அந்த டைரியால் மீண்டும் சிக்குண்டான் விஷ்ணு.
பிரம்மாண்ட அரண்மனையின் முன் விஷ்ணுவும் காண்டீபனும் நிற்க..
“என்ன இந்திரா இந்த சிறியகதவு தாக்குபிடிக்குமா” – காண்டீபன்.
அமைதியாக இருந்தான் இந்திரவர்மன்.
“இந்திரா அந்த மங்கையின் நினைப்பு இன்னும் உன்னைவிட்டு அகலவில்லையோ”
முற்றிலும் பார்த்தவன் “இல்லை காண்டீபா உன் யூகம் தவறு.. இந்த கதவு தங்கமும் இரும்பும் உயிர் உலோகமும் கலந்து ஆதவனை சுடும் அளவு வெப்பநிலையில் இணைத்து உருவாக்கியுள்ளனர். இதை தகர்ப்பது என்பது நமது நூறு வில்லாளர்களுக்கு ஒரு நாள் எடுக்கும்….”
“ஓ பலே இந்திரா இந்த கதவு அவ்வளவு வலிமையுள்ளதா?”
“ஆம் நண்பா ஆனால் இந்த மதில் சுவர்கள் தான் நம் இருவரின் தோளைக் கூடத் தாங்க வலுவில்லாமல் உள்ளது”
“மாபெரும் வீரர்களை கொண்ட இந்த இந்திரபுரிக்கு இந்த பாதுகாப்பு அவசியம் இல்லைதான்”
என அரண்மனையின்மீது பார்வை வீசிகொண்டே உள்ளே நடந்தனர். அங்கு ஒரு வாயிற் காவலன்.
“ஐயா நீங்கள் யார்? உங்களுக்கு அனுமதி இதற்குமேல் இல்லை”
அந்த நேரம் குதிரையில் ஒருபெண் அவர்களை கடக்க அவள் அந்த புலிப் பெண் என இருவரும் உணர்ந்தனர்.
“காவலரே அந்த நபரை மட்டும் அனுமதியுங்கள்” என காண்டீபனை சுட்டிக்காட்டி இந்திரனின் புத்திகூர்மையை சோதிக்க எண்ணினாள்.
அவளது தந்திரத்தை புரிந்த இந்திரன் அந்த காவலரிடம் ” ஏன் தோழா இந்த மங்கை யார் சற்று திமிர் அதிகம் போல”
“ஐயா அவ்வாறு உறைக்காதீர்கள் இவர்கள்தான் இந்த நாட்டின் இளவரசி ” என காவலாளி படபடத்தான்.
“என்ன இருந்தாலும் ஒரு பெண்ணிற்கு இவ்வளவு திமிர் கூடாது…”
“என்ன கூறுகிறீர்கள் நீங்கள்”
இந்திரனின் திருவிளையாடலை புரிந்துகொண்ட காண்டீபன் அங்கிருந்து நடக்க துவங்கினான். அவளோ “தீவுகளின் அரசே வாருங்கள்” என அழைத்துச் சென்றாள்.
“அங்கே என்ன பார்க்கிறாய் மாயா ”
“ஐயா உங்களுக்கு எப்படி என் பெயர் தெரியும்”
பெயர் பலகையில் வெளியிலேயே பெயரை பார்த்தவனுக்கு இது பெரிய காரியம் இல்லை.. “இங்கே பார் மாயா எனக்கு மனதை படிக்கும் ஆற்றல் உள்ளது… ”
காவலாளி அதிர்ச்சியில் உறைந்தான்..
“என்ன அப்படி பார்க்கிறாய்.. உன் கன்னத்தில் உள்ள தழும்பு அரசகட்டளையை மீறியதற்குதானே அதுவும் அந்த சிங்கார மங்கையின் உத்தரவால்…. என்ன சரியா”
இந்திரபுரியில் தண்டனைகள் மிகவும் கடுமையாக இருக்கும் அரசாங்க ஊழியர்கள் மக்களுக்கு அரணாக இருக்க வேண்டும் மீறினால் இளவரசியின் நீதிமன்றத்தில் தக்க தண்டனை வழங்கப்படும்.
