Tamil Madhura தமிழ் க்ளாசிக் நாவல்கள் திருமதி ராஜம் கிருஷ்ணனின் ‘கரிப்பு மணிகள்’- 19

திருமதி ராஜம் கிருஷ்ணனின் ‘கரிப்பு மணிகள்’- 19

உப்பளத்து வேலை முடித்து நெடுந்தொலைவு நடந்து வருவது பொன்னாச்சிக்கு இப்போதெல்லாம் சோர்வாகவே இல்லை. பாஞ்சாலியும் பச்சையும் துணையாக வருவதனால் மட்டும் தானா இந்த மாறுதல்? இல்லை. அச்சமும் எதிர்ப்புமாக இருந்த உலகமே இப்போது நம்பிக்கை மிகுந்ததாகத் தோன்றுகிறது; இங்கிதமாகக் கவிந்து கொண்டிருக்கிறது. முட்செடிகள் முன்போல் தலைவிரிச்சிப் பிசாசுகளாகத் தோன்றவில்லை. ‘என்னம்மா?’ என்று கண்சிமிட்டி இரகசியம் பேசுகின்றன. யார் வந்தாலும் எதிர்த்து விட முடியும் என்று தோன்றுகிறது. இந்தத் தெம்புக்கு என்ன காரணம்?

புரட்டாசியில் நவராத்திரி விழா – எங்கு பார்த்தாலும் அம்மன் கொலுவிருக்கையும், பூசையும் பொங்கலும் அமர்க்களப்படும். அதற்கு முன்னர் மாளய அமாவாசையில் மழை மணி விழும் என்பார்கள். ஆனாலும் முக்காலும் விழாது. வேலை நீடிக்கும். மாமன் வந்து போயிருக்கிறார். பனஞ்சோலை அளத்தில் ஒரு ஆண்டு முழுதும் மழைக்காலம் வரையில் வேலை செய்தால் ஒரு சேலை எடுத்துக் கொடுப்பார்கள். கல்யாணமென்றாலும் பணம் இருநூற்றைம்பது கொடுப்பார்கள். மாமனுக்குக் கஷ்டம் அதிகமிருக்காது… பிறகு…

சாயாககடைப் பக்கம் ராமசாமி நின்று ஒரு சிரிப்பைச் சிந்துகிறான். அவனருகில் இன்னும் பல இளைஞர்கள் சூழ்ந்திருக்கின்றனர்.

“ஏதும் விசேசமா?” என்று அவன் கேட்கும் போது அவர்கள் எல்லோரும் சிரிக்கிறார்கள். அவளுக்கு ஏதோ மணமேடையில் மற்றவர் கேலி செய்வது போல நாணம் கவிகிறது.

பாஞ்சாலி வெடுக்கென்று, “இன்னிக்கு இனிஸ்பெட்டர் வந்தாவ, எங்கள எல்லாம் கொட்டடிலிலேந்து அந்தால பம்ப் கொட்டடி தாண்டி கோயில் செவர் மறப்புல ஒக்காத்தி வச்சிட்டா…” என்று சேதி தெரிவிக்கிறாள்.

“யாரு இனிஸ்பெட்டரு? போலீசா வந்திச்சி?” என்று அங்கு எட்டிப் பார்க்கும் ஒருவன் விசாரிக்கிறான்.

“அட, இல்லப்பா, ‘லேபர் இனிஸ்பெட்டர்’ வந்திருப்பா. பிள்ளங்களை ஒளிச்சி வைப்பா!” என்று ராமசாமி விளக்கம் கூறுகிறான்.

“என்னக் கங்காணி அடிச்சிட்டார்; தொழியத் தொறந்துவுடுன்னு அவியதா சொன்னா. பொறவு ஏண்டா தொறந்தேன்னு அடிச்சா. வேற தொழியல்ல தொறக்கச் சொன்னேங்கா. மூக்குலேந்து ரத்தம் வந்திச்சி” என்று பச்சை செய்தி தெரிவிக்கிறான்.

