Tamil Madhura தமிழ் க்ளாசிக் நாவல்கள் திருமதி ராஜம் கிருஷ்ணனின் ‘கரிப்பு மணிகள்’- 11

திருமதி ராஜம் கிருஷ்ணனின் ‘கரிப்பு மணிகள்’- 11

அருணாசலம் வாரு பலகை கொண்டு பளிங்கு மணிகளாகக் கலகலக்கும் உப்பை வரப்பில் ஒதுக்குகிறார். ஆச்சி வேறொருபுறம் அவர் முதல்நாள் ஒதுக்கிய உப்பைக் குவித்துக் கொண்டிருக்கிறாள். தொழிக்குக் கிணற்றிலிருந்து நீர் பாயும் சிற்றோடையில் குமரன் குச்சியை வைத்து விளையாடிக் கொண்டிருக்கிறான்.

சரேலென்று, “அப்பச்சி! தங்கபாண்டி வண்டி கொண்டாரா?” என்று கூவுகிறான். தங்கபாண்டி வண்டி ஓட்டிக் கொண்டு வந்தால் அப்பச்சியிடம் காசு புரளும் என்று அவனுக்குத் தெரியும்.

டகடக வென்று ஓசை கேட்கிறது. பசுமஞ்சளாய்க் குழியில் தேங்கியிருக்கும் நஞ்சோடை நீரில் சக்கரம் இறங்க, அவன் மாடுகளை ஓட்டிக் கொண்டு வருகிறான்.

கன்னங்கரேலென்ற வெற்று மேனியில் வேர்வை வழிகிறது. குட்டையாக இருந்தாலும் களையான முகம், சிறுகச் சிறுகப் பணம் சேர்த்து சொந்த வண்டி மாடு வாங்கிவிட்டான். துரும்பைப் பல்லில் கடித்துக் கொண்டு, “எத்தினி மூடையிருக்கு மாமா?” என்று கேட்கிறான்.

“நீ வெல சொல்லுலே?”

“என்ன மாமா, புதுசா வெல கேக்குறிய?…ஆச்சி! மூடை போடலாமா?”

இவன் சாக்குகளைக் கீழே போடுகிறான்.

அருணாசலம் பாத்தியை விட்டு மேலே வந்து அவன் உப்பில் கைவைக்காத வண்ணம் மறிக்கிறார்.

“லே, வெல முடிவு செய்யாம உப்புல கைவைக்காத!” அவன் பளீரென்று பற்கள் தெரியக் கலகலவென்று சிரிக்கிறான்.

“சரி மாமா, வெல சொல்லும். உமக்கு இல்லாத வெலயா? நீரு கேக்றதக் குடுத்தாப் போச்சி?”

“ஏலே சக்கரயாப் பேசிட்டாப்பல ஆச்சா? ஓட தாண்டிட்டா அத லாரி நிக்கிது. நீ அவுங்க மூடைக்கு, என்ன வாங்குவியோ, அதல அரை ரூவா கொறச்சிக்க…”

“சரி மாமா, ஒம்ம பொன்னான கையால போடும்…” அவன் சாக்கை விரித்துப் பிடிக்கிறான்.

“ஏன்லே, நான் சொல்லிட்டே இருக்கிறே, நீ சிரிக்கிறே?”

“என்ன மாமா, நீங்க எவ்வளவு வேணுமின்னு சொல்லுங்க. மூடைக்கு அஞ்சு ரூவா தார…”

“இந்தப் பேச்செல்லாம் வேண்டா. மூடை ரெண்டரை ரூவா, காசைக் கீழ வச்சிட்டு மூடை போட்டுக்க…”

தங்கபாண்டி “சரி மூடை ரெண்டரை” என்று மடியைத் திறந்து ஒரு பத்து ரூபாய் நோட்டு எடுக்கிறான்.

“வச்சிக்கும் அடுவான்ஸ்…”

பன்னிரண்டு மூடைகள் இருக்கின்றன. அவனே மூட்டையினைப் பற்றி ஏற்றுகிறான். வண்டி கடகடவென்று ஆடிச் சரிந்து கொண்டு மெல்லப் பாதையில் செல்கிறது.

ஒவ்வொரு முறையும் இதுபோல்தான் அவரும் பேசுவார். அவனும் நைச்சியமாக விட்டுக் கொடுக்காமலே இழுத்தடிப்பான்.

பத்து ரூபாய் வந்த மாதிரி மீதிப்பணம் வராது.

அவரும் கேட்டுக் கேட்டு அதிகப்படியே வாங்கிக் கொண்டு உப்புக்கு வகை வைப்பார்!

