Tamil Madhura தமிழ் க்ளாசிக் நாவல்கள் திருமதி ராஜம் கிருஷ்ணனின் ‘கரிப்பு மணிகள்’- 9

திருமதி ராஜம் கிருஷ்ணனின் ‘கரிப்பு மணிகள்’- 9

 

 

அன்று சனிக்கிழமை, கூலி நாள். கிழிந்து பிளந்துவிட்ட, பனஓலை மிதியடியைத் தூக்கி எறிந்துவிட்டு நஞ்சோடை நீரில் கால்களைக் கழுவிக் கொண்டு ரப்பர் செருப்பை மாட்டுக் கொண்டு பொன்னாச்சி கூலிக்கு நிற்கிறாள். அன்று தம்பி பச்சை வேலைக்கு வரவில்லை. அவனுக்கு காலில், கையில், வாயில் புண், காய்ச்சல் வேறு கதகதப்பாக இருந்தது. அழகு, வடிவாம்பா, மாரியம்மா, எல்லோரும் நிற்கின்றனர். ராமசாமியை அன்று சாப்பாட்டு நேரத்துக்கு மேல் காணவில்லை. தம்பிக்குக் காய்ச்சல், வாயில் புண் என்று சொல்ல வேண்டும் என்று எதிர்பார்த்திருந்தாள். கூலி கொடுக்க நேரமாகிவிட்டால் தேரிகடந்து தனியாகப் போக வேண்டி வருமோ என்றஞ்சியே அவனை எதிர்நோக்கியிருந்தாள். சாப்பாட்டு நேரத்தில் அவன் நல்ல தண்ணியில் கால் கழுவிவிட்டு, மருதமுத்துக் கங்காணியுடன் பேசிக் கொண்டே போனான். அவளைப் பார்க்கவில்லை. இப்போதும் அவள் ‘கண்ட்ராக்ட்’ நாச்சப்பன் கூலி கொண்டு வருவதை மட்டுமின்றி ராமசாமியும் எந்தப் பக்கமிருந்தேனும் வருகிறானா என்று பார்த்துக் கொண்டிருக்கிறாள். நாச்சியப்பன் கூலியைக் கொண்டு வருகிறான், இருபத்து நான்கு ரூபாய் அவளுக்கு வரவேண்டும், இரண்டு நாட்கள் அதிகப்படியே வேலை செய்திருக்கிறாள். ஆனால் ஆறு ரூபாயைப் பிடித்துக் கொண்டு பதினெட்டு ரூபாய் கொடுக்கிறான். எண்ணி எண்ணிப் பார்க்கிறாள். மாரியம்மாளுக்கு, அழகாம்பாளுக்கு, முனுசாமிக்கு, மாயாண்டிக்கு, யாருக்கும் குறைக்கவில்லை. அவளைப் போல்தான் அவர்களும் வேலை செய்தார்கள்.

நாச்சப்பன் கூலியை அவளிடம் கொடுத்துவிட்டுப் போய்விட்டான்.

“அண்ணாச்சி? எங்கூலியை ஏன் கொறச்சிட்டாங்க?”

“ஏங்கொறச்சிட்டா?…” அவன் சிரித்துவிட்டுச் செல்கிறான்.

“மாரியக்கா? கண்ட்ராக்ட்டு எங்கூலிய ஏங் கொறச்சிட்டா?”

அவளுக்கு அழுகையே வந்து விடும் போலிருக்கிறது.

“ஆறு ரூவாய ஏங்கொறச்சிட்டா?…”

“நீ கண்ட்ராக்கிட்ட அகராதியாய்ப் பேசியிருப்பே. அதனாத்தா, வாயத்துறக்கக் கூடாது…” என்று பரிதாபக் குரலில் கூறிவிட்டு அழகாம்பா விரைந்து செல்கிறாள்.

பொன்னாச்சிக்கு உலகம் கண்முன் இருண்டு வருகிறது.