ஏன் இளவரசி என்றால். இந்த நாட்டின் மன்னன் வீரசெழியனுக்கும் அவரது மனைவிக்கும் மிக தாமதமாக பிறந்த கடவுளின் பரிசு நீலக் கண்களையுடைய அந்த மங்கைதான். அதனால் அவளை ஓர் நாட்டை ஆளும் எல்லா தகுதியுடனும் வளர்த்தனர். இந்த ராஜரகசியத்தை நன்கு அறிந்திருந்த இந்திரன் அந்த காவலாளியிடம் அப்படிக் கூறியதில் எந்த ஐயப்பாடும் இல்லை.
“எப்படி ஐயா உங்களால் என் மனதில் உள்ளதை படிக்க முடிகிறது..”
“அது ஒரு கலை மாயா”
மாயனின் வாயில் ஈ புகுந்ததைகூட அவன் உணரவில்லை.
“ஆமா மாயா அந்த ராங்கி அதான் உங்க இளவரசி வரும்போது ஏன் அப்படி நினைத்தாய்?”
“நான்எதுவும் நினைக்கவில்லையே”
“சத்தியமாக சொல்”
“ஆம் ஐயா…. என்னை மன்னித்துவிடுங்கள்”
“நான் உள்ளே செல்லாமா”
“தாரளமாக ஐயா” என வழிவிட்டான்.
இந்த மந்திரத்தை கூறும்போதே குரங்கை நினைக்காதே என்ற சிறிய மனோ தத்துவதுவத்தை பயன்படுத்தி உள்ளே அனுமதி பெற்ற இந்திரனுக்கு அவன் என்ன நினைத்தான் என்பது தெரியாது. உண்மையைக் கூற வேண்டும் என்றால் அவன் எதுவுமே நினைக்கவில்லை.
அந்த அரண்மனையில் புலவர்களை தவிர யாரும் மன்னர் அரியணை முன் நின்றதில்லை. ஆனால் இன்றோ அவரின் எதிரிலேயே இரண்டு இருக்கைகள் போடப் பட்டிருந்தன.
அங்கு நுழைந்த இந்திரவர்மனை இந்திராணி பார்த்தாள் “நீங்க எப்படி உள்ளே” என்பதைப்போல சைகை காட்ட
அசட்டுப் புன்னகை உதிர்த்தான்.
“மாபெரும் பெருமைகொண்ட அரசன் வீரசெழியனுக்கு எனது வணக்கங்கள்” என இந்திரன்கூறவே சபையே அதிர்ந்தது. அமைச்சர்கள் அனைவரும் குழப்பத்தில் இருந்தனர்.
“ம்ம் உறையுங்கள்” என மன்னர் கூறவே
“இவர் தீவுகளின் அரசன் காண்டீபன்.. நான் அவரது தோழன் இந்திரவர்மன் ”
என அறிமுகப்படுத்திக் கொண்டான்.
உடனே மன்னர் சிரித்துகொண்டே “ஏன் இந்திரா இந்த விளையாட்டு மாமன்கூட விளையாடுவது என்றால் என்ன இன்பமோ தெரியவில்லை..அது இருக்கட்டும் குடகு நாட்டில் மக்கள் நலமா… ”
“நலம்தான் மாமா உங்களது நாட்டில் பஞ்சம் ஏற்பட்டது போல உள்ளதே”
செல்வசெழிப்பான நாடு குடகு நாடு அதன் மன்னன் இந்திரவர்மன். பரந்து விரிந்த கன்டங்களும் கடலை தாண்டியுள்ள நிலங்களும் குடகு நாட்டின் கீழ் உள்ளவை… கடல் பயணம் என்பது அவர்களுக்கு சிறு குவளையில் நீந்துவது போன்றது. அதனால் பல நிலங்களை பிடித்து வைத்திருந்தனர். பஞ்சம் என்ற சொல்லுக்கே பஞ்சம்தான் அங்கு… அதனால் இந்தநாட்டின் நிலையை பார்த்து பஞ்சம் என்று அவன் கூறியது ஆச்சரியமில்லை”
சபை கலையவே அரசர் இருவரையும் அழைத்துசென்றார் அங்கு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இந்திராணிக்கு தன் காதலனை பற்றி அறிந்ததும் மனது விண்ணிற்கும் நிலத்திற்கும் தாவிகுதித்தது.
