Tamil Madhura தமிழ் க்ளாசிக் நாவல்கள் திருமதி ராஜம் கிருஷ்ணனின் ‘கரிப்பு மணிகள்’- இறுதிப் பகுதி

திருமதி ராஜம் கிருஷ்ணனின் ‘கரிப்பு மணிகள்’- இறுதிப் பகுதி

திங்கட்கிழமை காலையில் சாரி சாரியாக உப்பளக்காரர் தெருக்களில் செல்லவில்லை. கையில் அலுமினியத் தூக்குப் பாத்திரமும், பொங்கிப் பீளை சார்ந்த கண்களும் தலைக் கொட்டைச் சுருட்டுமாகப் பெண்களும் சிறுவர் சிறுமியரும், அடிமிதித்துச் சாலையின் பொடி யெழுப்பவில்லை. கோல்டன் புரம், கிரசன்ட் நகர், ஆகிய எல்லாத் தொழிலாளர் குடியிருப்புக்களிலும் ஆண்களும் பெண்களும் வீடுகளில் கூடி நின்று வானில் மேகங்கள் கூடுவதைப் பார்த்துப் பேசுகின்றனர். சிறுவர் சிறுமியர் வேலையில்லை என்று தெருக்களில் விளையாடுகின்றனர்.

அருணாசலம் முதல் பஸ்ஸுக்கே வந்து இறங்குகிறார்.

“வாரும்!” என்று செங்கமலத்தாச்சி வரவேற்கிறாள்.

“வழியெல்லாம் போலீசப் பாத்த. என்னமோ காதுல விழுந்திச்சி. ஆரோ தலைவரைப் போலீசி பிடிச்சில உள்ள கொண்டிட்டுப் போயிட்டான்னா. ராமசாமி வந்தானா?”

“விடியக்காலம வந்திற்றுப் போனா பாத்த…”

பொன்னாச்சி முற்றம் பெருக்குபவள், பேச்சுக் குரல் கேட்டு ஓடி வருகிறாள்.

“என்ன சொல்றிய மாமா? போலீசுல ஆரப் புடிச்சிட்டுப் போனாவ?”

“பொன்னாச்சியா? எப்பிடிம்மா இருக்கே? ஒம்மாமியா எங்கேருக்கா?”

“இங்கதா. அவிய காலப் புடிச்சிட்டுப் போவாதேன்னு அழுதாவ. என்னயும் ஏசிட்டிருக்கி… மாமா. ஆரப் போலீசில புடிச்சிப் போனா?”

“தெரியலம்மா, சொல்லிக்கிட்டா பஸ்ஸில. இது வழக்கம் தான? நா இங்க வருமுன்ன மூணா நெம்பர், நாலா நெம்பர் தெரு வழியாத்தா வர்றே. எந்த அளத்துககாரரும் வேலய்க்குப் போவல. இன்னிக்கு மானம் கறுத்திருக்கு. இப்ப மழை வந்தா, வாரின உப்பக் காவந்து பண்ணல, முடை போடலன்னா நட்டமாயிடும். மொதலாளி மாரு எறங்கி வருவா. ஒரே வழி தா. ஆனா, கூலிய வாணா பத்து பைசா ஏத்துவானே ஒழிய, ஒரு தொழிலாளிக்குச் சட்டப்படி கொடுக்க வேண்டிய சலுகை, வசதியெல்லாம் குடுப்பானா? இத்தனை நாளக்கி லீவுன்னு பட்டியல் போட்டு இனிஸிபெக்டரிட்டக் காட்டுவானுவ. ஆனா சொதந்தர நாளுக்கும் மே நாளுக்கும் கூட சில அளங்களில் லீவு கிடையாது கூலியோட. இத்தினி நா ருசி கண்டவுக இப்ப திடீர்னு எல்லாம் விட்டுக் கொடுப்பாகளா? எத்தினி நா குஞ்சும் குழந்தையுமா பட்டினி கிடப்பாக?”

செங்கமலத்தாச்சி பேசவேயில்லை.

மாமன் முன்பு இவ்வாறு வேலை நிறுத்தம் செய்த கதைகளைப் பற்றி பேசுகிறார்.