“அது அவனுவ வழக்கம் புள்ள. இதுன்னாலும் குடுத்தானில்ல, போ…” என்று சந்தன நாடான் கிழவன் கண்களைச் சரித்துக் கொண்டு பெட்டி சீர் செய்த கூலியை எண்ணிக் கொண்டு செல்கிறான்.

ஒவ்வொருவராக எல்லோரும் பெரிய வாயிலைத் தாண்டிச் செல்கின்றனர்.

அவள் சுற்று முற்றும் பார்க்கிறாள். முகம் தெரியாத இருள் சூழ்கிறது, அம்பாரமான உப்புக் குவைகள் – விறிச்சிட்டு விட்ட பாத்திக் காடுகள். மயான அமைதி நிலவும் அச்சம் நெஞ்சைப் பற்றிக் கொள்கிறது.

ராமசாமி… அவன்… அவன் எங்கே போய்விட்டான்?

நீ பயப்படாதே, எப்போதும் காவலாக இருப்பேன் என்று சொன்னானே? கருமை, உலகைத் தன் துகிலால் இழுத்து மூட விரைந்து வந்துவிட்டது. அப்பனிடம் சொல்லித்தான் கேட்கச் சொல்ல வேண்டும் நாளை…

அப்பச்சியை வரச் சொல்ல வேண்டும்.

அவள் சாலையில் விரைந்து செல்கிறாள். யார் யாரோ உருவங்கள் செல்வதை அவள் பார்க்கிறாள். நடுச்சாலையில் விளக்கொளியைப் பாய்ச்சிக் கொண்டு பஸ் ஒன்று செல்கிறது.

முன்னே யார் யாரோ அளத்துக்காரர் செல்கின்றனர்.

பயமில்லை. ஓட்டமும் நடையுமாக அவள் விரைகையில் முன்னே செல்லும் உருவங்களில் யாரேனும் ராமசாமியாக இருக்கலாகாதா என்ற ஆசை அடித்துக் கொள்கிறது.

சாலையில் சைக்கிள்கள் போகும் போது சட்டென்று அதிலிருந்து அவன் இறங்கி அவளைக் கண்டு கொண்டு வரமாட்டானா என்று பார்க்கிறாள்.

யாருமில்லை. ராமசாமி வரவில்லை. பாலம்… பாலம் வந்ததும் அவள் குறுக்கே தேரிக்குள் திரும்ப வேண்டும். அங்கும் யார் யாரோ மக்கள் செல்கின்றனர். “முருகா… முருகா…” என்று மனதுக்குள் முணுமுணுத்துக் கொண்டு பொன்னாச்சி தேரிக்குள் நடக்கிறாள்.

பேச்சுக் குரல்கள் தேய்ந்தாற் போல் விழுகின்றன.

அவளுடன் வேலை செய்யும் பெண்கள் பத்துப் பதினைந்து பேர் இருக்கிறார்கள். அவர்களில் ஒருத்தி கூடக் கூலிக் குறைப்பைக் கருதி அனுதாபமாக அந்தக் கண்ட்ராக்டிடம் கேட்கலாம் என்று வரவில்லையே?
“நீ தணிச்சு ஒரு வழி போகணுமே” என்றும் ஒருத்தியும் வாய்ச் சொல்லுக்கும் கூட கூறவில்லையே? இந்த உப்பு சூட்டில் முள்ளுச் செடிகள் கூடக் கரிந்து விடுகின்றன. ஊரில் மாமி ஏசுவாள் என்றாலும் அடிக்கொருமுறை பொன்னாச்சியை யாரேனும் கூப்பிடுவார்கள். மனித நேயங்களனைத்தும் உப்புச் சூட்டில் வறண்டு போய் விடுமோ?

ராமசாமி ‘சங்கம் கூட வேண்டும், எல்லோரும் ஒற்றுமையாக நிற்க வேண்டும்’ என்று ஒருநாள் சொன்னான். இப்போது அவனே அவளுக்கு உதவ வேண்டிய சமயத்தில் போய்விட்டான்.

