திடுமோ என்ற பயத்தில தான்டி நான் இவ்வளவு தூரம் ஒதுங்கி இருந்தன்.

 

ஆனா நான் ஒதுங்கி வாழ்ந்ததே உனக்குச் செய்த பெரிய அநியாயம் என்றதை நான் கனவில கூட எதிர்பார்க்கவில்லை வைஷூ…

 

நேத்து விசாலியும் சரி, அன்ரியும் சரி கதறி அழுகினம்டி. ஏன் வைஷூ இப்பிடிச் செய்யிறாய்? அவைய இவ்வளவு வேதனைப்பட வைச்சு நீ ஒதுக்கி வைச்சிருக்கிறதுக்கு என்ன காரணம்?

 

ஊர் ஆயிரம் கதைக்கும்டி. உலை வாயை மூடினாலும் ஊர் வாயை மூட முடியாது என்று பழமொழியே சொல்லி வைச்சிருக்கிறாங்கள். அதுக்குப் பயந்தெல்லாம் ஊருக்குப் போகாம குடும்பத்தை அடியோடு பிரிஞ்சு இருக்கணுமாடி? கடைசியாக விசாலிக்குப் பிள்ளை பிறந்த நேரம் போய் பாத்தனியாம்… மூன்று வருசமாச்சாம்… அவையையும் உன்னை இங்க வந்து பார்க்கக் கூடாது… வந்தால் சூசைட் பண்ணுவன் என்று சொல்லி மிரட்டி வைச்சிருக்கிறியாம்…

 

இதெல்லாம் என்ன வேலை வைஷூ… என்ர முயல்குட்டிக்கு இப்பிடிப் பெரிய பெரிய கதையெல்லாம் கதைக்கத் தெரியுமா என்றதே எனக்கு அதிசயமாக இருக்கு…

 

சரி… நடந்தது நடந்து போச்சு… விசாலிட பிள்ளையிட மூன்றாவது பிறந்தநாள் வருகுதாம்… நீ ஒரு கிழமை உன்ர அனுவல் லீவை வாற கிழைமைக்கு எடு… நானும் வாறன்… ஊருக்குப் போய்ட்டு வருவம்…”

 

நீளமாய் சொல்லி முடித்தான் அந்த உற்ற தோழன். அவளோ கடைசி வார்த்தைகளைக் கேட்டதும் அவசரமாகக் கலங்கிய குரலில் மறுத்தாள்.

 

“நோ… நோ வே… நான் வர மாட்டன்… என்னால அங்க வர முடியாது… எனக்கு யாரும் வேணாம்… ப்ளீஸ் சஞ்சு… நான் இங்கேயே என்ர கடைசி வரைக்கும் இருந்திடுறன். என்னை விட்டிடு…”

 

“இல்லை வைஷூம்மா… நீ செய்யிறது ரொம்பத் தப்பு… உன்ர அம்மா, அப்பாவோ, விசாலியோ அவங்க உன்னைப் பத்தி என்ன கதைச்சு இருந்தாலும் பரவாயில்லை. மறந்திடு. வாழப்  போறது கொஞ்ச நாள் அதுக்குள்ள ஏன் இப்பிடிப் பிரிஞ்சிருக்க வேணும்… இதில என்ன சுகத்தை நீ கண்டிட்டாய்? அதுதான் நான் கூட வாறன் என்று சொல்லுறன் தானேம்மா.. பிறகென்ன… போய்ட்டு வருவம் சரியா?”

 

“அவங்களில எந்தத் தப்பும் இல்லைடா… என்னாலதான் அவங்க முகத்தைப் பார்க்க முடியலை… முரளி, முரளி என்று நான் ஆசைப்பட்டத்துக்கு எந்த மறுப்பும் சொல்லாமல் கல்யாண வீடு கூட ரொம்ப கிராண்ட்டா நான் ஆசைப்பட்ட படி செய்து வைச்சாங்க. அப்பிடியிருக்க நான் டைவோர்ஸ் எடுத்து அவங்களுக்கு அவமானத்தை மட்டும் தான் தேடித் தந்திருக்கிறன் என்றதை நினைக்க எனக்குத்தான் குற்ற உணர்வில் அவங்கட முகத்தையே பார்க்க முடியலடா…

 

அதை விட விசாலிக்குக் குழந்தை பிறந்த நேரம் போய் பார்த்த போது, குட்டிக் கண்ணை உருட்டி விழிச்சபடி கையைக் காலை ஆட்டியபடி என்னைப் பார்த்துச் சிரிச்ச அந்தக் குழந்தையை பார்க்க எனக்கு நான் அபோர்ஷன் பண்ணிக் கொன்ன என்ர குழந்தைதான் ஞாபகம் வந்துச்சு…

 

அதாலதான் நான் பிறகு ஊருக்கே போகேலடா…. மறுபடியும் எனக்கு ஒரு சின்னக் குழந்தையைப் பாக்கிற சக்தி மனசில இல்லடா… நான் இவ்வளவு நாளில உன்னைத் தேடி வராததுக்கு இதுவும் ஒரு காரணம்.