லாரி அளத்துக்குள்ளார வரக்கூடாது. தொழிலாளிகளே சுமந்து வந்து ஏற்ற வேண்டும். அதனால் அவர்களுக்கு அதிகமான வருமானம் கிடைக்கும் என்று வாதிட்ட தொழிலாளர் தலைவனை எப்படிக் கொன்று விட்டார்கள் என்று விவரம் கூறுகிறார்.

திடீரென்று செங்கமலத்தாச்சி பட்டாசு சீறுவது போல வெடிக்கிறாள்.

“ஒமக்கு அறிவிருக்காவே?”

அந்தக் குரலில் அவர் நடுங்கிப் போகிறார்.

“கொல்லுற கதையப் போயி இப்ப சொல்லுறீம்! நாயமா இருக்கற எதையும் வேரோட கெல்லிற ஏலாது தெரிஞ்சிக்கும்! ஒரு புல்லுக்கூட எடுக்க எடுக்க முளைக்கிது. அந்தவுள்ள கண்ணுல வுசுர வச்சிட்டுப் பாத்திட்டிருக்கி, ஒமக்கு வயசானதுக்கு தயிரியம் சொல்லணும்னு தெரியாண்ட?”

மாமன் பாவம், உமிழ்நீரை விழுங்கிக் கொள்கிறார். “தப்புத்தான், தப்புத்தான். என்னமோ சொல்ல வந்து நெதானமில்லாம பேசிட்ட, மன்னிச்சிக்கும்…”

ஓடி வந்த ஆறு அணை கண்டு முட்டினாற் போன்று திகைத்துப் போகிறார்.

“பேசத்தான் தெரியும். பேசிட்டே இருப்பிய; எல்லாம் பேசுறான். படிச்சிவ, படியாதவ, தெரிஞ்சவ, தெரியாதவ, ஆம்புள, பொம்புள அல்லாம் பேசுறாவ. சினிமால, ரேடியோல தெருவில, கடயில பேச்சு பேசிய ஏமாத்துரானுவ; பேசியே ஏமாந்தும் போறம். செத்துப் போனவப் பத்தி இப்ப என்ன பேச்சு? இருக்கிறவகளப் பத்தி இல்ல இப்ப நினப்பு?”

‘செவத்தாச்சி’ என்று குறிப்பிடும் செங்கமலமா? புருசனை விட்ட, தரங்கெட்டுப் போன, மகனைப் பறிகொடுத்த ஒரு பெண் பிள்ளையா?

“நாயம் அம்மா. ஒங்களுக்குத் தெரிஞ்சது எனக்குத் தெரியாமப் போச்சி, மன்னிச்சிக்கும்…” என்று நெஞ்சம் தழுதழுக்க அவளைக் கையெடுத்துக் கும்பிடுகிறார்.

“என்ன ஏங் கும்பிடுறிய? இரியும். பொன்னாச்சி, பானையவச்சி கொஞ்சம் கூடவே போட்டு வடிச்சி வையி. ஒரு குளம்பும் காச்சி வையி. ஆரும் பசி பட்டினின்னு வருவா…” என்று கட்டளை இடுகிறாள்.

பகல் தேய்ந்து மாலையாகிறது. மாமன் சாப்பிட்டு விட்டு வெளியே செல்கிறார். வளைவே கொல்லென்று கிடக்கிறது. ஆச்சி பெட்டி முடைகிறாள். சொக்கு மாவாட்டுகிறாள். பொன்னாச்சி தண்ணீரெடுத்து விட்டு வேலை முடித்து விட்டாள். வெளிக்கு இயங்கிக் கொண்டிருந்தாலும் உள்ளத்தில் கருக்கரிவாளின் கூர்முனை ஊசலாடுவது போல் ஓர் அச்சம் நிலைகுலைக்கிறது. வேலை முடக்கம் ஒரு நாள் இரண்டு நாளுடன் முடியுமா?

“அக்கா!… அக்கா!” என்று பச்சை ஓடி வருகிறான்.

“எல்லோரும் ஊர்கோலம் போறாக! வாங்க… எல்லாரும் அங்க நின்னு பாக்கறாங்க…!”

நல்லகண்ணு, சொக்குவின் பையன், மருது, பாஞ்சாலி, சரசி எல்லோரும் தெருவில் ஓடுகின்றனர். அவளும் கூட ஆவலுடன் தொழிமுனைக்குச் செல்கிறாள். அவளுடைய நாயகன் செல்வதைப் பார்க்கத்தான்!