செம்மணல் பரந்த மேடாகத் தெரியும் தேரி இப்போதும் இனம் புரியாமலிருக்கிறது. குடல் குலுங்க அவள் இருட்டில் ஓடுகிறாள். யார் யாரோ ஆண் குரல்கள் கேட்கின்றன.

‘தேரியில் வைத்துக் கொலை செய்து விட்டார்கள்’ என்ற சொற்றொடர் உட் திரையில் மின்ன ‘முருகா, முருகா’ என்று நா உச்சரிக்க அவள் ஓடுகிறாள். அப்போது அவளைத் தொடர்ந்து இன்னும் யாரோ ஓடி வரும் அடிச்சத்தம் கேட்கிறது… ஒரு வேளை ராமசாமியோ?

“ஏவுள்ள ஓடாத… ஓடாதவுள்ள?”

ராமசாமியின் குரல்தானோ?

அவள் மூச்சிறைக்க நிற்கிறாள். அவள் நின்றதும் விரைந்து வந்தவன் அலைபோல் பாய்ந்து அவளை நெருங்கி அணைக்கிறான். முத்தமிடுகிறான். புளித்த கள்ளின் வாடை…

“ஐயோ… ஐயோ, விடுரா, சவமே…”

அவள் திமிருகிறாள். அவனிடமிருந்து விடுவித்துக் கொள்ளக் கைகளைக் கால்களை உதைத்துக் கொள்கிறாள், அவனைப் பிறாண்டுகிறாள்.

ஆனால் அவன் வெறி கொண்ட பேயாக இருக்கிறான்.

தேரி… தேரிக்காடு… நெஞ்சு உலர்ந்து போகிறது.

பூதமாகத் தலைவிரிச்சிப் பனமரங்கள்… இருள் இரத்தச் சுவடுகளையும் துல்லியமாகத் துடைக்கத் துணை செய்கின்றது. போதாதற்கு அப்படி ஒன்றும் இங்கு நடக்கவில்லை என்று கோடானு கோடித் தாரகைகள் கண் சிமிட்டுகின்றன.

அவள் தேரியின் மண்ணில் கிடக்கிறாள். அந்த அலுமினியம் தூக்குப் பாத்திரத்தின் நினைவு சட்டென்று வருகிறது. அதற்குள் கூலிப்பணம் இருக்குமே!

“இத இருக்குவுள்ள…!” என்று அவன் அதை எடுத்துக் கொடுக்கிறான். இருட்டில் முகம் தெரியவில்லை.

கொலைகள் நடந்த இடத்தில் ஆவிகள் உலவும். இவன் ஆவியோ, ‘பொட்டவுள்ள… பொட்டவுள்ள…’ என்ற குரல் பயங்கரமான பொருளை உணர்த்தச் செவிகளில் டங்டங்கென்று அதிரடி போல் ஒலிக்கிறது. அவளுக்குக் குபீரென்று அழுகை வருகிறது. உட்கார்ந்து இதயம் வெடிக்க அழுகிறாள்.

அவன் போகவில்லை.

“ஏவுள்ள அழுவுற? கூலி கொறச்சிட்டான்னு சொன்னேயில்ல? நா அஞ்சு ரூவா தாரன் ஒனக்கு!”

“சீ மிருவமே! என்னக் கொன்னு போட்டுறதுதானே?” மீண்டும் அவள் அழுகையொலி அங்கு எதிரொலிக்கிறது. “இப்படிப் பண்ணிப்போட்டியே? நா எப்பிடி எல்லார் மூஞ்சிலியும் முழிப்பே?”

“த, இப்ப என்ன வந்திற்று? நா ஒன்னக் கல்யாணங் கட்டுற, சீல, தாலி வாங்கித்தார? இந்த மொத்த ஊரிலும் தண்ணிக்குள்ள கெடந்து மிசின் மாட்டுற தொளில் ஆருக்கும் வராது. மொதலாளி பெசலா எனக்குண்டு குடிய்க்க நெதம் ரெண்டு ரூவா தருவா… அழுவாத…?”