விருந்தில் அனைவரும் அமர்ந்திருக்க அரசர் அரசியை பார்த்து “எங்கே இந்திராணியை காணவில்லை”
அந்த சத்தம் கேட்ட நொடி அங்கு ஓடி வந்தாள். அவள் துள்ளிக் குதித்து ஓடிவருவதைப் பார்த்த இந்திரன் இனி மான்களை வேட்டையாடக் கூடாது என முடிவுசெய்தான்.
புள்ளிமானாக அங்கு வந்தவள் வெட்கத்தால் தலைகுனிந்து நின்றாள். பெண்பார்க்கும் படலம் என நினைத்திருப்பாள் போலும்.
“என்ன இந்திரா அப்படி பார்க்கிறாய்… இவள்தான் இந்திராணி உன்னுடைய மனைவி”
வெட்கத்தில் சிவந்த முகம் மேலும் சிவந்து அழகானது. ஆனாலும் குழப்பம் சூழ்ந்துகொண்டது.
“என்ன மாமா இந்திராணியா?!… நான் துளசி என்றல்லவா நினைத்தேன்…” என்று கூறிய இந்திரனை லேசாக நிமிர்ந்து பார்த்தாள் அந்த நொடி சிறிது கோப அனலைக் காதலுடன் கலந்து வீசினாள்.
“என்ன துளசியா” என மன்னர் கேட்க
” அது ஒன்றும் இல்லை உங்கள் நாட்டில் மருந்துக்கு தேவையான துளசி கிடைக்குமா என கேட்கிறான்” என காண்டீபன் சமாளித்தான்.
“அப்படியா அதற்கு இங்கு பஞ்சமே இல்லை தீவுகளின் அரசரே…” என மன்னர் முடிக்க விசயம் அறிந்த மூவர் மட்டும் அங்கு சிரித்தனர்.
“என்ன இந்திராணி அப்படி பார்க்கிறாய்.. இவர்தான் உன்னை திருமணம் செய்யப்போகிறார்… இது நீங்கள் இருவரும் பிறந்தவுடனேயே எடுத்த முடிவு.. நீ இந்திரனுக்கு.. இந்திரன் உனக்கு என உங்களுக்கு பெயர்வைக்கும்முன்னரே தீர்மானம் ஆகிவிட்டது. உங்கள் பெயர் கூட அதைதான் பறை சாற்றுகிறது”
இந்திராணி என்ற அவளின் பெயரின் ரகசியம் அவளுக்கு அப்போதுதான் புரிந்தது.
“இவ்வளவு ஏன் உங்களது இதயம் கூட ஒன்றாகத்தான் துடிக்கும் ” என மன்னர் வீரசெழியன் உரைத்தார்.
‘அதனால் தான் அவளை புலி பதம்பார்க்கும்போது எனக்கும் வலித்ததா‘ என நினைத்தான் இந்திரன்.
விருந்து சிறப்பாக நிறைவு பெறவே ஒரு பெண் அங்கு பழத்தட்டினை எடுத்து வந்தாள். அவளது கண்கள் இந்திரவர்மனை பதம்பார்த்துகொண்டிருந்தது.
‘இவள் அவளுடைய தோழிதானே‘ என இந்திரன் நினைத்த நேரம் “இவள் தான் துளசி இவளுக்கு உன்னைப் பிடித்திருக்கிறது” என காண்டீபன் இந்திரனின் காதில் கிசுகிசுத்தான்.
‘இவனைப் போல் எனக்கும் மனதை படிக்கும் ஆற்றல் இருந்திருந்தால் கண்டிப்பாக என் இந்தகராணியின் மனதை படித்திருப்பேன்‘ என நினைத்தான்.
அருகில் சிரித்துகொண்டிருந்த காண்டீபன் “ஏன் இந்திரா காதலியின் மனதை தன் மனதால் உணர்வதில்தான் அலாதியான இன்பம் உள்ளது அதையும் நீ குறுக்குவழியில் அடைய நினைத்தால் இன்பம் ஏது” என முடித்தான்.
