வணக்கம் தோழமைகளே!
‘காதல் யுத்தம்’ என்ற புதினத்தின் மூலம் நமது தளத்தில் அடியெடுத்து வைத்திருக்கும் திரு.கணபதி அவர்களை வரவேற்கிறோம்.
கதையின் கதாநாயகன் விஷ்ணுவை வெறித்தனமாக விரும்பும் கவிதா, ஆனால் தான் கனவில் மட்டுமே தோன்றிக் கண்ணாமூச்சி காட்டும் கனவுக்கன்னியைத் தூரிகையில் சிறைபிடித்துக் காதலிக்கும் கதாநாயகன். மூன்று மாதம் கால அவகாசத்தில் தன் நாயகியைக் காண முடியாவிட்டால் கவிதாவின் காதலை ஏற்றுக் கொள்ள சம்மதிக்கும் விஷ்ணு. அந்தக் கெடு முடியும் தினம்… தன் கனவுக்கன்னியை நம் நாயகன் கண்டானா? அவள் கனவில் வந்தக் காரணம் என்ன? இவற்றை சரித்திரத் தொடர்போடு சுவையாகத் தந்திருக்கிறார் ஆசிரியர். படியுங்கள், படித்துவிட்டு உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
அன்புடன்,
தமிழ் மதுரா
அத்தியாயம் – 1
பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது போல பூமியே அதிர்ந்தது, அனைவரும் திகைப்பில் இருந்த நேரம் தான் மிகப்பெரிய யானைப் படையின் முன் நிற்பதை உணர்ந்தான். தனக்கு பின்னால் பெரிய யானை ஒன்று விழுந்ததால் ஏற்பட்ட அதிர்வை அவனது கால்பாதத்தால் தற்போது தெளிவாக உணரமுடிந்தது. சுற்றிலும் பார்த்தான் மூன்று மாபெரும் யானைகள் மதம்பிடித்ததைபோல அவன்முன் நெருங்கிவரவே தான் ஒரு நிராயுதபாணியாக நிற்பதை உணர்ந்தான்.
தனது ஆயுதத்தைத் தேடினான் ஆனால் அந்த கூரிய தனது வாள் சற்றுமுன் இறந்த யானையின் இதயத்தில் சரியாக குத்தபட்டிருப்பதை பார்த்து மீசையை பெருமையாக தடவியவனை ஒரு யானை தனது பெரிய துதிக்கையால் தூக்கி மேலே வீசியது.
காற்றைக் கிழித்துக் கொண்டு பறந்த அவனது முடிகள் கண்களின் முன்னே பறக்க அதை பொருட்படுத்தாதவன் அவனது கட்டைவிரலை லாவகமாக மடக்கி யானைகளின் சில இடங்களில் குறிவைத்து தாக்கியதுதான் தாமதம் உடனே துனையில்லாமல் நிற்கும் கருங்ககற்களை போல யானைகள் கீழே சரிந்தன.
வர்மகலையின் புனிதத்தை பெருமையாக நினைத்து அவனது பாதங்கள் பூமியை அடையும் நேரம் தூரத்தில் குதிரைபடையின் வீரர்களால் ஏற்பட்டிருந்த அம்பு மழை அவனை அடைந்திருக்க; இதற்குமேல் இந்த உயிர் தனக்கு சொந்தமில்லை என உணர்ந்தான். பலே இது வீரமரணம் என்று நெஞ்சை நிமிர்த்தி நின்றான்.
சில அம்புகள் அவனை தாண்டி செல்ல சரியாக குறிவைக்கபட்டு பாம்பை போல ஓர் அம்பு அவனது கண்ணிற்குமுன் வந்தது. அரை அங்குல இடைவெளியில் அவனது கண்கள் விரிய அந்த அம்பு அவனது மூளையை தாக்க முன்னேறியது. கண்மணிகள் விரிவடைய வட்டத்தின் நடுவே பதம்பார்க்க அம்பின் முனைகள் நின்றதருனம்.
சட்டென விழித்துக்கொண்ட விஷ்ணு தனது செல்போனில் சொருகியிருந்த ஹெட்போன் எதையோ அரைகுறையாக ஒலிக்க முகத்தை துடைத்துகொண்டான்.