“உப்பளத் தொழிலாளர் சங்கம் வாழ்க! எங்களுக்கு நியாயம் வேண்டும்! எங்களை ஆளைச் சட்டத்துக்கு உட்பட்ட பதிவுத் தொழிலாளியாக்குங்கள்! நீதி கொல்லாதீர்! ஆணுக்கும் பெண்ணுக்கும் சமவேலை சமக்கூலி…”

கோஷங்கள் காற்றிலே மிதந்து வந்து செவிகளில் அலை அலையாக விழுகின்றன.

பச்சை, பாஞ்சாலி நல்லகண்ணு எல்லோரும் புரியாமலே ‘ஜே’ கோஷம் போடுகின்றனர். ஆண்களும் பெண்களுமாகக் கூட்டம் முன்னேறி வருகிறது. காவல்துறையினர் முனையில் ஆங்காங்கு முதுகில் எதையோ சுமந்து கொண்டு நிற்பதை பொன்னாச்சி பார்க்கிறாள். கடலாய் அந்தக் கூட்டம் தெருவை நெருக்கியடித்துக் கொண்டு வருகிறது. அந்தப் பெருங்களத்தில் பூத்த பல வண்ண மலர்கள் போல் வண்ணக் கொடிகள்… மிகுதியும் செவ்வண்ணக் கோலங்கள்…

கூட்டம் தெருவைக் கடக்குமுன் என்ன நேர்ந்ததென்று தெரியவில்லை. கோஷ அலைகள் சிதறுகின்றன. கற்கள் பாய்கின்றன. பச்சையின் நெற்றியில் ஒரு கூறிய கல் பாய்ந்து குருதிப் பொட்டிடுகிறது.

“எலே, பச்சை, வால… எல்லாம் வாங்க… வீட்டுக்குப் போவலாம்!” என்று பொன்னாச்சி கத்துகையில் காவல் துறையினர் கண்ணீர்க் குண்டுகள் வெடிக்கின்றனர். பீதியில் நடுநடுங்கிக் கூட்டம் சிதறுகிறது. பொன்னாச்சிக்கு கண்ணீர்க் குண்டைப் பற்றித் தெரியாது. கண்ணில் எரிய எரிய நீராய் வர, குழந்தைகளை அதட்டி இழுத்துக் கொண்டு வீட்டுக்குள் ஓடி வருகிறாள்.

“குண்டு போடுறாவ!”

“ஏலே, வால, போலீசு புடிச்சு அடிப்பாவ!” என்று தாய்மார் விவரம் அறியாத பிள்ளைகளை அழைத்துச் செல்கின்றனர்.

“அக்கா, மாமா கொடி புடிச்சிட்டுப் போனாவ, பாத்தியாக்கா…?” தன் கணவனைத் தான் மாமா என்று கூறுகிறான் என்பதைப் பொன்னாச்சி புரிந்து கொள்கிறாள்.

“நிசமாலுமா! எனக்கு ஆரும் ஏதும் புரியல!” என்று கூறியவண்ணம் அவன் காயத்தில் அவள் மஞ்சளும் சுண்ணாம்பும் குழைத்து வைக்கிறாள். எரிச்சலுடன் பொருட்படுத்தாத கிளர்ச்சி அவனுக்கு.

“குண்டு வெடிச்சாங்களே, அது ஆரையும் சாவடிக்காதாம்! ஆனா கண்ணுல தண்ணியாக் கொட்டுது… எனக்குக் கூட அவிய கூடப் போவணும்னு ஆச, ஏக்கா இழுத்திட்டு வந்திட்ட?”

“வாணா வாணா, நீ போனா இந்தப் பொடியெல்லாம் போவும்…”

இந்த அமர்க்களங்கள் எதுவுமே தன் செவிகளில் விழாத மாதிரியில் ஆச்சி கருமமே கண்ணாகப் பெட்டி முடைந்து கொண்டிருக்கிறாள்.

நாட்கள் நகருகின்றன.