“அதுவும் சரிதான் நண்பா… நானே அவளை அறிந்துகொள்கிறேன் அதுமட்டுமில்லை அவளை இருபத்தி இரண்டு வருடமாக ஆட்சியை காரணம்காட்டி நான் சந்தித்துகூட இல்லை… நீண்ட நாட்களுக்கு பிறகு தனியே சந்திக்கலாம் என்றால் எனது மாமா வேறு இருக்கிறார்… சந்தர்ப்பம் இல்லாமல் போய்விடுமோ“
லேசாக கண்களை மேல பார்த்த காண்டீன் “நண்பா சந்தர்ப்பத்தை நாம்தான் உருவாக்கிக்கொள்ள வேண்டும்” என காதில் லேசாக கிசுகிசுத்துவிட்டு…. “என்ன இந்திரா அரண்மனையை சுற்றிப் பார்க்க வேண்டும் என்று கூறினாயே“
“எப்பொழுது?!”என இந்திரன் கேட்க அவனது கையை கிள்ளினான் காண்டீபன்.
இந்திரனுக்கு இப்பொழுது புரிந்தது எனவே “ஆம் இந்த பெரிய அரண்மனையை சுற்றிவருவதில் ஒரு ஆனந்தம் இருக்கிறது.. அதிலும் இந்த அரண்மனைக்கு நடுவில் இந்த அழகிய வற்றிதநதியைப் பார்க்க கண் கோடி வேண்டும் மாமா“
“இதை வடிவமைக்க திட்டம் தீட்டியது இந்திரவர்மனின் தந்தையால்லவா அப்படிதான் இருக்கும்” என வீரசெழியன் பெருமிதம் கொண்டார்.
“அப்படியென்றால் நான் கிளம்புகிறேன்” என இந்திரவர்மன் கூறினான்.
“ம்ம் போய் வா இந்திரவர்மா” என வீரசெழியன் கூறினார்.
“நான் கிளம்புகிறேன் வேறு யாராவது உடன் வருவதென்றால் வரலாம் ” என இந்திரன் மீண்டும் கூற மன்னருக்கு புரிந்தது.
“இந்திராணி நீயும் உடன் சென்று இந்திரனுக்கு அரண்மனையை சுற்றி காட்டு” என அவரின் வாயிலிருந்து வார்த்தை அனைவரின் காதை அடையும் முன்னே “சரி தந்தையே” என அந்த சந்தர்பத்திற்கு காத்துகொண்டிருந்தவலாய் மின்னலாய் கிளம்பினாள் இந்திராணி.
அந்த இடத்தில் நின்றிருந்த காண்டீபனை பார்த்த அரசர் “நீங்கள் வேண்டுமானால் உடன் செல்லுங்கள்”
“இல்லை அரசே நான் உங்களுடன்தான் சிலவற்றை பகிர்ந்துகொள்ள வேண்டும்” காண்டீபன் புருவத்தை உயர்த்தி கூறினான்.
அதை கேட்டு சட்டென திரும்பினான் இந்திரன். அவனை பார்த்த இந்திரன் “இதுதான் சமயம் ” என்பது போல தலையை மேலிருந்து கீழே அசைக்க இந்திரன் புரிந்துகொண்டான்.
காண்டீபனும் அரசரும் நடந்துசெல்லவே மறுபுறம் இந்திராணியும் இந்திரவர்மனும் நடந்தது சென்றனர். அனைவரின் பார்வையிலிருந்தும் மறைந்துவிட்டதால் இந்திராணி தன்னவனின் கைகளைப் பற்றிகொண்டாள்.
இந்திரன் நீண்ட நாட்களுக்கு பிறகு அவளை காண்பதால்… இல்லை முதல்முறை காண்பதால் அவனும் அவளது செய்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
அவளோ இவன் எதாவது பேசுவான் என அவனது முகத்தையே பார்த்துக்கொண்டு வந்தாள் அவன் எதுவும் பேசவில்லை.
இவளை இத்தனைநாள் பிரிந்து இருந்ததும் சிறுவயதிலேயே ஆட்சிபொறுப்பேற்றதும் விதியின் சதியே என்றாலும் அந்த போரில் இவனது தந்தை இறக்காமல் இருந்திருந்தால் இவனது வாழ்க்கை இப்படி தடம்மாறியிருக்காது.
“அமைச்சரே….. அமைச்சரே” கூக்குரலுடன் ஒரு கையை இழந்தும் ரத்தவெள்ளத்தில் ஓர் போர்வீரன் வரவே..
“யார் அங்கே இவருக்கு மருத்துவம் செய்யுங்கள்… “
“அது பயன்படாது அமைச்சரே… நான் இறந்து விடுவேன். இருந்தாலும் ஒரு தூது கொண்டுவந்துள்ளேன்.”