அவர் ஆச்சி மண் குடத்தில் வைத்திருக்கும் நல்ல நீரைச் சரித்துக் குடிக்கிறார்.

“என்ன இப்பப் போய் தண்ணி குடிக்கிறிய? சோறு கொண்டாந்திருக்கேனே வேணாவா?”

“தண்ணி குடிக்கிறதுக்கு கூட ஏன் காருவாரு?”

“ஏலே, வால…” என்று குமரனையும் அழைத்துக் கொண்டு ஆச்சி சாப்பாட்டுக்குத் தயாராகிறாள்.

சிறு பன ஓலைச் சார்பில் அவர்கள் அமருகின்றனர். மூடி வைத்திருக்கும் களியையும் துவையலையும் வாழையிலைச் சருகில் எடுத்து வைக்கிறாள்.

“முனிசீப்பு வீட்டில் ஆச்சி நெல்லு வேவிக்கணுமின்னாவ, நாளக்கி வாரமின்ன…”

அவர் களியை எடுத்து முகர்ந்து பார்க்கிறார். “தண்ணி நல்லாக் காஞ்சுப் போட்டுக் கிண்டலியா? வேத்துப் போச்சு. சளிச்ச வாடை வருது.”

“வீட்ட ஒரு தண்ணிகாச்ச நாதியில்ல. பொன்னாச்சிய நா அனுப்பிச்சே குடுத்திருக்க மாட்டே. புருசன் இப்ப சாவக்கெடக்கான்னு பொய் சொல்லி, அளத்துக்கு விட்டுச் சம்பாதிக்கக் கூட்டி போயிருக்கா…”

அவருக்குக் கோபம் வருகிறது.

“பேச்சை ஏன் மாத்துறே? களி வாயில வைக்க வழங்கல? நீ ஒரு சோறு ஒழுங்காக ஆக்குறதில்ல. பேச்சு… பேச்சுதா!”

“நா கேட்டதுக்குப் பதிலே சொல்ல மாட்டிய! தூத்தூடிக்குப் போய் வந்திய. எம்புட்டுச் செல்வாச்சி… எதானாலும் இப்ப அந்தத் துட்டை எங்கிட்டக் குடுத்திடணும். வள்ளிப் பொண்ணுக்கு ஸ்கூலுக்குப் போட்டுப் போக வெள்ள சட்ட இல்லேங்கா…”

அவர் பேசவில்லை. பொன்னாச்சி வீட்டை விட்டுச் சென்ற பிறகு சோறும் கூட அவருக்கு வகையாகக் கிடைக்கவில்லை. அவளும் தம்பியும் அவருக்குப் பாரமாகவா இருந்தார்கள். பச்சை நாள் முழுதும் துலாவில் நீரிறைத்துப் பாய்ச்சுவான். பொரிகடலை வாங்கிக் கொள்ள என்று பத்து பைசா துட்டு கொடுத்தால் வாயெல்லாம் பல்லாக நிற்பான். இரண்டு பேரும் அன்று யாருக்கோ உப்புச் சுமந்து கொட்டி விட்டு வருவதை அவர் பார்த்து விட்டு வந்திருக்கிறார். அவளை இங்கு மறுபடியும் வேலை செய்யக் கூட்டி வரக்கூடாது. ஆனால், அவளுக்குக் கல்யாணம் என்று ஒரு வளமையைச் செய்ய அழைத்து வர வேண்டும். கல்யாணம் என்ற நினைவுடன் தங்கபாண்டியின் முகம் தான் உடனே தோன்றுகிறது. அவர் கண்முன் முன்னுக்கு வந்திருக்கிறான். அப்பன் அம்மை யாருமில்லை. ஒரே ஒரு அண்ணன் இருக்கிறான். அவனும் உப்பு வாணிபம் தான் செய்கிறான். இந்தப் பையனுக்கும் பொன்னாச்சியின் மீது ஆசை இருக்கிறது. அவளுக்கென்ற துண்டு முக்கால் ஏக்கரை ஒதுக்கினால் பாடுபட்டுக் கொள்வார்கள். செவந்திப் பெண்ணின் கழுத்திலிருந்த தாலியை அவர் பத்திரமாக வைத்திருக்கிறார். ஒரு சேலை துணி வாங்கி, செந்தூர் முருகன் சந்நிதியில் அவளை மணமுடித்துக் கொடுத்து விட வேண்டும்.

“….”

“என்ன, நாங்கேக்கேன். பேசாம இருக்கிய… எனக்கு வீட்டில எண்ணெயில்ல, புளி இல்ல…” என்று மனைவி கை கழுவி விட்டு அவர் மடியைப் பிடித்துப் பார்க்கிறாள்.