“இருக்கட்டும். எல்லாத்துக்கும் விடிவு காலம் வரும். நாமல்லாம் கோரிக்கை குடுப்பம். ஞாயிற்றுக்கிழமை வாரம்…”

பொன்னாச்சிக்குப் பூமியில் கால் பாவி நடப்பதாகவே தெரியவில்லை. வீட்டுக்குள் அவர்கள் நுழைகையில் அவர்கள் வீட்டு முற்றத்தில் இருள் பரவும் அந்த நேரத்தில் யாரோ கையில் பையுடன் நிற்கிறான். அரையில் பூப்போட்ட கைலியும், மேனியில் ஒட்டாத பாம்புத் தோல் போல் படம் போட்ட சட்டையும் அணிந்து கையில் கடியாரம் கட்டிக் கொண்டிருக்கிறான். மோதிரம் விரலில் பளபளக்கிறது. முடியில் வாசனை எண்ணெய் தொட்டு சீவியிருக்கிறான். அருகில் வரும் போதுதான் திடுக்கிட்டாற் போல் நிற்கிறாள். சிரித்துக் கொண்டு அவளிடம் பையை அவன் நீட்டுகிறான்.

தங்கபாண்டி… தங்கபாண்டி எதற்கு வந்திருக்கிறான்? அவள் பையை வாங்கிக் கொள்ளாமல் தயங்கி நிற்கிறாள். அப்போது சரசி ஓடி வந்து, “அக்கா, மாமா ஊரிலேந்து இவ ஒன்னப் பாக்க வந்திருக்கா…” என்று செய்தி அவிழ்க்கிறாள்.

“சின்னம்மா வரல சோலி முடிஞ்சி?”

“நல்ல தண்ணிக்குப் போயிருக்கா…”

“வாங்கிக்க பொன்னாச்சி! மாமா தா என்ன அனுப்பினா.”

“மாமா சொகந்தானா? மாமி புள்ளிய எல்லாமும் எப்படியிருக்கா? போன வாரந்தா மாமா வந்திட்டுப் போனா…”

“சொகந்தா. ஆனா… மாமாவுக்கு வாயுக்குத்து மூச்சுக் குத்து வந்து படுத்திருக்காவ, அதா என்ன அனுப்பிச்சாவ. கூட்டிட்டுவான்னு சொன்னாவ…”

“ஒம்ம அனுப்பிச்சாவளா?”

அவள் கேட்டுக் கொண்டு அவனைச் சட்டை செய்யாமல் உள்ளே சென்று தாழிட்ட கதவைத் திறக்கிறாள்.

பச்சையிடம் அவன் பையைக் கொடுக்கிறான்.

“என்ன அது?”

“ஒண்ணில்ல பொண்ணாச்சி… கொஞ்சம் சேவும் மிட்டாயும் வாங்கியாந்த. பொறவு கட்டிக்கப் போற பொண்ண வெறுங்கையோட பாக்க வருவனா?” அவன் சிரிப்பு – வெண்மையான பற்கள் இருட்டில் கள்ளமில்லாததாகப் பளிச்சிடுகிறது. ஒரு கணம் அவள் குலுங்குகிறாள்.

“மாமன் இந்த அப்பியியிலியே கலியாணத்த முடிச்சிடலாண்ணு சொன்னாவ. அத அங்க பாத்திக் காட்டு அனுப்பியிருக்கிறாவ. திரிச்சிக் கூட்டியாந்துடணும், ஒடம்பு முடியாம போச்சின்னாவ. தீர்வ கட்டல. முன்சீஃபு ஆளுவள வுட்டு உப்ப வாரிட்டுப் போயிட்டா. பொறவு நாந்தா அஞ்சு நூறு கடங்குடுத்த. தூத்தூடி போயி அத்தக் கூட்டிட்டு வந்திருன்னாவ…”

இவனும் குடித்திருப்பானோ என்ற ஐயம் கொண்டு அவள் பார்க்கிறாள். நிச்சயமாக மாமா இப்படிச் சொல்லி இவனுடன் புறப்பட்டு வர அனுப்பி இருக்க மாட்டார்! வேலுவை அனுப்பினாலும் அனுப்பியிருப்பார்! வேலு கால் பரீட்சை முடிந்து ஊர் திரும்பியிருப்பானோ?