மாமனுக்கு இங்கு நிலைக்கவும் பொருந்தவில்லை. ஊரிலும் இருப்பாக இல்லை. தங்கபாண்டியிடம் சண்டை போட்டுத் தாலியைத் திரும்பப் பெறுகிறார். வாரி வைத்த உப்பை அவன் வண்டியிலேற்றிச் செல்கிறான்.

ராமசாமி எப்போதோ இருட்டில் கள்வனைப் போல் வருகிறான். அவசரமாகச் சோறுண்கிறான். “வட்டுக்காரர் அளத்துல ஒரு பயல உள்ளவுடுறதில்லன்னு மாமுண்டி நிக்கியா. பனஞ்சோல அளத்துல சோல தொழியத் தெறிந்து உப்பெல்லாம் கலாமுலான்னு ஆக்கிட்டானாம். பய போலீசு காவலுக்கு மீறி கடல்ல முக்குளிச்சிட்டே போயி மிசினத் தவராறு பண்ணிட்டேன்னா… வேலக்கிப் போவ பயந்திட்டே அல்லாம் நின்னிடுவாங்க. ஆனா, வெளியாளவுட்டா, தொலஞ்சம். அதுதா கட்டுக் கோப்பா இருக்கணும். இப்ப அந்தக் கட்சி இந்தக் கட்சி இல்ல. எல்லாரும் ஒரு கட்சி. நமக்கு ஒரு மனிசன்னு வேண்டிய தேவைகளுக்கு உரிமை வேணும்…”

கை கழுவ அவள் நீரெடுத்துக் கொடுக்கையில் சரட்டில் பொற்சின்னம் குலுங்குவதைப் பார்த்து விடுகிறான்.

“மாமா கொண்டாந்தா…”

இளமையின் தாபங்கள் கட்டவிழ்கின்றன.

“தயிரியமா இருவுள்ள; நம்ம பக்கம் நியாயம் இருக்கு. நா வார…” கதவைத் திறந்து அவனை வெளியே செல்ல விடுவது மிகக் கடினமாக இருக்கிறது.

எண்ணெய் விளக்கில் திரி மட்டுமே எரியத் தொடங்கும் நிலை. ஆச்சி வீட்டு முற்றத்தில் கடனுக்குப் பெண்கள் வந்து மொய்க்கின்றனர். ஆச்சி உள்ளே சென்று பெட்டியைத் திறந்து ஐந்து, பத்து என்று எடுத்துக் கொடுக்கிறாள்.

பச்சையின் நெற்றியில் அன்று கல்பட்ட காயம் வீங்கிச் சீழ்கோத்துக் கொள்கிறது. ஓலைப் பெட்டிகளைச் சந்தையில் கொண்டு போட்டுவிட்டு வந்து நெற்றியைப் பிடித்துக் கொண்டு உட்காருகிறான்.

ஆச்சி ஒரு ரூபாயை அவனிடம் எடுத்துக் கொடுத்து, “பெரியாசுபத்திரில போயி எதானும் மருந்து போட்டுட்டு வாலே?” என்று அனுப்புகிறாள்.

அன்று காலையில் வான் இருள மழை மணிகள் இங்கொன்றும் அங்கொன்றுமாகப் பொட்பொட்டென்று குதிக்கின்றன. பிறகு களிப்பும் கும்மாளமுமாகக் கதிரவனுடன் விளையாடிக் கொண்டு காய்ந்த மண் வெய்துயிர்க்கப் படபடவென்று பொழிகிறது. தட்டுமேட்டு அம்பாரங்களை இப்போது எந்தக் குஞ்சும் வந்து தொடலாகாது. வங்கிக்கு ஈடுகட்டிய குவைகள் கரைந்து விடக்கூடும். அவற்றை விற்று மூடைகளாக்க ஒரு ஈ காக்கை போகக் கூடாது.

தங்கள் போராட்டம் வெற்றிப் பாதையில் செல்லும் எக்களிப்புடன் அவர்கள் பசியையும் மறந்து களிக்கின்றனர்.

சிவந்தகனி அன்று மாலை நான்கு மணியளவில் மூச்சிரைக்க ஓடி வருகிறான்.

“பனஞ்சோல அளத்துல புது ஆள் கொண்டு லாரியோட உள்ளார போனாவளாம். ஒம்மாப்பிள, இன்னும் மொத்த பேரும் குறுக்க விழுந்து மரிச்சாவளாம். அடிதடியாம். மாப்பிளயைப் புடிச்சிட்டுப் போயிட்டாவளாம்…!”