இதுதான் விதியா? இந்தக் குடிகாரனை அவள் கல்யாணம் கட்டுவாளா? மாமி, சின்னாச்சி, அப்பன்… பச்சை… “ஐயோ, அவுரு… எப்பேர்க் கொத்த மனிசரு?”

பொங்கிப் பொங்கி அழுகை வருகிறது.

“தே அழுவாதவுள்ள…”

அவன் குரலில் ஆணவமோ, ஆத்திரமோ இல்லை. தாய்க்குத் தெரியாமல் கள் குடித்து விட்டு வரும் பிள்ளை, “தெரியாம செஞ்சிட்டேன்” என்று தண்டனையை ஏற்க நிற்பவன் போல் கெஞ்சுகிறான்.

“அநியாயமா இப்பிடிச் செஞ்சிட்டியே, பாவி, நா ஒன்னயா கலியாணம் கெட்டிக்கணும்? தூ!…”

“பின்ன வாணாமுன்னா வாணா…”

உடலும் மனமும் பற்றி எரிகிறது. அவனை என்ன செய்யலாம்? அப்போது அடித்துக் கால் கையை வெட்டிப் போடலாமா? அப்போது அவள் எரிச்சல் ஆறுமா?… ஐயோ…! என்று அவள் துடிக்கிறாள்.

“என்னியக் கொன்னு போட்டுட்டுப் போ. சவமே ஏன் நிக்கே?”

“ஐயோ… கொல எல்லாம் செய்யமாட்டே. இப்ப என்ன வந்திற்று? எல்லாப் பொம்பிளக்கும் எல்லா ஆம்பிளய்க்கும் உள்ளதுதே. எந்திரிச்சி, சீலயல போட்டுக்க. கண்ணத் தொடச்சிட்டுவா. கிளப்பில தோசையும் குருமாவும் வாங்கித் தாரன்; சாப்பிட்டுக்க. அளத்துல லாரி வந்திச்சி, நேரமாச்சுன்னு சொன்னா ஆருங்கேக்க மாட்டா. ஒங்க வீட்டில நா கொண்டு வுடுறே…”

அவன் அவள் சீலையை எடுத்து மேலே போடுகிறான். கைபிடித்து எழுப்புகிறான்.

“ந்நா நாச்சியப்ப கண்ட்ராக்ட், கங்காணி ஆறுமுகம் கணக்கவுள்ள பிச்ச… அல்லாரும் பொறத்தியான் பெஞ்சாதியளைக் கை தொடும் கழுவேறியா. நா அப்படிப் பாவம் செய்ய மாட்ட, சாமி அப்பேர்க் கொத்தவங் கண்ண அவிச்சிப் போடும். நான் கண்ணாலங்கெட்டாத பொண்ணாத்தாந் தொடுவ…”

அவனுடைய சீல நெறியைச் செவியேற்கையில் அந்த நிலையிலும் அவளுக்கு சிரிப்பு வரும் போலிருக்கிறது.

“நீ கலியாணம் கெட்டலியா?”

“அக்கா மவளக் கெட்டின, அதுவுள்ள பெத்த ஆசிபத்திரில செத்துப் போச்சி. இப்ப ஒன்னக் கட்டிக்கற, என்ன கட்டிக்கிறியா பொன்னாச்சி?”

“நீ என்னக் கட்டிக்கிறேன்னு கவுறு போட்டா, நாங் கடல்ல வுழுந்து முடிஞ்சி போவ…”

“ஐயோ அப்ப வாணா, நீ என்னக் கட்டிக் காட்டி வாணா! நீ ராமசாமியக் கட்டிக்க…”

அந்தப் பெயரைக் கேட்கையிலே மீண்டும் துயரம் வெடித்து வருகிறது. இது தெரிந்தால் அவர் என்ன சொல்வார்? காவலிருக்கேன்னு சொல்லிக் கைவிட்டு விட்டீரே!