“எப்படின்னாலும் நானிப்ப உம்மகூடப் புறப்பட்டு வரதுக்கில்ல. மாமாவுக்கு ஒடம்பு முடியலின்னா சங்கட்டமாத்தானிருக்கு. இன்னிக்கி விசாளன். வெள்ளி போவ நாயித்துக்கிளம நா வார, இல்லாட்டி பச்சைய அனுப்புறமின்னு சொல்லும்…”

அவன் மேல் பேச்சுப் பேசுவதற்கே இடமில்லாமல் அவள் உள்ளே சென்று விடுகிறாள்.

தங்கபாண்டி பையைத் திரும்பப் பெற்றுக் கொண்டு ஏமாற்றத்துடன் அங்கிருந்து அகலுகிறான்.

மாளய அமாவாசையன்று மழை மணி விழும் என்று எதிர்பார்ப்புடன் உப்பளத்தில் கெடுபிடியாக வேலைகள் நடக்கும். மழை மணி விழுந்துவிட்டால் உப்புக்காலம் தூத்துக்குடியில் ஓய்ந்துவிடும் என்று தீர்த்து விடுவதற்கில்லை. பருவ மழை நாகப்பட்டணம், பாண்டிச்சேரி, கேரளத்துக்கரை என்று எங்கு அடித்துக் கொட்டினாலும், புயல் சுழன்று அடித்தாலும் தூத்துக்குடி உப்புக்குப் பெருஞ்சேதம் விளைவிக்க உடனே வந்து விடாது. உப்புக்காலம் தீபாவளியையும் தாண்டி நீடிப்பதுண்டு. ஆனால், மழை மணி விழுந்தால் உப்பு விலை ஏறும். தொழிலாளருக்கு வேலை கடுமையாகும். மழை அவர்களுக்குச் செழிப்புக்கும் வண்மைக்கும் பயன்படாததாகத் தொழிலை முடக்கி, முதலாளிகளுக்கு லாபத்தைக் கொண்டு வரும். அந்த லாபம் தொழிலாளருக்கு உபரியாக வண்மை கூட்டாது. எனவே அந்தக் காலங்களில் மிகத் தீவிரமாக உப்பை வாரித் தட்டு மேடுகளில் சேர்ப்பதும், மழையில் கரையாமல் ஓலைத் தடுப்புப் போடுவதும், அல்லது விரைவாக விற்று மூட்டைகளாக்கி விலை ஏற்ற காலத்தில் அம்பாரங்களைக் கரைப்பதுமாகப் பணிகள் நெருக்கும்.

இந்தக் காலத்தில் தொழிலாளர் அனைவரும் திரண்டு மேலிடத்துக்குத் தங்கள் கோரிக்கைகளை வைத்தால்? முக்கியமாகப் பனஞ்சோலை அளத்திலும் தொழிலாளர் ஒன்று பட வேண்டும்!

‘ஞாயிற்றுக்கிழமை வாரன்’ என்ற சொல் பொன்னாச்சியின் செவிகளில் ஒலித்துக் கொண்டுதானிருக்கிறது. சின்னம்மா, அதிகாலையில் நான்கு மணியிலிருந்து ஆறு மணி வரையிலும் உப்பு அறைவை ஆலையில் அதிகப்படி வேலை என்று மூன்று மணிக்கே எழுந்து போகிறாள். சரசிக்கு சங்கமலத்தாச்சியின் வீட்டில் படுக்கை. அதிகாலையிலேயே பொன்னாச்சி எழுந்து கிணற்றிலிருந்து தண்ணீர் இறைத்து வந்து நிரப்பி, வீடு பெருக்கி, பாண்டம் கழுவித் துப்புரவு வேலைகளில் ஈடுபடுகிறாள். அப்பன் எழுந்து பின்புறம் செல்கிறார்.

செங்கமலத்தாச்சி வழக்கம் போல் வாயிற்படியில் அமர்ந்து சாம்பற் கட்டியை வைத்துப் பல் துலக்குகையில், ராமசாமி, பழனிவேலு, மரியானந்தம், மாசாணம் எல்லோரும் வருகின்றனர்.