“என்ன ” என பரிதாபமாக பார்த்தார் அமைச்சர்.
“எதிரியின் படையை நம்மால் சமாளிக்க இயலவில்லை அதன் விளைவு மன்னரையும் இழந்துவிட்டோம் ஆனால் அவர்களை எதிர்த்து சென்ற அரசியும் கூற்றுவன் கையில் சிக்குண்டார்… அறிவில் சிறந்த அமைச்சர்களையும் இழந்துவிட்டோம்” என கண்ணில் நீர் வந்தும் ஓர் வீரன் ரத்தம் தரையில் விழுந்தாலும் கண்ணீர் விழகூடாது என அறிந்தவன் அதை கட்டுபடுத்தினான்.
அப்படியே சரிந்து விழுந்தவன் உயிர் பிரிந்தது. இறுதியாக இருக்கும் அமைச்சர் ருத்ரன் மட்டுமே ஆனால் புத்தியில் இளமை துடிப்பு இருந்தாலும் உடலில் பலம் இல்லை அதிலும் போரில் பறிபோனதால் ஒற்றை கையுடன் அவரால் போர்புரிய இயலவில்லை.
தனது நிலைமையை உணர்ந்த அமைச்சர் தனது கையால் அங்கிருந்த மேஜையில் தட்ட அது இரண்டாக பிளந்தது.
“நான் தான் இறுதி நானே செல்கிறேன் என் உயிர் இந்த மக்களைக் காக்கவே ” என கூறி கோபத்துடன் தனது வாளை எடுத்துக் கொண்டு கிளம்பினார்.
அவரை ஓர் குரல் தடுத்தது.
“தாத்தா கொஞ்சம் நில்லுங்கள்“
திரும்பினார் ருத்ரன்.
அங்கு அந்த அழகிய பாலகன் பதிமூன்று அகவைதான். முகத்தில் ஓர் ஏளனச் சிரிப்பு. ருத்ரன்தான் அவனுக்கு குரு. அவரை தாத்தா என்று அழைப்பதுதான் வழக்கம். அவனது கையில் ஓர் வாள் இருந்தது. அது வைரங்களால் கலந்து செய்யபட்டு மின்னியது. அவன் இந்திரவர்மன் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
அவனை கண்கள் விரிய பார்த்த அமைச்சர் “நீ எங்கே வருகிறாய்“
“தாத்தா நீங்கள்தானே போதித்தீர்கள் பதறிய காரியம் சிதறும் என்று” அமைச்சரின் மூளை நிதானமடைந்தது.
“இந்திரா உன் தந்தையும் தாயும் இறந்துவிட்டனர் அதில் உனக்கு வருத்தம் இல்லையா“
“தாத்தா அவர்கள் என் தந்தையாகவோ தாயாகவோ இறக்கவில்லை…. அரசனாகவும் அரசியாகவும் இறந்திருக்கின்றனர். அரசனின் கடமை மக்களை காப்பது தானே அதைதான் அவர்கள் செய்துள்ளனர்” என்று கூறியவனின் கண்ணில் சிறிய துன்பம் தெரிந்தது.
குருவுக்கே பாடம் சொல்லும் நிலையை சிறுவயதிலேயே அடைந்துவிட்டான். அவனது நிலைப்பாட்டை உணர்ந்த ருத்ரன்
“அரசே நான் என்ன செய்யவேண்டும் உத்தரவிடுங்கள் ” என அவனை அரசனாக மாற்றியிருந்தார். இது அவனது புத்திகூர்மைக்கு ஏற்ற முடிவுதான்.
“தாத்தா எதிரியின் படை குறிவைப்பது நம்நாட்டின் முக்கியநபர்களைதான்.. உதாரணமாக அரசர் அரசி மற்றும் பல அமைச்சர்கள்….”
சிறிது யோசித்தவர் “ஆம் அரசே வீரர்களுக்கு பெரிய இழப்பு இல்லை… தலைமையை துண்டித்து குழப்பம் செய்கின்றனர். அதற்கு நாம் என்ன செய்யமுடியும் அரசே“
“கருட வியூகம் அமைக்கவேண்டும் அமைச்சரே“
“என்ன கூறுகிறீர்கள் ” என அதிர்ச்சியில் உறைந்தார். அதற்கு காரணம் இருந்தது.