“நீ அழுவாத பொன்னாச்சி. நா தெரியாம செஞ்சிட்டா. வா. ஒனக்கு அஞ்சு ரூவா இல்லாட்டி பத்து ரூவா தாரவா…”

அவன் கையை உதறிக் கொண்டு அவள் எழுந்து சீலையை இறுக்கிக் கொள்கிறாள். அலுமினியம் தூக்கை வாங்கிக் கொண்டு அவள் நடக்கிறாள். தொய்யும் கால்களை உறுதியாகப் பதித்து நடக்கிறாள். கரிப்புத் தண்ணீர் உதடுகளை நனைக்க அவள் நடக்கிறாள்.

தேரி கடந்த பின் தெருவோரம் ஒரு நைட் கிளப்பில் எண்ணெயில் வட்ட வட்டமாக பூரி காய்கிறது. ஆட்கள் அங்கே உட்கார்ந்து தீனி தின்கின்றனர்; நின்று காபியோ தேநீரோ பருகுகின்றனர்.

“பூரி தின்னுக்கறியா? நெல்லாருக்கும்…”

“சீ!” என்று காரித் துப்புகிறாள், விளக்கொளியில் அவன் முகத்தைக் கண்டதும்.

“ந்தாப்பா, ஒரு பாவசம் குடு…” பளிச்சென்ற ஒளியில் அவள் நிமிர்ந்து பார்க்கக் கூசி நிற்கிறாள். ஒரு பையன் கிளாசில் ‘பாவசம்’ கொண்டு வந்து தருகிறான்.

“குடு… வாங்கிக்க…” பாசிப் பருப்பும் வெல்லமும் சேர்ந்த, ‘பாயசம்’. அவள் கடையின் பின்பக்கம் இருளில் திரும்பி அந்தப் பாயசத்தை அருந்துகிறாள். பிறகு கொஞ்சம் நீர் குவளையில் வாங்கி முகத்தைக் கழுவிக் கொள்கிறாள். எரியும் தீயை அந்தப் பாயசம் இதமாய் அணைத்தாற் போல் தோன்றுகிறது.

“நீ வீட்டுப் பக்கம் வராண்டா. போயிடு. நாளக்கி எங்கனாலும் ஆரானும் பொம்பிள கடல்ல, கெணத்துல விழுந்திட்டான்னு செவில வுழுந்தா போயிப்பாரு.”

அவள் ஆத்திரத்துடன் நடக்கிறாள்.

அவன் கோயில் வரையிலும் அவள் செல்வதைக் கேளாமலே தொடர்ந்து வருகிறான். பிறகு அவள் வெருட்டியதால் செல்கிறான். சின்னம்மா, குழந்தைகள் எல்லோரும் வாயிலில் நிற்கின்றனர்.

“ஏட்டி” என்று சின்னம்மா கேட்கும் வரையிலும் அவள் காத்திருக்கவில்லை. தூக்குப் பாத்திரத்தை அவள் கையில் கொடுத்து விட்டு உள்ளே சென்று வாளியும் கயிறுமாகக் கிணற்றடிக்கு விரைகிறாள். கிணற்று நீரைச் சுறண்டி இழுத்துக் கொட்டிக் கொள்கிறாள். கோடைக்கால கிணறு மணலும் சேர்ந்து வருகிறது.

தனது கருமையை அந்த மணலோடு சேர்த்துத் தேய்த்துக் கழுவுவது போல் தண்ணீரை இரைத்து ஊற்றிக் கொண்டு, சேலையைப் பிழிந்து கொண்டு வருகிறாள். தலை சொட்டச் சொட்ட, முடியை விரித்துப் போட்டுக் கொண்டு அவள் வருவதைக் கண்ட சின்னம்மா,

“ஏட்டி, கூலிக்கு நேராச்சின்னா நாளக்கிப் போயிக் காலயில வாங்கிவாரம், செவந்தனியப் போச்சொல்லுற. நீ இருட்டி இந்நேரங்களிச்சி தேரி கடந்து வார. ஒங்க மாம மாமியெல்லா, பெரியதனக்காரா. நீ லச்சயில்லாம நடக்கே. ஒரு சூடு விழுந்தா சின்னாச்சி மண்டய உருட்டுவா…”

சேலையைப் பிழிந்து கட்டிவிட்டு விரிந்த கூந்தலுடன் அவள் ஆணி அடித்த நிலையில் நிற்கிறாள். சின்னம்மாவின் சொற்கள் ஒவ்வொன்றும் ஒரு பாம்பாக உருப்பெற்று அவள் மீது ஊர்வதாகப் படுகிறது.