அவர் இடது கையால் அழுந்திப் பிடித்துக் கொண்டு அவளை அண்ட விடாமல் ஒதுக்குகிறார்.

“கவுறு வாங்கணும். கிணறு வாராம அடுத்த உப்பு எடுக்கறதுக்கில்ல. நீ வம்பு பண்ணாத இப்ப!”

“இந்த மாசம் எனக்கு இருவது ரூபா குடுத்திருக்கிய. நா என்னேய! இப்ப அந்தக் காச எனக்குத் தரணும்…”

“மாத்தித்தாரன்…”

“அப்பச்சி, எனக்குக் காசு வேணும்…” என்று குமரன் முன்னேற்பாடாகக் கேட்டு வைத்திருக்கிறான்.

“எங்கிட்டதா ஒங்க காருவாரெல்லா. பொன்னாச்சியையும் பயலையும் கூட்டிட்டு வாரன்னு போனிய, உப்பளத்து வேலைக்கிப் போறான்னு சொல்லிட்டு வந்திருக்கிய. இங்க பக்கத்துல புள்ளயோடு புள்ளயா வேலக்கிப் போவட்டும்னு நாஞ்சொன்னா இடிக்க வந்திய. அதுக்குத்தா நாலு காசு கையிலிருக்கும். ஒரு சீல ஜாக்கெட் என்னேனும் எடுக்கலான்னு சொன்ன. அப்ப ஏங்கிட்டப் பேசுனதொண்ணு. இப்ப ஊருல என்ன சொல்றா? அந்த வுள்ளக்கி சோறு கூடப் போடல, அப்பங்கிட்ட வெரட்டிட்டான்னு சொல்றா! என் தலயெளுத்து…”

மூசு மூசென்று அழத் தொடங்கியவளாக அவள் பானையை எடுத்துக் கொண்டு வீட்டைப் பார்க்க நடக்கிறாள்.

அவருக்கு இது பலவீனப் பகுதி. உண்மையில் அன்று அவர்களை அழைத்து வரவேண்டும் என்று தான் சென்றார். ஆனால், பொன்னாச்சி அங்கிருந்து வரவேண்டும் என்று விரும்பியதாகத் தெரியவில்லை. இங்கே மனைவி அவளை எப்போதும் பிடுங்கிக் கொண்டிருந்தாள். தன் கண் முன் இன்னொரு பாத்திக் காட்டுக்கு அவளை அனுப்ப அவர் மனம் துணியவில்லை. பிறகு அந்தக் காசும் அவள் கையில் தங்காது. இப்போது… எங்கேனும் வட்டிக் கடனேனும் வாங்கி தங்கபாண்டிக்கு அவளை மண முடித்து விட வேண்டும்.

வீட்டுக்கு வந்ததும் பத்து ரூபாய் நோட்டை மாற்றி வந்து அவளிடம் ஐந்து ரூபாயைக் கொடுக்கிறார். குஞ்சரி கணக்குப் போட்டுக் கொண்டு இருக்கிறது. உள்ளே வந்து சட்டையை ஆணியில் இருந்து எடுக்கையில் கீழே கட்டம் போட்ட தொங்குபை வீற்றிருக்கிறது. “வேலு வந்திருக்கிறானா? – எப்ப வந்தா?”

“அண்ணன் வந்திட்டா அப்பவே…”

“பரீட்சை நல்லா எழுதியிருக்கிறனாமா? எங்க போயிட்டாரு துரை?” எதுவும் பதில் வரவில்லை.

அவருக்குக் கோபமாக வருகிறது; பெரிய துரை போல் செருப்பு, சட்டை! அவன் முடியும், காலில் போட்டுக் கொள்ளும் யானைக் குழாயும்!

தீர்வையை நினைவுறுத்தி வந்த கடிதத்தை அன்று பெட்டிக்குள் வைத்துவிட்டுப் போனார். மேலே பலகையில் இருந்து அதை அவர் எடுக்கிறார். பழைய தகரப் பெட்டி, அதில்தான் அவருடைய கூட்டுறவுச் சங்கக் காகிதங்கள், பத்திரம், வேலுவின் கல்லூரிப் படிப்பு உதவிச் சம்பளக் காகிதங்கள் எல்லாம் இருக்கின்றன.

அதைத் திறக்கும் போதெல்லாம் ஒரு கோடித் துணியில் முடிப்புக் கட்டி வைத்திருக்கும் செவந்திப் பெண்ணின் அரைப் பவுன் தாலியைப் பார்க்காமலிருக்க மாட்டார். இன்னும் பழக்கத்தில் அந்தக் காகிதங்களை எடுத்துப் பார்க்கையில் பகீரென்றது. துணி அவிழ்ந்து கிடக்கிறது. அது… அது எங்கும் இல்லை. அவர் உதடுகள் துடிக்கின்றன. நெற்றி நரம்புகள் புடைக்கின்றன.