கருட வியூகம் என்பது ஓர் கருடன் நாகத்திடம் சண்டையிடுவது போல தலைமைப் பொறுப்பாளர் உயிரை பணயம் வைக்கவேண்டும் அவரை கொல்லவரும் எதிரி மன்னனை நொடி தாமதிக்காமல் கொல்லவேண்டும் இதில் பெரும் படையிழப்பு ஏற்படும். சிறிது தவறினால் கூட மன்னருக்கு இறப்பு தான். இதுவரை வெறும் ஏட்டில் மட்டுமே எழுதபட்டிருந்த ஒரு வியூகம். எந்த போரிலும் யாரும் பயன்படுத்தியதில்லை. மன்னரின் உயிருக்கு ஆபத்தான வியூகத்தை யார்தான் பயன்படுத்துவார்கள்.
ஆனாலும் தன் உயிரைவிட மக்கள்தான் முக்கியம் என்று உணர்ந்தவனுக்கு இறுதியாக இருக்கும் ஒரே தலைமை தான்தான் என உணர்ந்திருந்தான் இந்திரவர்மன்.
ருத்ரன் தடுத்துபார்த்தார். ஆனாலும் அரசகட்டளை என கூறி அவரை சம்மதிக்க செய்தான்.
போரில் பூபோல ஒரு சிறுவன் அமர்ந்திருக்க… அவன்தான் இந்தநாட்டின் இறுதி அரண் என்று அறிந்த எதிர்நாட்டு மன்னன் எந்த கருனையும் இல்லாமல் அந்த பாலகனை கொல்ல முன்னேறினான்.
சூரியன் வெடித்து சிதறியது போல காணப்பட்டது அந்தப் போர்களம். வீரர்கள் இந்திரனை காத்துநிற்க வலையில் சிக்குன்டான் எதிரிமன்னன். ஆனாலும் கருட வியூகத்தின் தர்மம் மன்னர்தான் மன்னரை கொல்லவேண்டும். சிறைப் பிடிப்புக்கு அதில் கருணை இல்லை ரத்தம் மட்டுமே பிராதானம்.
அதை தெரிந்து வைத்திருந்த எதிரியின் முன் நின்ற சிறுவன் யானைமுன் பூனையாக தெரிந்தான்.
எதிரியின் கையிலிருந்து வீசப்பட்ட ஈட்டி இந்திரனை நோக்கி வரவே தாவிகுதித்தவன் அதில் ஓர் காலை மிதித்து பறக்க அது தரையில் விழுந்தது. அடுத்த நொடி பிரம்மாண்டமான எதிரியின் தலைக்கு மேலே பாய்ந்த சிறுவனின் கையில் இருந்த வைரக் கத்தி மின்னவே. அதன் ஒளி எதிரியின் கண்ணில் பிரதிபலித்தது.
மண்டைஓடு இரண்டாக பிளக்க பட்டு சரிந்தான் அந்த கொடூரன்.
தரையில் கால் வைத்த இந்திரன் “தளபதியாரே சங்கை முழங்குங்கள் ” என கூற போரொலியுடன் சங்கு முழங்கியது.
அதை உணர்ந்த குடகு வீரர்கள் கருடவியூகத்திலிருந்து நாக வியூகத்திற்கு மாறினர். இது எதிர்நாட்டு வீரர்கள் எதிர்பார்க்கவில்லை மன்னர் இறந்த சோகம் வேறு குடிகொள்ள அனைவரும் கொன்று வீழ்த்தப் பட்டனர்.
இப்படி இக்கட்டான சூழ்நிலையில் அரசன் ஆனவன் தனது நாட்டினை செழிப்பாக்க பட்ட துன்பங்களும் போர்களும் திட்டங்களும் அந்த ஈசனுக்கே புதிரானவை.
தனது தந்தையின் இறுதி வாக்கான “இந்திராணி உனக்காக காத்திருப்பாள்” என்ற வார்த்தைதான் அவனை இங்கு அழைத்து வந்திருக்கிறது.
இன்று அந்த அழகுப் பதுமையின் அருகில் இருக்கிறான். இதுவரை தான் பட்ட துயரங்களை அவளிடம் பகிரவேன்டும். அவளது மடியில் தலைசாய்த்து அவள் தாலாட்டு பாட தூங்கவேண்டும் என்பது போல இருந்தது. ஆனாலும் அமைதியாக கைகோர்த்து நடந்துகொண்டிருக்கிறான் ஏனோ தெரியவில்லை.