“ஒங்களப் பாத்துப் போகத்தா வந்திருக்கம் ஆச்சி…” என்று ராமசாமி புன்னகை செய்கிறான்.

“எல, பொய் சொல்லாத! பொய் சொன்னா அரக் கஞ்சியும் கெடக்காது!”

அவன் கலகலவென்று சிரிக்கிறான். கண்கள் சிவந்து இருக்கின்றன. முடிசீவி, புதுமையாக அவன் தோற்றமளித்தாலும் தூங்கியிராத அயர்வு அவன் முகத்தில் தெரிகிறது.

“சத்தியமா ஆச்சி, ஒங்களத்தா பார்க்க வந்தது. இங்க, தொழிலாளர் பொண்டுவள ஒண்ணு சேக்கணுமின்னு ஒங்களத்தா கேக்க வந்தே…”

“பொண்டுவள ஒண்ணு சேக்கறதா? ஆதி நாள்ளேந்து அது முடியாத காரியமின்னு தீந்து போயிருக்கே. ஒனக்குத் தெரியாதால?” என்று கேட்டுவிட்டு ஆச்சியே பதிலையும் கூறிக் கொள்கிறாள்.

“ஆனா ஒனக்கெப்படித் தெரியும்? ஒங்கப்பச்சிக்கு ஆத்தா முதல்லியே செத்திட்டா. அவியளோட பொறந்தவெல்லாம் ஸ்லோன்ல கெடக்கா. மாமி நாத்தி மயினி சண்டை, சக்களத்தி சண்ட ஒண்ணும் பாத்திருக்க மாட்ட. பொண்டுவள ஒண்ணு சேக்கணுமின்ற; அது ஆவாத காரியமல்ல!”

“ஏட்டி சரசி! ரூம்ப பெருக்கிப் போடுறீ?” ஆச்சி மகிழ்ச்சியான நிலையில் தானிருக்கிறாள் என்று ராமசாமி புரிந்து கொள்கிறான்.

சரசி பரபரவென்று முன்னறையைப் பெருக்கித் தள்ளுகிறாள். பாதி முடைந்த ஓலைப் பெட்டியை நகர்த்தி வைத்துப் பெஞ்சியைத் துப்புரவாக்குகிறாள்.

“வாங்க, உள்ள வந்து இரிங்க…”

செம்பு நீரெடுத்துப் பின்புறம் சென்று வாய் கொப்புளித்து விட்டு சேலைத் தலைப்பால் முகத்தைத் துடைத்துக் கொண்டு வருகிறாள்.

நெற்றியில் நீண்ட பச்சக்கோடு. இடது புறங்கையில் ஒரு யாகசாலைக் கோலம். கைத்தண்டின் உட்புறம் மூன்றெழுத்துக்கள் தெரிவதை ராமசாமி கவனிக்கத் தவறவில்லை. அது முத்திருளாண்டியின் பெயரல்ல. அவர்கள் பெஞ்சியில் அமர்ந்து கொள்கின்றனர்.

“ஏட்டி, ஒரு ஏனத்தை எடுத்திட்டுப் போயி இட்டிலி வாங்கிட்டு வா. சாம்பாருக்கு தூக்குக் கொண்டு போ!” மீண்டும் உள்ளே சென்று மெதுவான குரலில் சரசிக்குக் கட்டளை இடுவது அவர்கள் செவிகளில் விழுகிறது.

சரசி சொக்குவின் வீட்டுப்படியில் பெரிய போகணியை வைத்துக் கொண்டு நிற்கும் போதுதான் திண்ணை மெழுகும் பொன்னாச்சி பார்க்கிறாள். போகணியைக் கொண்டு வந்திருக்கிறாள் இட்டிலிக்கு?
“ஆரு வந்திருக்கிறது டீ? ஆரு?”

“அவியதா, ஆரெல்லாமோ வந்திருக்கிறாவ…!”