‘என்னடா இந்த கனவு வேற நம்மை அடிக்கடி வந்து பயப்பட வைக்குது; என்னதான் போர் ஆ இருந்தாலும் இப்படியா; அதிலும் இந்த அம்பு வந்தவுடனே ஏதோ இடைவேளை விட்டமாதிரி முழிப்பு வேற வந்துடுது‘
என நினைத்துகொண்டு எழுந்தவன் முகத்தை கழுவிவிட்டு கடிகாரத்தை முறைக்க அது “ஹலோ தம்பி நீங்க இன்னும் ஐந்து மணி நேரம் தூங்கனும் ” என்று கிண்டல் செய்யுமாறு 12:00 ஐ காட்ட அவன் அலாரம் செட் செய்திருந்த முள்ளோ 5ல் நின்று சிரித்தது.
‘இந்த மாதிரி கனவு வந்ததுக்கு அப்புறம் ஒருத்தன் நிம்மதியா தூங்குனா அவன் மனுசனே இல்லை‘ என விஷ்ணு நினைப்பதில் எந்த தவறும் இல்லை. இது கடந்த சில வருடங்களாக அவனுக்கு தோன்றும் ஒரு கனவு; ஆனால் இது தொடர்ச்சியாக வருவதால் பயம் கொண்டவன் இதற்கெனவே மருததுவசெலவும் செய்கிறான்.
தனது மேஜையில் இருந்த ஒரு பாட்டிலை எடுத்தவன் அதிலிருந்த வெள்ளைமாத்திரை ஒன்றை எடுத்து வாயில் போட்டுவிட்டு அனைத்து விளக்குகளையும் எரியசெயதான். அப்படியே மெத்தையில் சார்ந்தவன் காதோரத்தில் அவனது மண்டை ஓடு படம் போட்ட ஹெட்செட் அமைதியான சூழலில் அவனை பார்த்து சினுங்க அதை எடுத்து காதில் அணந்தான்.
“எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று
அது ஏதோ, அது ஏதோ உன்னிடம் இருக்கிறது;
அதை அறியாமல் விடமாட்டே; அதுவரை உன்னை தொட மாட்டேன்…”
என SPB மூச்சுவிடாமல் பாடிகொண்டிருக்க அவன் மனம் போரில் இருந்து திசைதிரும்பி அவளை நோக்கி நகர்ந்தது.
அவள் பெயர் ரம்யா; மிகுந்த பேரழகி வட்டமான நவரசத்தையும் பொதித்த முகம்; மூக்கின் ஓரத்தில் இருக்கும் சிறிய மூக்குத்தி அவளது பெயரை போல ரம்யமான தோற்றத்தை கொடுக்க பிரம்மமனின் கண்ணே பட்டுவிட்டதுபோலும் அவளை படைக்கும்போது அதற்காகவே அவளது கண்ணத்தில் ஓர் சிறிய மச்சம் அதே அவள் சிரிக்கும்போது கண்ணத்தில் விழும் குழியில் அடிக்கடி சிறைப்பட்டு கொள்ள பிரம்மனின் தந்திரம் பொய்த்து நின்றது.
எப்படிப்பட்ட ஒரு ஆணாக இருப்பினும் அவள்மீது எளிதில் காதல் கொள்வர். சில நேரம் பெண்களும் அவள் அழகில் சிலையாகி விடுவர். அன்பாய் பார்த்தால் குழந்தைமுகமாகவும் கோபத்தில் சிவந்தால் சூரியனை போலவும் இருக்கும் அந்த அற்புத பெண்ணை பற்றி நினைக்கும்போது விஷ்ணுவிற்கு மூளையில் மின்சார துளிகள் தெறித்து ஓடின.
தனது காதல் கோட்டையில் வீட்டிருந்த அந்த ரம்யா விஷ்ணுவின் காதலிதான் ஆனால் இல்லை…. (முறைக்காதீர்கள்) அவளை படைத்த பிரம்மனே விஷ்ணுதான். ஆம் ரம்யா அவனது கனவு தேவதை அவளை அவன் இதுவரை பார்த்ததில்லை. அப்படி ஒரு பெண் இருக்கிறாளா இல்லையா என கூட தெரியாது. ஆனால் அவன் இவளை காதலிக்கிறான்.