“அம்மா, பசிக்கி… சோறு போடம்மா… சோறு…” பிள்ளைகள் தட்டை வைத்துக் கொண்டு ஓசை செய்கின்றனர். சின்னம்மா பொங்கும் குழம்பைக் கரண்டியால் கிளறிவிட்டு அடுப்பைத் தணிக்கிறாள்.

“வந்திட்டாளா அவ?” என்று அப்பனின் குரல் கேட்கிறது.

“…கூலி போடுற அன்னிக்கு நேரமாவும். நீ பொழுதோட வூடுவர வேண்டியதுதானே? எம்பிட்டுக் கூலி குடுத்தா…?”

“இருவத்து நாலுக்கு இருவத்து மூணு இருக்கு. ஒரு ரூவாக்கு வாங்கித் தின்னட்டும், புள்ளயளுக்கு ஒரு காரூவாப் பட்டாணிக் கடல வாங்கிச்சி வராண்டா?…”

பொன்னாச்சிக்கு வடிக்கக் கண்ணீரில்லை.

“ஏட்டி, மொவத்துல கைய வச்சிட்டிருக்கே… அல்லாரையும் கூட்டிச் சோறு வையி…”

அவள் பேசவில்லை. சோறென்றதும் எல்லோரும் வந்து உட்கார வேண்டும். ஒரு நாட்பொழுதின் மகத்தான நேரம் அது. பொழுது விடிவதும் பொழுது போவதும் இந்த ‘மகத்தான’ நேரத்துக்குத்தான். சோறு; அரிசிச் சோறு. மீன் கண்டமிட்ட குழம்பு. நல்லகண்ணு மூக்கை உறிஞ்சி நெட்டை விட்டுக் கொண்டு உண்ணுகிறான். தம்பி… தம்பி எங்கே?

சின்னம்மா காலுக்கு மஞ்சள் தூளையும் விளக்கெண்ணெயும் குழைத்துப் போட்டுக் கொண்டிருக்கிறாள். “அந்தப் பய மத்தியானங் கூட இப்பிடித்தா படுத்திருந்தா. எளுப்பி காப்பித் தண்ணி வச்சிக் குடுக்கச் சொன்னே பாஞ்சாலிய…” என்று அப்பன் கூறுகிறார்.

அவள் துணுக்குற்ற நெஞ்சுடன் வாயில் திண்ணைக்கு வந்து அவனை எழுப்புகிறாள். சுருண்டு கிடக்கிறான்.

“தம்பி… தம்பி… லே பச்ச, சோறு தின்ன வால…?”

மூச்சு வேகமாக வருவது போலிருக்கிறது. “சோறு… வாணா. சோறு வாணா…” என்று முனகிவிட்டுத் திரும்பிப் படுக்கிறான்.

“விறிஞ்சோறில்லே. மீன் கொளம்பு வச்சிருக்கு. ஒரு வாத் தின்னிட்டுப் படுத்துக்க…”

சோறு வேண்டாம் என்று அவன் எந்த நேரத்திலும் கூற மாட்டானே?

அவள் அவன் உடம்பில் கை வைத்துப் பார்க்கிறாள். சூடு காய்கிறது. மீன் குழம்பு வைத்து அரிசிச் சோறு பொங்கிய நாளில் உடம்பு காய்வது எத்தனை துரதிஷ்டம்?

“ஒடம்பு சுடுது, சின்னம்மா அவனுக்கு!”