பொன்னாச்சி முற்றத்துக்குப் பத்து வயசுச் சிறுமியாக ஓடி வந்து, சன்னல் வழியாகப் பார்க்கிறாள். அவன் குரல் கேட்கிறது.

“ஆச்சி, ஏனிப்படி செரமப்படுறிய? நாங்க டீ குடிச்சிட்டுத்தா வாரம்!”

“அது தெரியும்ல!…” என்று இலைக்கிழிசல்களில் இட்லியும் சட்னியும் எடுத்து வைக்கிறாள்.

“போயி ஆறுமுவத்தின் கடையில், நல்ல டீயா, நாலு டீ, ரொம்பச் சக்கரை போட்டுக் கொண்டாரச் சொல்லிட்டு வா!” என்று விரட்டுகிறாள்.

அவர்கள் சாப்பிடுவதைப் பார்த்துக் கொண்டு அவள் நார்க்கட்டிலில் அமர்ந்திருக்கிறாள். எல்லோரும் வீச்சும் விறைப்புமாக வளர்ந்திருக்கும் வாலிபப் பிள்ளைகள். ஊட்டமும் செழுமையுமில்லாமல் இல்லாமையும் சிறுமையும் நெருக்கினாலும் வாலிபம் கிளர்ந்தெழும் பிள்ளைகள். அவர்கள் அங்கே சாப்பிடுவதைப் படத்திலிருந்து அவன் பார்த்துக் கொண்டிருக்கிறான். காலையில் எழுந்ததும் அவனுக்கு நான்கு இட்டிலியும் சொக்கு கொண்டு வந்து வைத்து விடுவாள். அதைக் கண்ட பிறகுதான் அவன் எழுந்து முகம் கழுவிக் கொள்வான். அந்தப் பெஞ்சியில் தான் அவன் படுத்திருப்பான்; உட்கார்ந்து பேசுவான், படிப்பான். அவன் போன பிறகு அவள் இட்லி தின்பதையே விட்டுவிட்டாள். பையன் தேநீர் கொண்டு வருகிறான். அதை அவளே அவர்களுக்கு எடுத்துக் கொடுக்கிறாள்.

“நீங்க ஒண்ணும் எடுத்துக்கலியே ஆச்சி?” “நா சாயா குடிக்கமாட்டே. இதா கருப்பட்டி போட்டு நீரு கொதிக்கவச்சி ரெண்டு காப்பித்தூளப் போட்டு எறக்கி வச்சிடுவ. அதுதா. வெத்தில பொவயில. நா இட்டிலி டீத்தண்ணி ரெண்டும்…” தொண்டை கம்மிப் போகிறது. எழுந்து வெளியே செல்கிறாள்.

“ஏட்டி? பொன்னாச்சி? இங்ஙன வாட்டீ! மாப்பிள வந்திட்டான்னு ஒளிஞ்சிக்கிற?… சின்னாச்சி என் சேறா?”

“அப்பச்சியக் கூப்பிடுடீ!”

“சின்னம்மா வெள்ளெனவே அறவ மில்லுக்குப் போயிருக்காவ, இத வந்திருவா. அப்பச்சி பல்லு வெளிக்கிட்டிருக்காவ…”

“அவியல்லாம் தொழில் சம்பந்தமா பேச வந்திருக்கா… ஒரு விடிவு காலம் வராண்டாமா? பொண்டுவதா கூடிச் சேரணுமின்னு வந்திருக்கா. பாஞ்சாலியவுட்டு இந்த வளவில இருக்கிற அளத்துப் பொண்டுவ, வித்து மூடக்காரவுக எல்லாரையும் கூட்டிட்டு வாரச் சொல்லு? செவந்தகனி மாதா கோவிலுக்குப் போறவுல இசக்கிமுத்து, ஜீனத்து வாராளே, அவ அண்ண, எல்லாரிட்டயும் ஆச்சி கூட்டியாரச் சொன்னான்னு சொல்லு…”

சற்றைக்கெல்லாம் அங்கே திமுதிமுவென்று கூட்டம் கூடி விடுகிறது. முற்றத்தில் வந்து ஆங்காங்கு குந்துகின்றனர்.

