ஆரஞ்சு நிற புடவை
“உங்கள பாக்க தான் வந்துருக்கேன்.. உங்கள ஒரே ஒரு முறை பாக்கணும் ப்ளீஸ்.. ஒரே ஒரு டைம்… உங்க கிட்ட கொஞ்சம் பேசணும். நேர்ல மீட் பண்ணனும்…”
******
“ஹாய்..”
பேஸ்புக் சாட்டில் மெசேஜ்.. யார் என்று தெரியவில்லை
சில நொடிகளில் “எப்படி இருக்க….”
ப்ரொபைல் பார்த்தேன்.. யாரிடமிருந்து மெசேஜ் வருகிறதென்று.. ஒரு நிமிடம் இதயம் துடிக்க மறந்தது.. அமைதியாக இருந்தேன்..
என்ன திமிர்.. ‘ஹூ இஸ் திஸ்னு’ அனுப்பினேன்..
பதில் வரவில்லை.. ச்சே என்ன பொண்ணு நான்..
****
சில வருடங்களுக்கு முன்னே
தஞ்சாவூருக்கு 3 மாதம் விடுமுறைக்கு போனேன்.. என் அத்தை வீடு. காலேஜ் முடிச்சு அடுத்து என்ன பண்றதுன்னு தெரியல.. அதான் கொஞ்ச நாள் அங்க இருக்கலாம்னு போனேன்.அத்தை பசங்கலாம் என்னை விட சின்னவங்க..
அங்க தான் ஜியை மீட் பண்ணேன்.. அந்த ஹாலிடே என்ன அப்டியே தலை கீழாக மாற்றி விட்டது.. அவனையும்..
****
அரை மணி நேரம் கழித்து.. மீண்டும் சாட்..
நான் யாருன்னு உனக்கு தெரியலயா?… ☹
ஸாரி ஜி…. கொஞ்சம் முக்கியமான வேலை.. திடிர்னு இப்டி மெசேஜ் வந்த உடனே யாருன்னு பாக்கல.. கொஞ்சம் டென்ஷன் ஆகிட்டேன்..
பதில் இல்லை..
எப்டி இருக்கீங்க ஜி. FB பாத்தேன். இன்னும் பஹ்ரைன்ல தான் இருக்கீங்களா?
ஆமா. இப்போ லீவ்க்கு தஞ்சாவூர் வந்து இருக்கேன்…. ரெண்டு நாள்ல கெளம்பிடுவேன்..
*****
யாருடா இது? – என்னை பார்த்து என் கசின் கிட்ட கேட்டான்..
ஹாய்.. என் பேர் ப்ரியா.. ராம்கியோட கசின்.. லீவ்க்கு வந்து இருக்கேன்.. பஞ்சு மிட்டாய் சாப்பிட்டு கொண்டே சொன்னேன்..
“கணேஷ் அண்ணா அவ கிட்ட வாய் குடுக்காத.. அவ்ளோ தான்..”
ரொம்ப சின்ன சிரிப்பு..
நீங்க யாருன்னு சொல்லலையே.. – நான் கேட்டேன்
என் பேர் கணேஷ்.. இங்க தான் இருக்கேன். ராம்கி வீட்டுக்கு எதிர் வீடு தான்..
ப்ரியா… கணேஷ் அண்ணா செம்ம ஆளு.. எனக்கு ரொம்ப பிடிக்கும்.. ரெண்டு மூணு மாசத்துல பாரீன் போய்டுவார். நான் ரொம்ப மிஸ் பண்ண போறேன் – இது ராம்கி
ஒ.. – வேற ஒண்ணும் சொல்லல..
சிரித்துக்கொண்டே போய் விட்டான்.
*****
நல்லா இருக்கீங்களா? உங்க வீட்ல எல்லாம் எப்டி இருக்கங்க?
ரெண்டு பேரும் ஒரே நேரத்தில் ஒரே மாதிரி மெசேஜ் அனுப்பினோம்..
சிரித்துக்கொண்டேன்..
*****
கொஞ்ச நாள் கழிச்சு கோவில் வாசலில் பாத்தேன். இருவரும் ஒன்றாக உள்ளே நுழைந்தோம்கணேஷை பர்ஸ்ட் பாத்த உடனே ரொம்ப பிடிச்சி போச்சி.. என்னை பார்த்து சிரித்தான்.. நானும்..
“ராம்கி வரலையா?” – ஜி தான்
“இல்ல.. ஏதோ கிளாஸ் இருக்காம்.. நான் தான் போர் அடிக்குதுன்னு வந்தேன்..”
“தனியாவா வந்திங்க?”
“இல்ல.. கொண்டு வந்து விட்டுட்டு இப்ப தான் போனான்..”
“திரும்பி போக வழி தெரியமா??”
“ஏன்… தெரியலைனா நீங்க கூட்டிட்டு போக மாட்டீங்களா?”
என்னை ரொம்ப ஆச்சரியமா பாத்தான்.. வரும் போது வழிய பாத்துட்டு தான் வந்தேன். அதனால தெரியும்…
சிரித்தான்.
“என்ன சிரிக்கறிங்க?”
“ஒண்ணும் இல்ல..”
“உங்க கிட்ட ஒண்ணு கேக்கலாமா?”
“கேளுங்க ப்ரியா..”
“என்ன கேளு-ன்னே சொல்லலாம். எப்படியும் உங்கள விட சின்ன பொண்ணு தான்”
அதற்கும் ஒரு சிரிப்பு..