எந்த அளவுக்கு என்றால் அவளது அனைத்து முக பாவனைகளையும் ஒரு சிற்பியை போல அழகாக வரைந்து வைத்துள்ளான். அவளது நீலநிற கண்களை இதுவரை வரைய முயன்றவனுக்கு இதுவரை ஏற்பட்டது தோல்வியே… பின்னர் அந்த கண்களை மூன்று நொடிகள் பார்த்தாலே அதற்கு அடிமையாகி விடுவோம். அதனால் அவனது ஓவியங்களில் ஒன்றைதவிர அனைத்திலும் கண்கள் இல்லை. அந்த ஒன்றிலும் அவள் வெட்கத்தில் கண்களை மூடியிருப்பதால் தப்பித்தான்.
அவனது அறை முழுவதும் அவளது ஓவியங்கள் சூழ்ந்திருந்தன. இன்று எப்படியாவது கண்ணை வரையவேண்டும் என நினைத்தவன் தனது வெள்ளைமாத்திரை வேலை செய்வதை உணரகூட நேரம் இல்லாமல் மெத்தையில் அழகாக தூங்கி போனான். ஆனால் ரம்யாவோ இவனது கனவுகோட்டைகுள் புகுந்து உணர்ச்சி விளையாட்டை துவங்கினாள். அந்த பயங்கர கனவு வராததால் விஷ்ணு நிம்மதி அடைந்தாலும் ரம்யா அவனை நிரப்புவது இதயத்தில் பூக்களை பூக்க செய்தது.
*******
மணிமுள் தனது கூரிய முனையை ஒன்றை நோக்கி நகர்த்திக் கொண்டிருக்க முனுசாமி தொடர்ந்தான்.
“ஏன் துரை இப்ப நீங்க அங்க போய்தான் ஆகனுமா?”
“ஹே பூவர்மேன் முதல்ல லைட் எல்லாம் ஆஃப் பன்னு” என அந்த கோட் அணிந்திருந்த மனிதன் உத்தரவிட முனுசாமியோ தனது கையிலிருந்த விளக்கை அனைத்துவிட்டு துரை என அவனது பெயரை மனதில் பதிந்து கொண்டான்.
இருவரும் ஓர் படகில் ஏறி அமர்ந்தனர். அதில் சத்தம் வராமலிருக்க கரிம எரிபொருளால் இயங்கும் எந்திரத்தை எடுத்துவிட்டு மின்இயந்திரத்தை மாற்றிவைத்திருந்தான் முனுசாமி.
முனுசாமியோ அந்தமான் தீவில் ஓர் மீனவன். அந்த தொழிலில் போதிய வருவாய் இல்லாததால் அங்கு வரும் வெளிநாட்டு பயனிகளை படகில் ஏற்றி கடலின் அழகை காட்டி வருபவன்.
‘ஆனால் இந்த கோட் அணிந்த வெள்ளைக்கார மனிதன் இரவில் சென்று எதை ரசிக்க போகிறான். கையில் கேமிராவும் இல்லையே‘ என எண்ணியவனுக்கு சுற்றுலா என்பது கேமிராவுக்காக என்ற ஓர் எண்ணம் இருந்தது.
கோட் அணிந்த மனிதன் கூறிய திசையை நோக்கி அந்தபடகு சத்தம் இல்லாமல் பயனித்து கொண்டிருந்தது. ஜில் என்ற காற்றுடன் கடல் நீரின் சாரலும் வீச இதமாய் இருந்தது முனுசாமிக்கு.
காற்றை கிழித்து செல்லும் அம்பினை போல கடலை கிழித்துக்கொண்டு படகு சென்றுகொண்டிருக்க வாயாடியான முனுசாமிக்கு சற்று எரிச்சல் தட்டியது. எனவே அந்த மனிதனிடம் பேச்சுகொடுக்க ஆரம்பித்தான்.
“ஏன் துரை இந்த ராத்திரில போய் என்னத்த பாக்க போரிங்க?. அதுவும் நீங்க சொல்ற இடத்தில் எனக்கு தெரிஞ்சு கடல் மட்டும் தான் இருக்கு”
“ஹே உன் பெயர் என்ன சொன்ன?” என முடிக்கும்முன் ” முனுசாமி” என உரக்க கூறினான்.
