பாகம் மூன்று
“ஹாய் லால்ஸ்! எப்படி இருக்கே?” என்று கேட்டபடி மாலு என்கிற மாலதி ஆரவாரமாக உள்ளே நுழைந்த போது மேலும் சில நொறுக்குத்தீனிகளை உள்ளே தள்ளிய தெம்பில் லலிதா இன்னும் ஆக்ரோஷமாக ரமேஷை முறைத்தாலும், அவளது அழுகை / சோகம் கப்பின முகம் சுத்தமாக மாறியிருந்ததால் ரமேஷும் அவளது முறைப்பை மதித்து அவள் எதிரே வராமல் வீட்டுக்குள்ளேயே சடுகுடு மற்றும் கண்ணாமூச்சி ஆகியவற்றை ஆடிக் கொண்டிருந்தான். சரி சரி, சொல்ல ரசனையாக இருக்கே என்று தான் கொஞ்சம் கற்பனையாக சொன்னேன்.
உண்மையில் கிடைத்தது சாக்கு என்று அவளிடமிருந்து எஸ்கேப்பாகி ஹெட் போன்ஸ் மாட்டிக் கொண்டு பாகுபலி பாகம் 2 வை இருபதாம் முறையாக பார்த்துக்கொண்டிருந்தான். சண்டை தொடங்கும் முன்னால் தான் பாகுபலி பாகம் 1 ஐ நூற்றிப்பதினோராம் முறையாக பார்த்தான் என்கிற சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தகவலை இங்கே ரசிகர்களுக்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.
இப்படியாக நான்கதாய்களிலிருந்து புலம் பெயர்ந்து சாக்கலேட் குக்கீஸ்களுக்கு மாறியிருந்த லலிதா, ஆசுவாசமாக, “வா மாலு, எனக்கென்ன ஏதோ இருக்கேன் (அதாவது சோகமா இருக்காங்கன்னு சொல்லாம சொல்றாங்களாம்!)”, என்று சொல்ல, துளியும் பதற்றப் படாமல், “தட்’ஸ் குட். ரமேஷ் எப்படி இருக்கார்? பசங்கள்லாம் எங்க?”, என்றபடி உள்ளே வந்தாள்.
அவள் தன்னைப் பற்றி விசாரிக்காத கடுப்பில், “ரமேஷுக்கென்ன! போக வர என்னை வம்புக்கு இழுத்தபடி திவ்யமா இருக்கார்!”, வாய்க்குள் முணுமுணுத்தாலும் தெளிவாகவே சொன்னாள். ம்ஹ்ம்ம்…. இதற்கும் மால்ஸ் ஆகிய மாலு என்கிற மாலதி அசரவில்லை.
“என்ன வெச்சிருக்க? அட, நம்கீன். எனக்கொரு கிண்ணத்துல போட்டுக் கொடேன். இதென்ன, வாவ்! நான்கதாய்! நீயே செஞ்சியா? ஒண்ணே ஒண்ணு எடுத்துக்கறேன்….. ம்ம்ம்ம்….. ஷுபேரா இருக்கு. எப்புதி தான் இப்பதி வித விதமா சமைக்…க்க்க்….கிறியோ. இன்னும் ஒண்ணு எடுத்துக்கறேன், ரொம்ப நல்லா இருக்கு, அப்படியே கேசரியும் போட்டுக் கொடேன்…. ம்ம்ம்….. என்க்கு முக்கால் மண்ணி நேரத்துக்கு மேல ஷமையல் ரூமில… நீக்கவோ மிடியாது. ஆஹா, கேசரி வாசம் அள்ளுது…..அதிலும் பிரிட்ஜுல மிச்சம் மீதி ஏதாவது இருந்தா அன்னிக்கி அடுப்பே ஆன் பண்ண மாட்டேன். இரு கொஞ்ச நேரம் எதுவும் பேசாத. இந்த கேசரியை ரசிச்சு ருசிச்சு சாப்பிட போறேன்”, வாயில் சாப்பாடு உள்ளே போகும் வேகத்தில் தமிழ் வார்த்தைகள் உள்நாட்டு வெளிநாட்டு வடநாட்டு சொற்களின் ரூபங்களாக வந்துகொண்டிருந்ததால் பேசுவதை நிறுத்திவிட்டு நிஸ்ச்சிந்தையாக சாப்பாட்டில் மட்டும் கவனம் செலுத்தினாள் மாலு.