“ஏளா?… பொட்டிய ஆரு திறந்தது? பொட்டிய ஆரு திறந்ததுன்னே?…”

அவர் குரலில் கனல் கொப்புளித்துச் சீறுகிறது. அந்தச் சீறலுக்கு எதிரொலி இல்லை. இது அவர் சீற்றத்தை இன்னும் வீச்சாகக் கக்குகிறது. “இது ஆரு வேல? ஆரு பொட்டிய திறந்திய?”

பின்னே வந்து பானை கழுவும் மனைவியின் முடியைப் பற்றுகிறார்.

“விடும்..! ஏனிப்பக் கூப்பாடு போடுறிய? முடியப் புடிக்கிறிய?” அவளுக்கும் நெற்றிக்கண் இருக்கிறதென்று காட்டுகிறாள்.

“ஒமக்குக் கண்ணுமண்ணு தெரியாது! பொட்டிய நாந்தா தொறந்தே! என்ன பண்ணச் சொல்றிய?”

அவருக்கு உதடுகள் துடிக்கின்றன. என்ன செய்வதென்று தெரியத்தானில்லை.

“மூதி, எந்தங்கச்சி பிள்ளைய வெரட்டி அடிச்சது நீதா. அவ… அவ நகை நட்டெல்லாம் வித்துப்போட்டே, ஒரு அரைப் பவுன் சொத்து, அதை வச்சிருந்தே, மங்கிலியம். அதை எங்கே கொண்டு போட்டிய அம்மையும் மவனுமா?”

“எங்கும் கொண்டுப் போடல. நீரு பாட்டுல காத்துட்டு இல்லாம பொறப்பட்டுப் போட்டிய. அவ இந்தச்சணம் சின்னாச்சியோட போவேன்னு குதிக்கா. முக்காத்துட்டு இல்ல. கடன் வாங்கற பக்கமெல்லாம் கடன். முன்சீப் வீட்டு ஆச்சியும் இல்ல. இப்ப வாணாட்டி, மாமா வரட்டும்னா கேட்டாளா? அவளேதா, எங்கம்மா சொத்துதான, கோயில்காரர் வீட்ட வச்சி இருவத்தஞ்சு ரூவா வாங்கித்தாரும்னா. வாங்கினே. என்ன வேணா அடிச்சிக் கொல்லும்!”

அருணாசலம் தன் தலையில் அறைந்து கொண்டு வெளியே வருகிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

கல்கியின் பார்த்திபன் கனவு – 47கல்கியின் பார்த்திபன் கனவு – 47

அத்தியாயம் 47 காட்டாற்று வெள்ளம் சென்ற அத்தியாயங்களின் சம்பவங்களும், சம்பாஷனைகளும் வாசகர்களில் சிலருக்கு விசித்திரமாய்த் தோன்றுவதுடன், சில விஷயங்கள் விளங்காமலும் இருக்கலாம். நரபலியாவது, மண்டையோடாவது, இதென்ன அருவருப்பான விஷயம்! – என்று தோன்றலாம். ஆனால் நமது தமிழகத்தின் அந்தக் காலத்துச் சரித்திரத்தை

கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 50கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 50

அத்தியாயம் 50 – நள்ளிரவு ராயவரம் தாலுகா கச்சேரியையடுத்துள்ள ஸப்-ஜெயிலுக்கு இரவு நேரத்தில் சாதாரணமாய் இரண்டு போலீஸ்காரர்கள் தான் பாரா கொடுப்பது வழக்கம். அவர்களே தான் தாலுகா கச்சேரி ‘டிரஷரி’க்கும் காவலர்கள். ஆனால் இன்றிரவு முப்பது போலீஸ்காரர்கள் காவல் புரிந்தார்கள். கச்சேரியை

கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 28கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 28

அத்தியாயம் 28 – சந்திப்பு      பஞ்சநதம் பிள்ளை ஜீவியவந்தராயிருந்த காலத்தில் கல்யாணி தன்னுடைய இருதயமாகிய கோட்டையை கண்ணுங் கருத்துமாய்ப் பாதுகாத்து வந்தாள். அதில் முத்தையன் பிரவேசிப்பதற்கு அவள் இடங்கொடுக்கவில்லை. அவ்வாறு இடங்கொடுப்பது பாவம் என்று அவள் கருதினாள். ஆகவே, முத்தையனுடைய நினைவு