“ஆங்ங்… முனு… நீ சில விசயத்தில் தலையிட கூடாதுன்னு நினைக்குறேன்“
சிறிது நேரம் அமைதி நிலவ தண்ணீரில் படகு ஓடும் சத்தம் மட்டும் சலசலவென கேட்டுகொண்டிருந்தது.
ஆழ்ந்த சிந்தனையில் இருந்த அந்த கோட் மனிதன் பேச ஆரம்பித்தான்.
“இங்க பாரு முனு உனக்கு மட்டும் இந்த விசயத்த சொல்றேன் யாருகிட்டையும் சொல்லிடாத“
“சரிங்க துரை” என உடனே கூறினான்
“உங்க நாட்டில் ஒரு தீவு இருக்கு அதற்கு பெயர் செரிபியன் தீவு ” என அவன் கையில் இருந்த வரைபடத்தில் ஒரு இடத்தை காட்டினான். நிலவொளியில் லேசாக அது தெரிய…
“இல்ல துரை இந்த இடத்தில் கடல்தண்ணிதான் இருக்கு“
“ஹே ஃபூல் இது இந்தியாவால் தடை செய்யபட்ட பகுதி. இதில் சில நூறு மனிதர்கள்தான் இருக்காங்க. அவங்க அறுபதாயிரம் வருடம் பின்தங்கியிருக்காங்க“
“….” ஆ வென வாயை பிளந்து அமர்ந்திருந்தான் முனுசாமி.
“ஆமா அவங்களுக்கு நெருப்பு அப்படிங்கிறதே இன்னும் தெரியாது. அவங்க யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. அவங்களும் வெளியே வருவதும் இல்லை. கடைசியா அவங்க அனுமதிச்சது ஒரு சோழ அரசர் மட்டும்தான்.”
சிறிது ஆச்சரியத்தில் இருந்த முனுசாமி எதாவது கேட்க வேண்டுமே என நினைத்து “எதுக்கு தடை பன்னாங்க” என முடித்தான்
“அவங்க தீவுக்கு உள்ளே போனவங்க எல்லாத்தையும் கொலை பன்றாங்க“
என கோட் மனிதன் கூறும் முன்னே
“ஐயோ துரை நாம் இப்ப அங்கயா போகிறோம்…. வேண்டாம் வாங்க திரும்ப போயிடலாம்” என குரல் நடுங்கியது.
“நீ பயப்படாத நாம் உள்ளே போகபோறது இல்லை அந்த தீவ சுத்திபாத்துட்டு வந்திட போறோம் அவ்வளவுதான்” என பொய் சொல்லி சமாளிக்க முனுசாமி சமாதானம் அடைந்தான்.
படகு அமைதியாக இயங்கியது. எதிர்பாராத விதமாக ஓர் பாறையில் அது இடிக்க துரையின் கையில் இருந்த மேப் கீழே தவறி விழுந்தது.
“ஐயோ துரை இருங்க நான் எடுத்துட்டு வருகிறேன்” என இடுப்பில் ஓர் கயிற்றை கட்டிக்கொண்டு தண்ணீரில் பாய்ந்தான் முனுசாமி.
ஆனால் அந்த கயிறு அறுபட்டிருப்பதை அவன் கவனிக்கவில்லை.
தூரத்தில் அந்த படகு எதிலோ தட்டி நிற்பதை கழுத்தளவு தண்ணீரில் நீந்திகொண்டே பார்த்து முன்னேற முயன்றான்.
அப்போது படகில் இருந்த ஒரு விளக்கு எரிய அந்த கோட் மனிதன் அலறும் சத்தம் கேட்டது. அந்த மங்கலான வெளிச்சத்தில் கோட் மனிதனை சுற்றி சில ஆதிவாசிகள் நிற்பதை காணமுடிந்தது. அவர்கள் கையில் கூறிய ஈட்டி போன்ற ஆயுதங்கள் இருக்க கோட் மனிதன் உடல் மீனுக்கு இரையாக பிய்த்து எரியபட்டது.