வாழ்க்கையே வெறுத்து போய் என்னவோ பண்ணிக்கோ என்பது போல கை கட்டி தோழி முடிக்கும் வரை காத்திருந்தாள் லலிதா.
“முடிச்சிட்டியா?”
“போதும்…. ஹி ஹி என்ன விசேஷம்? எதுக்கு என்னை உடனே வரச்சொன்னாய்?”, பாதிக்கு மேலே சுவாஹா செய்துவிட்டு கேட்கும் கேள்வியைப் பார், மனசுக்குள் பொருமினாலும்,
அன்றைய ஆலாபனையை தனி ஆவர்த்தனமாக ஆர்.டி.பியின் சுவை பட கூறினாள்( புலம்பினாள் )
இப்போது சுதாரிப்பாக நிகழ்காலத்துக்கு வந்தவள், லலிதா சொல்வதை கவனமாக கேட்டுக் கொண்டு, “உனக்கு வெயிட் குறைக்கணும்னா அதுக்கு டயட் கண்ட்ரோல் மட்டும் பத்தாது….. எக்ஸர்சைஸ்சும் முக்கியம். ஒரு நாளைக்கி அரை மணி நேரமாவது விறுவிறுன்னு காலை வீசி நடக்கணும். வியர்வை பொலபொலன்னு கொட்டுற அளவுக்கு நடக்கணும்….. ஹார்ட் ரேட் அதிகரிக்கணும். இப்படிலாம் செஞ்சா நீயும் என்ன வேணா சாப்பிடலாம், கவலையே இல்லை. ஏன்னா, அடுத்த நாள் ஜிம்முக்கு போய் அந்த அதிகபட்ச காலரிய நீ உபயோகப்படுத்திடுவ. இடுப்புல சதையா மாறிடாது. இதோ பாரு, எனக்கு எப்படி பிளாட் abs இருக்குன்னு”, தன்னை மறந்து உபன்யாசம் செய்யத்தொடங்கி இருந்த தோழியை தடுத்து நிறுத்தின லலிதா,
“எங்க நடக்க சொல்லற? ரோட்டுல மணல் கொட்டி வெச்சிருக்கான்…. பிளாட்பார்ம்ல ஆட்டோ ஓடறது…. காலையில எட்டு மணிக்கு ஏகப்பட்ட ட்ராபிக். அதுக்கு முன்னால வீட்டு வேலைகள், பிள்ளைகளை ஸ்கூலுக்கு ரெடி பண்ணணும்…”, பிலஹரியில் தொடங்கி பைரவி, பௌலி என்று பயணித்து பெஹாக் வழியாக பூபாளத்தில் வந்து நிறுத்தினாள்.
நிர்தாட்சண்யமாக தோழி சொல்வதை புறம் தள்ளின மாலதி, “சும்மா நொண்டி சாக்கு சொல்லாத. ரோட்டுல நடக்க முடியலைன்னா வீட்டுல ட்ரெட்மில் வாங்கி வெச்சுக்கோ. அதுவும் கஷ்டம்னா என் கூட ஜிம்முக்கு வா. முதல்ல ஒரு வருஷத்துக்கு மெம்பெர்ஷிப் எடுத்து பணம் கட்டிடுடு. ஒரு மாசத்துக்கு தினமும் தொடர்ந்து வந்தாலே உனக்கே வித்தியாசம் தெரியும்”
“………………..”, திக்ப்ரம்மை என்பார்களே – அந்த நிலைக்கு சென்றிருந்தாள் லலிதா.