“சூடு… உப்புச் சூடுதே. கண் பொங்கியிருக்கு, நாயித்துக் கெளமயில எண்ணெ வச்சிக் குளிலேன்னே, அப்பச்சியோட சந்தக்கிப் போறன்னு ஆடிட்டிருந்தா. சொன்ன பேச்சிக் கேக்கணும்…” என்று சின்னம்மா குற்றம் சாட்டுகிறாள்.

அவனை மெள்ள எழுப்பி பொன்னாச்சி தட்டின் முன் கொண்டு வந்து உட்கார்த்துகிறாள். இரண்டு வாய் கொறித்து விட்டு மீண்டும் திண்ணைப் பாயில் முடங்கிக் கொள்கிறான்.

காலையில் சின்னம்மாவின் கண்களில் முதலில் பொன்னாச்சி வரிகம்பில் உலர்த்தியிருக்கும் ரவிக்கை தான் படுகிறது. கைப்புறமும் முதுகுப்புறமும் தாறுமாறாகக் குத்தினாற் போல் கிழிந்திருக்கிறது.

“ஏட்டி ஜாக்கெட் கிளிஞ்சிரிச்சா? கொம்பு மாட்டிச்சா? எங்க கிளிச்சிட்ட? பதனமா அவுத்துக் கசக்குறதில்ல?”

“அது கிளியல… கிளிஞ்சி போச்சி…” என்று ஏதேதோ சொற்கள் மோதியடித்துக் கொண்டு வர உதடுகள் துடிக்கின்றன. கண்களில் முட்டிக் குளம் வெட்டுகிறது.

தூக்கி வாரிப் போட்டாற் போல் மருதாம்பா நிற்கிறாள். எழும்பும் நா அடங்கிப் போகிறது. கண்கள் அவள் மீது பொருளார்ந்து நிலைக்கின்றன.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

கல்கியின் பார்த்திபன் கனவு – 60கல்கியின் பார்த்திபன் கனவு – 60

அத்தியாயம் 60 அருவிப் பாதை உதய சூரியனின் பொற்கிரணங்களால் கொல்லி மலைச்சாரல் அழகு பெற்று விளங்கிற்று. பாறைகள் மீதும் மரங்கள் மீதும் ஒரு பக்கத்தில் சூரிய வெளிச்சம் விழுவதும், இன்னொரு பக்கத்தில் அவற்றின் இருண்ட நிழல் நீண்டு பரந்து கிடப்பதும் ஒரு

வடுவூர் K. துரைசாமி ஐயங்கார் எழுதிய “திவான் லொடபட சிங் பகதூர்” – 05வடுவூர் K. துரைசாமி ஐயங்கார் எழுதிய “திவான் லொடபட சிங் பகதூர்” – 05

அந்த வார்த்தகர் அவனைக் கெஞ்சித் தமக்கு திவான் வரி போடாமல் செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொண்டு, அவனிடம்நூறு கொடுப்பார். இம்மாதிரி நமது சமயற்காரன் ஒவ்வொரு நாளும் பல உத்தியோகஸ்தர்களிடத்திலும் வர்த்தகர்களிடத்திலும் பெருத்த பெருத்த தொகைகளை இலஞ்சம் வாங்கத் தொடங் கினான். அவன் திவானினது

சாவியின் ஆப்பிள் பசி – 4 (Audio)சாவியின் ஆப்பிள் பசி – 4 (Audio)

இடிந்து மண்மேடிட்டுப் போயிருந்த பெருமாள் கோவிலுக்கு சாட்சியாக கருட கம்பம் மௌனமாய் நிற்க, அரசமரத்தின் சலசலப்போடு கிராமத்துச் சிறுவர்கள் பம்பரம் விளையாடிக் கொண்டிருந்தார்கள். சைக்கிளை நிறுத்திக் கீழே இறங்கினான் சாமண்ணா. அந்தச் சிறுவர்களில் ஒருவனை அழைத்து, “தம்பி! குமாரசாமி வீடு எங்கே