படகு சின்னாபின்னமாக உடையவே அதிலிருந்த மன்னென்னை விளக்கு சாய்ந்து படகு தீ பற்றியது. அதை பார்த்த அந்த ஆதிவாசிகள் ஓட துவங்கினர். ஆனால் அதில் ஒருவன் தூரத்தில் சென்று முனுசாமியை பார்ப்பதுபோல தோன்றவே முனுசாமிக்கோ குளிர்நீரிலும் நெற்றியில் வியர்த்தது.
அங்கோ முனுசாமி இருப்பதை அடையாளம் கண்ட ஒருவன் ஏதோ கூக்குரலிட அனைவரும் தண்ணீரில் பாய்ந்தனர். அவர்கள் முனுசாமியை நொருங்கவே.... முனுசாமிக்கோ அனைத்து இயக்கங்களும் நிற்பதாய் உணர்ந்தான்.
***********
சூரியன் முகத்தில் பலாரென அடிக்க கண்விழித்தான் விஷ்ணு.
‘டைம் மெசின் இன்னும் கண்டுபிடிக்கலைன்னு சொல்றவங்கள ஜெயில்ல போடனும். அவங்களுக்கு ஒரு தூக்கமாத்திரை கொடுத்தால்தான் தெரியும்‘ என நினைத்துகொண்டு மணியை பார்க்க 7:30 ஐ தாண்டியிருந்தது.
அசதியுடன் எழுந்தவன் சற்று மழுங்கிய தூரிகைகள் உடைய பிரஷ்ஷை எடுத்துவிட்டு வெட்கத்தால் கண்ணை மூடியிருந்த ரம்யாவை பார்த்து மெய்சிலிர்த்தான்.
பின் பிரஷ்ஷிற்கு துனை தேட கோல்கெட்டை பிதுக்க அது மாதகடைசி என்பதை காட்டுவது போல் அவனை சிரமபடுத்த ஒரு குத்துசண்டையே நிகழ்ந்து இறுதியாக பற்களுக்கு வெள்ளையடித்தான்.
வேகமாக கிழம்பியவன் ‘இப்படி தினமும் தாமதமாக எழுந்தால் கேன்டினுக்குதான் எல்லா காசையும் கொடுக்கனும்‘ என சிரித்துகொண்டே தனது தோழனான ஹீரோ ஹோண்டா வை எடுத்தான். அது “ஏன்டா என்னை பழைய முதலாளிகிட்ட இருந்து பிரிச்சு வச்ச” என கூறுவதுபோல முன்னங்காலில் காற்று இல்லாமல் இருந்தது.
“டேய் கருப்பா இதெல்லாம் கொஞ்சம் ஓவர்டா; ரெண்டு நாளைக்கு முன்னாடிதான் உனக்கு கால்ல கட்டுபோட்டேன். இப்படி பன்றீங்களேமா” என உயிரில்லாத தனது தோழனை அப்படியே விட்டு விட்டு வெளியே வந்தான்.
அதை ஒருமுறை திரும்பி பார்க்க “ஏன்டா நீ என்னை அவசரமா வாங்கிட்டு வந்துக்கு காரணம் எனக்கு நல்லா தெரியும்” என்று கூறுவது போல தோன்றவே.
“அது தெரிஞ்சதுனாலதான்டா நீ தினமும் இப்படி செஞ்சு அந்த பிரட்சனைகிட்டயே மாட்டி விடுற” என அதை லேசாக முறைத்து விட்டு நடக்க துவங்கினான்.
அவன் தெருவை விட்டு வெளியே வந்ததும் பேருந்து நிறுத்தத்தை அடைந்தான். அவ்வளவாக கூட்டம் இல்லை. ஆனால் அவன் மனம் அந்த பிரச்சனையை நினைத்து பயந்துகொண்டிருந்தது.
நல்லவேளையாக பிரச்சனை வரும்முன் பேருந்து வந்தது. மனதில் நிம்மதி அடைந்தவன் அதில் ஏறினான். சில இருக்கைகள் காலியாக இருக்கவே அதில் ஒன்றை தேர்வுசெய்து அமர்ந்தான்.
ஆனால் விஷ்ணுவால் அந்த இடத்தில் ஏதோ ஓர் ஈர்ப்பு இருப்பதை உணர்வே பேருந்தும் முன்னேற துவங்கியது.