அவர்கள் நடந்து செல்ல சூரியன் வழிவிட்டு நிலா எழும்பும் தருணம் பொன்னால் செய்யப்பட்ட அரண்மனை கூறை மின்ன சூரியனின் இறுதி செங்கதிர்களால் இரண்டு காதல்புறாக்களின் மேனியும் ஜொலித்தது.
அவளது கையை பிடித்திருந்தவன் அங்கு தெரிந்த பால்கனியில் கையை ஊன்றி நின்றான். அதன்கீழ் ஓடும் வற்றா நதி ரம்மியமாக காட்சியளித்து. அவளும் அவனருகில் வந்து நின்றாள்.
அவனது மனதில் இருப்பதை கண்களால் உணர்ந்தாள். அவனுக்கு ஓர் ஆறுதலாக அவனது வலிய தோளின் மீது தலை சாய்த்தாள். இந்திரன் விண்ணிலிருந்து உனை அழைக்க வருவான் என அவளது பெற்றோர் சொல்லி வளர்த்ததாள் இவன்மீது இவளுக்கு ஏற்கனவே காதல் இருந்தது.
“ஏன் இந்திராணி என்மீது கோபம் எதுவும் உள்ளதா“
“உங்கள்மீதா ஏன்க்கா ஏன் அப்படி கேட்கிறீர்கள்“
“இத்தனை வருடங்களாக நான் உன்னை காண வரவில்லை என்ற கோபம் இருக்கத்தானே செய்யும்” என மெதுவாக பேசினான்.
“காதலில் காத்திருப்பது ஒரு சுகம் அந்த சுகத்தை நான் இத்தனை வருடங்கள் அனுபவிக்க அனுமதித்ததால் காதல் கூடியதே தவிர வேறு ஒன்றும் தோன்றவில்லை.”
“உன் மனது குழந்தைபோல உள்ளது இந்திராணி… நீ என் காதலை ஏற்றுகொள்வாயா என தயங்கி தான் இங்கு வந்தேன்“
“அந்த ஐயமே வேண்டாம் காதலா நான் உனக்காகத்தான் காத்திருக்கிறேன்” என அவனது கண்களை பார்த்தாள்.
அந்த நீல விழியில் விழுந்தவன் அவளது சிரிப்பில் குழியில் விழுந்த மச்சத்தை மீட்கும் பொருட்டு தன் கைகளை அவளது கன்னங்களில் வைத்தான்.
அன்பிற்கு ஏங்கும் குழந்தைபோல காதலுக்கு ஏங்கியவள் அவனது இரு கைகளுக்குள் அகப்பட்டாள்.
“இந்திராணி நீ கடவுளின் பரிசு… அதுவும் அவர் எனக்கு உன்னை தந்திருக்கிறார் என்றால் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் என் நன்றிகடன் தீராது. அதிலும் இந்த விழுகள் நீல மான்கள் எப்பொழுதும் துள்ளுகின்றன. இந்த மச்சம் பிரம்மனே வைத்த பொட்டு. உன் சிரிப்பிற்கு குடகுநாடே அடிமை. அதிலும் இந்த இதழ்கள் என்னை வீழ்த்துகிறதே” என வர்ணித்து கொண்டே அவளது இதழை நெருங்கினான்.
அரண்மனையின் குறுக்கே ஓடும் ஆற்றின் சத்தம் சலசலக்க சில்லென்ற தென்றல் வீசவே அவளது உடைகள் காற்றில் பறந்தன ஓர் கொடியை போல கூரையில் புறாக்கள் கொஞ்சிக் கொண்டிருக்க…. இரண்டு இதழ்களும் இனைந்தது… ஓர் உதயத்தின் அடையாளமாய் இருவரும் உயிரை பறிமாறினர் இதழ் வழியாக… நிலவு ஒரு பெண்ணாக இருந்தால் அதுவும் வெட்கத்தில் மூழ்கியிருக்கும் இவர்களது இனைப்பினாள். இந்த நிமிடத்தை இருவரும் நிறுத்த நினைத்தனர். ஆனால் திரைமறைவில் இருந்து ஏதோ விழும் சத்தம் கேட்கவே ஒரு பூனை துள்ளிக்குதித்து ஓடியது.