அவனுக்கு மூச்சிறைக்கிறது.

அப்போது செங்கமலத்தாச்சி பூமி வெடித்துக் கிளம்பும் கொழுந்து போல் வெளியே வருகிறாள்.

“என்னலே?”

“பனஞ்சோல அளத்துல, லாரியோட ஆள் கொண்டு வந்திருக்கானுவ…”

அவள் முடி பிரிந்து விழுகிறது. “லாரியோட, ஆள் கொண்டு வாராகளாமா?…”

ஒரு கணம் அவள் சக்தியைத் திரட்டிக் கொள்வது போல் நிச்சலனமாக நிற்கிறாள். மறுகணம் இடுப்பிலிருக்கும் சாவியைக் கையில் எடுக்கிறாள்.

“ஏட்டி, பொன்னாச்சி? ந்தா… சாவியப் புடிடீ…! எல்லாம் பதனமாப் பாத்துக்க!” என்று முற்றத்தில் போட்டிருக்கும் கம்பு ஒன்றை எடுத்துக் கொண்டு வெளியே பாய்கிறாள்.

கண்மூடிக் கண் திறக்கும் வேகத்தில் நடக்கிறது. சாவியைப் பொன்னாச்சி பெற்றுக் கொண்டு நிமிர்வதற்குள் அவள் ஓடி விட்டாள்.

ராமசாமியின் அன்னை, என்ன நடக்கிறதென்று புரியாமலே ஓர் தனி உலகத்திலிருந்து யாரையோ வசை பாடத் தொடங்குகிறாள். ஆனால் அவள் அந்தத் தெருவில் நீண்ட கழியுடன் ஓடும் காட்சி, வறண்ட பொட்டலில் தீக்கொழுந்து போல் ஓர் மாங்கன்று துளிர்ந்தாற் போன்று அந்நியமாகத் தெரிகிறது. அவள் ஓடும் போது அள்ளிச் செருகிய முடி அவிழ்ந்து பறக்கிறது. தெருவில் சாதாரணமாகச் செல்லும் சைகிள்காரர், குடும்பக்காரர், கடைக்காரர் எல்லோரும் சட்டென்று திரும்பி நிதானித்துப் பார்க்கு முன் அவள் தெருத் திரும்பி விடுகிறாள்.

குப்பை மேடும் முட்செடிகளுமான இடத்தின் ஒற்றையடிப் பாதையில் அவள் புகுந்து விரைகிறாள். ஆங்காங்கு மண்ணில் ஓரமாக விளையாடும் சிறுவர் சிறுமியர் அவளை நின்று பார்க்கின்றனர்.

“ஐயா! எல்லாம் வாரும்! எல்லாம் வாருங்க! பனஞ்சோல அளத்துல ஆளுவளக் கொண்டிட்டு வாராவளாம்! வாங்க! அளத்துக்காரவுக வாங்க!”

அவள் உப்புத் தொழிலாளருக்குக் குரல் கொடுத்துக் கொண்டு ஓடுகிறாள். ஒரு தீப்பந்தம் புயற்காற்றுச் சூறாவளியில் பறந்து செல்வது போல் மணல் தேரியில் கம்பும் கையுமாக ஓடுகிறாள்.

“அளத்துப் பொண்டுவள்ளம் வாங்க! வாங்கட்டீ!” டீக்கடைப் பக்கம் சில இளைஞர் நிற்கின்றனர். ஒருவன் கையில் ‘டிரான்சிஸ்டர்’ வைத்துக் கொண்டிருக்கிறான். எங்கோ நடக்கும் பாரதி விழா நிகழ்ச்சிகளை அது அஞ்சல் செய்து கொண்டிருக்கிறது. மாமா அருணாசலமும் அங்கேதான் உட்கார்ந்து இருக்கிறார்.

“அளத்துக்காரவுக வாரும்! அக்கிரமத்தத் தட்டிக் கேக்க வாரும்!”

சிவப்புச் சேலையும் கம்புமாக யார் குரல் கொடுத்துக் கொண்டு ஓடுகிறார்கள்?