“மூடை அம்பது கிலோன்னு போட்டுக் கூலியைக் குறைச்சிட்டாங்க. ஒம்பது பைசான்னு, அதைச் சொல்லணும்?” என்று இசக்கிமுத்து நினைவுபடுத்துகிறான்.

“இப்ப நாம முக்கியமா இதுவரய்க்கும் சேராத ஆளுகளைச் சேர்க்கிறதா பார்க்கணும். பனஞ்சோல அளத்துத் தொழிலாளியளை இதுவரைக்கும் ஒரு வேல நிறுத்தத்திலும் ஆரும் ஈடுபடுத்தல; நாம வேற பக்கம் அடிபிடின்னு நின்னு போராடி பத்துப் பத்துப் பைசாவா கூலி கூட்டிட்டு வந்திருக்கம். அங்கேயும் அது போல இருக்கிற அளங்கள்ள தா தொழிலாளிய ஏமாத்தப்படுறாங்க. பச்சப் புள்ளியள ரெண்டு ரூவாக் கூலி மூணு ரூவாக் கூலின்னு ஆச காட்டி அதுங்களுக்கு எதிர்காலம் இல்லாம அடிக்கியா. அவியளுக்குப் படிப்பு, அறிவு விருத்திக்குத் தொழில் பயிற்சி எதுக்கும் வாய்ப்பு இல்ல. இந்தத் தடவை நம்ம உப்புத் தொழிலாளிய, ஆலைத் தொழில் சட்டத்துக்குக் கொண்டு வாரணும். நம் ஒவ்வொருத்தரும் பதிவு பெற்ற தொழிலாளின்னு மாறணும் முப்பது வருசம் வேலை செஞ்சாலும் நம்ம பேரு அவங்க பேரேட்டில் இல்ல. முதலாளிக்கும் தொழிலாளிக்கும் ஒரு சம்பந்தமுமில்ல. முக்கியமா இதுக்கெல்லாம் போராடணும்…”

ராமசாமி சொல்லிக் கொண்டே போகிறான்.

“பொண்டுவல்லாம் எதெது சொல்லணுமோ சொல்லுங்கட்டீ!” என்ற செங்கமலத்தாச்சி, உள்ளே சென்று அந்த செல்ஃபில் வரிசை குலையாமல் வைத்திருக்கும் நோட்டுப் புத்தகங்களிலிருந்து ஒன்றை உருவிப் புரட்டிப் பார்க்கிறாள். அதில் அவன் பெயர் மட்டும் தான் எழுதி இருக்கிறான். உள்ளே தாளெல்லாம் எங்களைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்றுரைக்கின்றன. அவனுடைய பேனா.. பேனா. பேனா மாதிரி பென்சில்…

தூசி தட்டி வைக்கும் பொருள்கள். அதை எடுத்துக் கீறிப் பார்க்கிறாள். பிறகு அவற்றைக் கொண்டு வருகிறாள்.

“எல்லாம் கேட்டு ஒளுங்கா வரிசையா எளுதிக்கிங்க!”

“மரியானந்தம் அண்ணாச்சி காயிதமும் பேனாவும் கொண்டு வந்திருக்கானே? அதுக்குத்தானே அவெ வந்தது?”

இருந்தாலும் ஆச்சி கொடுத்த நோட்டை வாங்கிக் கொள்கிறான் ராமசாமி. அதில் ஒவ்வொரு கோரிக்கையையும் கேட்டு அவன் எழுதிக் கொள்கிறான்.

நண்பகல் கடந்து வெயில் இறங்கும் வரையிலும் அவர்கள் பொழுது போவது தெரியாமல் பேசுகின்றனர். பிறகு ஒவ்வொருவராகக் கலைந்து போகின்றனர்.