“சரி, இதை சொல்லு! உன்னால எவ்வளவு ஸ்கிப்பிங் செய்ய முடியும்? டம்பெல் எவ்வளவு தூக்க முடியும்? மாரத்தான் ஓடி இருக்கியா? ஹெச்.ஐ.ஐ.டி, பூட் காம்ப் வொர்கவுட் இதெல்லாம் பண்ணி இருக்கியா? இதோ பாரு, என்னோட பி.எம்.ஐ. 23.8! உன்னோடது எவ்வளவுன்னு தெரியுமா?”
வருமான வரித்துறையிடம் மாட்டிக்கொண்ட புத்தம் புது கரைவேட்டி அரசியல்வாதி போல பேச்சு மூச்சு இல்லாமல் விழித்தாள் லலிதா.
“சொல்லு லலிதா, உன் பி.எம்.ஐ எவ்வளவு?”, பி எம் ஐ என்றாலே என்னவென்று தெரியாத லலிதாவுக்கு அது எத்தனை இருக்கிறது என்று மட்டும் தெரிந்துவிடவா போகிறது! ஆனாலும், தோழியிடம் அதை ஒப்புக் கொள்ள மனம் இல்லை.
“அது இருக்கும் முப்பத்துமூணோ முப்பத்தஞ்சோ”, அசிரத்தையாக சொல்வது போல சொன்னாள்.
“முப்பதுக்கு மேல போனாலே ஒபிசிட்டி. நிச்சயம் நீ ஏதாவது பண்ணித்தான் ஆகணும் லலிதா. டயபடீஸ், ஹார்ட் ப்ராப்லம், ரத்தக் கொதிப்பு…. ஏன் ஸ்ட்ரோக் கூட வர வாய்ப்பு இருக்கு”
லலிதாவின் மண்டைக்குள் மூளையின் ரத்தநாளங்கள் இப்போதே தகதிமிதாம் என்று நர்த்தனம் ஆடியபடி இருந்தன.
சரி நான் கிளம்பறேன். நாளைக்கி காலையில சரியா பத்து மணிக்கு எனக்கு ஜிம் சேஷ்க்ஷன் இருக்கு. என்னோட பெறுவதாக இருந்தால் இன்னிக்கு ராத்திரிக்குள்ள எனக்கு மெஸ்சேஜ் போடு. நாளைக்கு ஒன்பது மணிக்கு அங்க போவோம். ரெஜிஸ்டரேஷன் எல்லாம் முடிச்சிட்டு பத்து மணிக்கு ஜிம் கிளாஸ் ஆரம்பிக்க சரியா இருக்கும். ஓகேவா?”
“ஜிம்….ஜிம்முல சேரணும்னா எவ்வளவு செலவு ஆகும்?”
மாலதி சொன்ன பதிலில் மயக்க மருந்து இல்லாமலே தலை சுற்றிப் போய் மயக்கம் வந்து விட்டது லலிதாவுக்கு.
“வருஷத்துக்கு இருபத்தையாயிரமா!”, அண்டசராசரத்தில் இருக்கும் அத்தனை கிரகங்களும், நக்ஷத்திரக்கூட்டங்களும் அவள் கண் முன்னால் ப்ரேக்டான்ஸ் ஆட தொடங்கிற்று.
குனிந்து இடுப்பைப் பார்த்துக் கொண்டவள், “நான் என்ன அவ்வளவா குண்டா இருக்கேன்!”, இப்போ ஏக்கமும் கவலையும் போட்டி போட யாராவது இல்லை என்று சொல்லிவிடமாட்டார்களா என்ற நப்பாசையில் ஒருவரும் இல்லா அறையில் தனக்குத் தானே கேட்டுக் கொண்டாள்.
lalithavai vida mosam pola iruke malu. lallu kalaiyil irundu sapitathai iva just like that swaha pannitale. oh god. IPPADIYE PONA EXCERISE PANNI JIM POI WALK PONALUM IDHU KURAIYUTHUPA. BAHUBALI 2 PAKKUM RAMESH IDAM KETTAL EPPADI WEIGHT LOSS PANRADTHU SOLLIKODUPARE….
ஹாஹாஹா, இது நல்லாயிருக்கே 😊😊