அவனது முகத்தை மயிலிறகு வருடுவதாய் உணர்ந்தான். சற்று நிமிர்ந்தவன் முன்னால் அமர்ந்திருந்த பெண்ணின் கூந்தல் ஒன்று படுவதை உணர்ந்தான்.
‘ஓ எவ்வளவு பெரிய கூந்தல் இவள் நிச்சயம் ரம்யாவாதான் இருக்கனும்‘ என மனதில் ஓர் உணர்வு ஏற்பட்டது. அவன் அடிமனதில் சிலரை பார்க்கும்போது தனது கனவு தேவதையா இருப்பாளோ என எழும் எண்ணம்தான் இது. இது இயல்பெனினும் இன்று ஏனோ இந்த உணர்வு வலிமையாக உள்ளதே என எண்ணியவன் அவளது முகத்தைபார்க்க எழுந்தான்.
திடீரென ஒரு கை அவனது தோளை அழுத்தியது உடனே நிமிர்ந்து பார்த்தான். அதற்குள் அவள் விஷ்ணுவின் அருகில் அமர்ந்து கொண்டாள்.
“என்ன விஷ்ணு என் மனதில் உள்ளதை நான் உன்கிட்ட சொல்லிட்டேன்.. நீதான் இன்னும் ரிப்ளை பன்ன மாட்டேங்குற“
“இங்க பாரு கவிதா நீ படிக்குற பொண்ணு உன் மனதை நான் கலைக்க விரும்பல ஃப்ளீஸ் என்னை புரிஞ்சுக்கோ நமக்கு இது செட் ஆகாது“
“படிக்குற பொண்ணா? காலேஜ் ஃபைனல் இயர் படிக்குறேன் நீ காலேஜ் முடிச்சு என்ன முப்பது வருடமா ஆகுது“
சற்று கோபமடைந்த விஷ்ணு அவளை முறைக்க “ஏய் மாமா உன் கோபம் கூட அழகுதான்டா ” என குழந்தையாய் மாறியவளிடத்தில் என்ன கூறுவது என்று தெரியாமல் தலைகுனிந்து கொண்டான்.
கவிதா அழகான பெண் நல்ல திறமைசாலி தைரியம் என்பது அவளது ரத்தத்தில் ஊறிஇருப்பது. வீட்டில் ஒரே செல்லப்பிள்ளை சற்று பணம்கொண்டவள் அதற்கேற்ற திமிரும் சிறிது உண்டு. விஷ்ணுவுக்காக காரில் கல்லூரி செல்வதை விடுத்து பேருந்தில் வருகிறாள். அவளிடம் இருந்து தப்பிக்கவே தன் மாமாவின் பழைய வண்டியை இரண்டாவது கையாக வாங்கி வந்திருந்தான் ஆனால் அது இவளின் அதிஷ்டமாக வாரத்தில் மூன்று நாட்களாவது இவனை பேருந்தில் அனுப்பிவைத்துவிடும்.
இவள் இவனை விரும்புவதற்கு தனிக்கதை உள்ளது…. அந்த நாளை திரும்பி பார்க்க விரும்பாததால் அந்த பேருந்து ஒரு நிறுத்தத்தில் வந்து நின்றது.
விஷ்ணு இறங்குவதற்காக எழவே முன்னால் அமர்ந்திருந்த அந்த பெண் இறங்கிசென்றாள். விஷ்ணுவின் கண்ணில் தூசி விழ சட்டென கண்ணை மூடிய தருனம் அவளது நீல விழியும் கண்ணத்தின் மச்சமும் இவனது விழியில் நுழைந்தது.
வேகமாக விழித்து கொண்டவன் அவளை பார்க்க அவள் ஓர் சக்திவாய்ந்த தேவதையாய் மறைந்து போயிருந்தாள்.
கவிதாவோ விஷ்ணுவின் கையை பிடித்திருக்க “கவிதா நான் இறங்கனும்” என்பதை போல சைகை காட்ட அவளும் தன்னவனை விடுவித்தாள்.
ஆனால் கவிதாவின் நினைவுகள் அவனை சந்தித்த அந்த நாளை நோக்கி நகர்ந்தது…..