 

உன்ர வைஷூ ஒரு கொலைகாரின்னு தெரிஞ்சால் நீ என்னை வெறுத்திடுவியோன்ற பயத்தில் தான் உன்னட்ட வரல சஞ்சு… இத்தனை வருசங்களாக வாழ்ந்தது போல நீ பக்கத்தில இல்லாமல் உன்ர நினைவுகளோட என்னால வாழ முடியும்டா…ஆனால் உன்ர வெறுப்பைத் தாங்குற சக்தி எனக்கு இல்லை சஞ்சு… என் குழந்தையையே அபோர்சன் பண்ணிக் கொன்ற படுபாவிடா நான்… கொலைகாரிடா…”

 

விம்மி வெடித்துக் கதறியவள் முகத்தை மூடிக் கொண்டு அழ, சஞ்சயனோ அவளைத் தேற்றுவதைப் பற்றிய சிந்தனை சிறிதுமின்றி திக்பிரமை பிடித்தவனாய் அமர்ந்திருந்தான். அவனால் வைஷாலி சொன்ன செய்தியின் அதிர்ச்சியைத் தாங்க முடியவில்லை.

 

பாடசாலைக் காலத்தில் பாம்போ, சிறு பூச்சியையோ எதையும் அடிக்க விட மாட்டாள். வகுப்பறையில் ஒரு நாள் சிறு சிலந்திப் பூச்சியைக் கண்டு விட்டு மாணவர்கள் அடித்துக் கொல்ல முயல, இவளோ தும்புத்தடியால் (துடைப்பம்) அதைத் தட்டிக் கொண்டு போய் வகுப்பின் வெளியே விட்டாள். அப்படிச் சிறு உயிருக்கும் தீங்கு நினைக்காதவள்தான்  அவனுக்குத் தெரிந்த வைஷாலி.

 

அதை விடச் சிறு குழந்தைகள் என்றால் உயிர் அவளுக்கு… அப்படிப்பட்டவள் எப்படிச் சொந்தக் குழந்தையையே கருக் கலைப்புச் செய்யும் மகாபாவத்தைச் செய்யத் துணிந்தாள்? சஞ்சயனால் கொஞ்சம் கூட நம்ப முடியவில்லை. தன் காதில் தான் பிழையோ என்று எண்ணி வைஷாலியைப் பாரத்தால் அவளோ சஞ்சயனை ஏறெடுத்துப் பார்க்கும் திராணியற்று எங்கோ வெறித்தபடி இன்னமும் விக்கிக் கொண்டிருந்தாள்.

 

வைஷாலி பயந்தது போல சஞ்சயன் அவளை வெறுப்பானா? இல்லை அவளைப் புரிந்து நடப்பானா?

 

 

1 thought on “யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 15”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ராணி மங்கம்மாள் – 13ராணி மங்கம்மாள் – 13

13 . கண்கலங்கி நின்றாள்  மருமகளான சின்ன முத்தம்மாளின் உற்சாகமற்ற போக்கு ராணி மங்கம்மாளுக்குக் கவலையளித்தது. அவள் மனம் குழம்பித் திகைப்பு அடைந்தாள். கணவனை இழந்த துயரத்தை மகன் பிறந்த மகிழ்ச்சியில் மறந்து விடுவாள் என்று எதிர்பார்த்து வீணாயிற்று.   சின்ன

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 75ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 75

75 – மனதை மாற்றிவிட்டாய் பேசிட்டு மறுபடியும் கோவிலுக்கு போன போதுதான் மீராவோட அப்பா ஆல்ரெடி சொல்லி வெச்ச ஆளுங்க மறுபடியும் ஏதோ டவுன்ல பாத்தேன்னு மறுபடியும் ஆக்சிடென்ட் பண்ண பாத்தாங்க. அப்போதான் நீங்களும் அர்ஜுன் அண்ணாவும் மோதிரம் வாங்க போயிருந்திங்களா?

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 04ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 04

4 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன்   “ஆதர்ஷ், இந்தா கார் சாவி, இப்போ இருந்து நீயே யூஸ் பண்ணிக்கோ.” அவன் மறுக்க இவரோ “நீயே யோசி, நீதான் எல்லாமே மேனேஜ் பண்ணபோற, எப்படியும் வெளில போக வர வேலை இருக்கும்.