அந்தக் கூட்டம் தேரிக் காட்டில் அவளைத் தொடர, விரைந்து செல்கிறது. மணலில் கால் புதைய அவள் முன்னே ஓட்டமும் நடையுமாக போகிறாள்…

“ஆளுவளைக் கொண்டிட்டா வாரிய? வந்தது, வாரது ரெண்டில ஒண்ணு. பொறுத்திருக்கும் பூமி தேவியும் வெடிச்சிடுவால…! நாசகாலம் ஒங்கக்கா, எங்கக்கான்னு பாத்திடுவம்! நா கற்பு பெசகிட்டேன்னு சாபம் போட்டு மவன விட்டு ஆத்தாள வெட்டச் சொன்னா. அந்த ஆத்தாதா ஆங்காரத் தெய்வமானா, ஆங்காரத் தெய்வம்! எலே வாங்க! பனஞ்சோல அளத்துல ஆளெடுக்கிறாவளாம்! தடுக்க வாங்க!… வாங்க…”

அந்த ஒலியைக் காற்று மணல் வெளியெங்கும் பரப்புகிறது. அருணாசலம் அங்கேயே நிற்கிறார். உடல் புல்லரிக்கிறது.

பாண்டியன் அவையில் நியாயம் கேட்கச் சென்ற கண்ணகியோ? பாரதியின் பாஞ்சாலி இவள் தானோ? இந்த அம்மை, இவள் யார்? ஆண்டாண்டு காலமாக வெறும் பாவைகளாக, பூச்சிகளாக அழுந்தி இயலாமையின் சின்னங்களாக இருந்த சக்தியின் ஆவேச எழுச்சியோ?

“ஏய்? யாருலே? அளத்துல தொழிலாளியளுக்கு எதிரா ஆள கொண்டு வாராகளாம்! வாங்கலே, வந்து தடுப்போம் வாங்க?”

மாமனின் உள்ளத்திலிருந்து கிளர்ந்து வரும் ஒலி பாறையின் இடையே பீச்சும் ஊற்றுப் போல் ஒலிக்கிறது.

பனமரங்களும், முட்புதர்களும் நிறைந்த பரந்த மணற் காட்டில் அந்தக் கூட்டம் விரைந்து செல்கிறது.

 

முற்றும்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

கல்கியின் பார்த்திபன் கனவு – 49கல்கியின் பார்த்திபன் கனவு – 49

அத்தியாயம் 49 சூரிய கிரகணம் விக்கிரமனும் பொன்னனும் மண்டபத்தை அடைந்தபோது நன்றாக இருட்டிவிட்டது. இம்மாதிரி ஜன சஞ்சாரமில்லாத இடங்களில் வழிப்போக்கர்கள் தங்குவதற்காக அத்தகைய மண்டபங்களை அந்நாளில் கட்டியிருந்தார்கள். மகேந்திர சக்கரவர்த்தியின் காலத்தில் அவருடைய கட்டளையினால் கட்டப்பட்டபடியால் அவற்றுக்கு மகேந்திர மண்டபங்கள் என்ற

கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 33கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 33

அத்தியாயம் 33 – முத்தையன் எங்கே? முன் அத்தியாயத்தில் கூறிய சம்பவங்கள் நடந்து சுமார் இரண்டு மாதம் ஆகியிருக்கும். திருப்பரங்கோவிலில் ஸப்-இன்ஸ்பெக்டர் ஸர்வோத்தம சாஸ்திரி ஒரு நாள் மாலை மிகுந்த மனச்சோர்வுடன் வீட்டுக்குத் திரும்பி வந்தார். அவர் வரும்போது, உள்ளே,      “போது

சாவியின் ஆப்பிள் பசி – 34சாவியின் ஆப்பிள் பசி – 34

 கோமளம் சென்ற பிறகு சாமண்ணா கட்டிலில் போய் ‘தொப்’பென்று அமர்ந்தான். மூச்சு முட்டியது. இதயத்தை அமுக்கிக் கொண்டான். அந்த அதிர்ச்சியிலிருந்து விடுபட ஏக நேரம் ஆயிற்று. எனக்குத்தான் துக்கம் நிகழ்ந்துவிட்டது என்றால் என்னைத் தெரிந்தவர்களுக்குமா இந்த கதி! மகாலட்சுமி மாதிரி இருந்தாளே