பொன்னாச்சி உள்ளே சோறு வடிப்பதும், வெளியே வந்து பேச்சைக் கேட்பதுமாக அலைபாய்கிறாள். எல்லோரும் கலைந்த பின்னரே நினைவுக்கு வருகிறது. பாஞ்சாலிதான் கவலையுடன் கேட்கிறது, “அக்கா, அம்மா ஏ இன்னும் வரல? அறவை மில்லுக்குப் போயிட்டுக் காலம வந்திடுமே? ஏ வரல…”

அடிமண் ஈரமாகக் கை வைத்ததும் பொல பொலவென்று சரிந்தாற் போல் ஓர் உணர்வு குழிபறிக்கிறது.

‘சின்னம்மா பொழுது சுவருக்கு மேல் ஏறியும் ஏன் வரவில்லை?’

“அப்பச்சி? சின்னம்மா வரயில்லை…? பச்சயப் போயிப் பாக்கச் சொல்லலாமா? செவந்தகனி மாமனக் கூப்பிடுடீ…”

அவள் வாசலுக்கு வருகிறாள். செங்கமலத்தாச்சி வாயிற் படியில் நிற்கிறாள். சைக்கிளை வைத்துக் கொண்டு ஒரு ஆள் அங்கு ராமசாமியிடம் ஏதோ கூறிக் கொண்டிருக்கிறான்.

அவன் முகம் கறுக்க அவர்களை நாடி வருகிறான்.

“பேச்சியம்மன் அளத்துல காலம ஆரோ லாரி அறபட்டுப் பொம்பிள கெடந்தாளாம். ஆசுபத்திரில போட்டிருக்காம். இவ விசாரிச்சிட்டு வந்திருக்கா… சின்னாச்சி கருவேலக் காட்டு அளமில்ல?”

“ஐயோ…!” என்று ஒலி பீறிட்டு வருகிறது.

“சின்னம்மா… சின்னம்மா அங்கதா அதியப்படி வேலன்னு போனாவ… சின்னம்மா…”

பாஞ்சாலியும் சரசியும் அக்காவின், அழுகையொலி கேட்டு விம்மி அழத் தொடங்குகின்றனர். கண்ணுசாமியோ இடி விழுந்தாற் போல் உட்கார்ந்து விட்டான்.

சோறு வடித்து, தட்டு போட்டிருக்கிறாள். சாப்பிட உட்காரவில்லை. எல்லோரையும் பெரியாசுபத்திரிக்கு அழைத்துச் செல்கிறான் ராமசாமி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

சாவியின் ஆப்பிள் பசி – 13சாவியின் ஆப்பிள் பசி – 13

சாமண்ணா சிறிது நேரம் பிரமித்து நின்றான். கோமளத்தின் அசைக்க முடியாத வாதங்கள் அவனுடைய அடித்தள நம்பிக்கையை அசைத்து விட்டன. கண்களில் அவனது அம்மா மின்னி மறைந்தாள். விசாலாட்சி என்று பெயர். ஒரு காலத்தில் விசாலமாக இருந்த அவள் கண்கள் வயது அறுபத்தைந்தை

சாவியின் ‘ஊரார்’ – 08சாவியின் ‘ஊரார்’ – 08

8 ஐந்தாம் நாள் காலை. இந்த நாலு நாள் காய்ச்சலில் சாமியார் அரை உடம்பாகிவிட்டார். குமாருதான் அவரைக் கூடவே இருந்து கவனித்துக் கொண்டான். வேளை தவறாமல் மருந்து கொடுத்தான். தலை அமுக்கி விட்டான். கஞ்சி கொடுத்தான். “இட்லி சாப்பிட்றீங்களா?” “ஏதுடா?” “கமலா

கல்கியின் பார்த்திபன் கனவு – 51கல்கியின் பார்த்திபன் கனவு – 51

அத்தியாயம் 51 காளியின் தாகம் பேச்சுக்குரல் நெருங்கி வருவதாகத் தோன்றவே, பொன்னன் விக்கிரமனை மண்டபத்துக்குள் ஒதுக்குப்புறமாக இருக்கச் சொல்லிவிட்டு எட்டிப் பார்த்தான். மண்டபத்தை நோக்கி இரண்டு பேர் வருவது தெரிந்தது. ஆனால் இருட்டில் முகம் ஒன்றும் தெரியவில்லை. அப்போது பளீரென்று ஒரு