சட்டென இருவரும் விலகி கொண்டனர். இந்திராணி வெட்கத்தால் அவள் அறையை நோக்கி ஓடினாள்.
அந்த நிகழ்வினால் இத்தனை நாள் தான் சேமித்து வைத்திருந்த துக்கம் மறைய இதயம் லேசாக மாறியது. அவன் பால்கனியில் தனியே நின்று நிலவை ரசிக்க துவங்கினான் அதில் இந்திராணி முகம் தெரிந்தது.
சற்று கூர்ந்து பார்த்தான் ஓர் கழுகு வட்டமிட்டது. முகத்தை சுருக்கியவன் வேகமாக காண்டீபன் இருக்கும் திசை நோக்கி நடந்தான்.
திரைமறைவில் இருந்த ஒரு பெண் வெளிப்பட்டாள் அவள் துளசிதான். அவளது கண்களில் கண்ணீர். பின்னே தன் காதலன் வேறு பெண்ணிற்கு முத்தம் தருவதை யார்தான் விரும்புவாள். அதனால் தான் அங்கிருந்த பாத்திரத்தைத் தட்டிவிட்டவள் பரணில் தூங்கியிருநத பூனையை எழுப்பி விட்டாள்.
அவளது திட்டம் நிறைவேறினாலும் அவன் தனக்கு சொந்தமில்லை என நினைக்கும்போது கண்ணீர் முத்தாய் சிதற நிலவை பார்த்தாள். அந்த நிலவின் ஒளியில் இவளது கண்ணீர் மின்னுவதை தற்சொயலாய் அவன் சென்றுவிட்டானா என்று அங்கு வந்த இந்திராணி பார்த்து ஒரு ஏளன புன்னகை வீசி திரும்பவும் சென்றுவிட்டாள்.
“காண்டீபா நீங்கள் என்ன கூறுகிறீர்கள் எங்கள் நாட்டின் மீது போர் தொடுப்பா” கோபத்தின் உச்சிக்கு பயனித்தார் வீரசெழியன்.
“ஆம் மன்னா“
“யார் அவர்கள் “
“அவர்கள்தான் அகோரிப்படை“
“என்ன அகோரிபடையா?” அரசர் கையிலிருந்த செங்கோலை பிடுங்கியது போல அரியணையில் சரிந்து விழுந்தார்.
இந்திரனின் தாய் தந்தை இழப்பிற்கு காரணமான போரின் எதிரிகள் இந்த அகோரிப்படைதான்… சிலசமயம் குடகு வீரர்கள் கூட அஞ்சுவார்கள். இவர்களுக்கு கருனை கிடையாது. பெண்கள்தான் இவர்களுக்கு போதை… லட்டசகனக்கான வீரர்களை கொண்டது. தன் வீரர்களின் ஆண்மைபசிக்கு தீணிபோடவே பல படையெடுப்புகளை நிகழ்த்தியிருக்கிறார்கள். சிலநேரங்களில் மண்ணிற்கும் போர் நடக்கும்… இந்த படையின் தற்போதைய அரசன் அகோரியன். அவனது தந்தையை தான் சிறுவயதிலேயே கொண்று வீரசாகசம் புரிந்திருந்தான இந்திரவர்மன். ஆனால் இவர்கள் இந்த இந்திரபுரியின் மீது போர் அறிவித்திருப்பது வேறோரு புதிய காரணத்திற்காக.
மன்னர் இதை தாங்கும் சக்தியில்லாததால் ஓர் கட்டுப்படாத முத்துமூட்டை போல் அமர்ந்திருக்க…..
வானத்தில் ஒரு பருந்து வலம்வந்தது.. அடுத்த சில நொடிகளில் இந்திரன் அங்கு வந்து சேர்ந்தான்.
அந்த பருந்து காண்டீபன் அருகில் வரவே அதன் கழுத்தில் ஒரு குரங்கின் மன்டை ஓடு இருந்தது. அதன் கண் இடுக்கில் ஒரு பட்டு துணி இருந்தது.
அதை எடுத்தவன் பிரித்து பார்த்தான். அதில்..
நான் அகோரியன் அகோரிபடையின் அரசன்….. என துவங்கியது.