“உங்க சிரிப்பு ரொம்ப அழகா இருக்கு..” – சொன்னது நான்.. அப்படியே ஒரு ஆச்சரியமான லுக்..
“ஏன் ரொம்ப சின்னதா சிரிக்கறிங்க?…”
“இப்போ தான ப்ரியா சொன்ன.. அழகா இருக்குனு. அதான் சின்னதா..”
ரெண்டு நிமிஷம் இல்ல அதுக்கு மேலயோ.. ரெண்டு பேரும் கொஞ்ச நேரம் எதும் பேசாம பாத்துட்ருந்தோம்.. சட்டென்று அவன் மேல் அப்படி ஒரு ஈர்ப்பு.. இல்ல காதல்? ஏதோ ஒண்ணு.. ஆனால் எனக்கு ரொம்ப பிடிச்சி இருந்தது.. அவனுக்கும்..
******
நாலு நாட்களுக்கு பிறகு.. FBயில்
“ஜி.. ஊருக்கு கெளம்பிட்டிங்களா? எங்க இருக்கீங்க?”
“எஸ். உன்கிட்ட பேசின மறுநாள் கெளம்பிட்டேன்..”
“ஒ.. சென்னை வந்து தான போனிங்க.”
“ஆமா..”
“சொல்லி இருந்தா வந்து மீட் பண்ணி இருப்பேன் ல..”
பதில் வரல.
“நான் சென்னைல தான் இருக்கேன்..”
“தெரியும்.. அது வேண்டாம்னு தான் சொல்லல..”
“ஸாரி..”
“பரவால்ல.. எதாவது ப்ராப்ளம் வரும்..”
“சரி.. எனக்கு வேலை இருக்கு.. பை..”
அன்னிக்கு ரொம்ப நேரம் அழுதேன்..
****
தினமும் தஞ்சை பெரிய கோவிலுக்கு வருவது பழக்கமாகி போனது.. அற்புதமான இடம்.. சில நாட்களாக கணேஷை பாக்க முடியல.. இதோ கோவிலில் தரிசனம் கிடைத்து விட்டது..
“ஹாய்..”
“எங்க காணாம போய்டிங்க? உங்க வீட்டுக்கு வந்தேன் ரெண்டு மூணு தரவ.. ராம்கி தான் கூட்டின் போனான்.. உங்கள காணல.. உங்க அம்மா சமையல் ரொம்ப நல்லா இருந்தது..”
“வீஸா ப்ராசெஸ்.. சென்னை போய் இருந்தேன்..”
‘உங்கள ரொம்ப மிஸ் பண்ணேன்.. ‘(மனசில நெனைச்சேன்)
“ப்ரியா அடுத்த வாரம் நீ ஊருக்கு போக போறன்னு ராம்கி சொன்னான்..”
“இல்ல இன்னும் ஒரு மாசம் இங்க தான்…. “(உள்ள கொஞ்சம் கலக்கமா இருந்தது) சொல்லும் போதே கண் கலங்கியது..
“என்னாச்சு.. ஏன் ஒரு மாதிரி இருக்க..”
“நிஜமாவே அப்ராட் போறிங்களா? ராம்கி சும்மா சொல்றன்னு நெனச்சேன்..இங்கயே எங்கயாது வொர்க் பண்ணலாமே?”
“வேற வழி இல்ல ப்ரியா.. வீட்ல கொஞ்சம் ப்ராப்ளம்.. அங்க போனா நல்ல ஸ்கோப் இருக்கு.. நல்ல எர்னிங். அது இங்க வர இன்னும் கொஞ்ச வருஷம் ஆகும்..”
“எப்போ திரும்பி வருவிங்க?”
“நாலு வருஷம் ஆகும்..”
****
“ஜி, அடுத்து எப்போ வருவிங்க?”
“இன்னும் 2 வருஷம் ஆகும்..”
“அட்லீஸ்ட் அடுத்த டைம் உங்கள பாக்க முடியமா?”
****
தினமும் நானும் ஜி யும் கோவிலில் மீட் பண்ணோம்… பேசவே மாட்டோம்.. எங்க ரெண்டு பேரோட கண்ணும் எங்களுக்கு தெரியாம பேசும்..
ராம்கி பார்த்து விட்டான்.. அவனுக்கு பயம்.
என்கிட்டே ஒரு நாள் சொன்னான் – ப்ரியா, கணேஷ் அண்ணா வீட்ல ஒத்துக்க மாட்டாங்க..
நான் பதில் சொல்லல..
****
வீட்டில் எதாவது காரணம் சொல்லணும்.. ஜியை பார்த்தே ஆகணும்..
எனக்கு அங்க இருந்து நிறைய கலக்ஷன்ஸ் வாங்கணும்.. இன்னும் நெறைய ஆர்டர் கிடைக்கும்.. இது தான் சொன்னேன்.. வீட்ல உடனே சரின்னு சொல்லிட்டாங்க.. என்னை விட நான் அவங்களுக்கு குடுக்கற பணத்து மேல தான் அவ்ளோ அக்கறை.. அவனிடம் பேசிடனும்.. எப்படியாவது நடந்ததை சொல்லணும்.. இது எல்லாம் விட நேர்ல ஒரே முறை பாக்கணும்..
****
ஊருக்கு போறதுக்கு 3 வாரம் முன்னாடி எல்லாரும் டூர் பிளான் பண்ணாங்க.. யார் ஐடியா தெரில.. பாதி தெரு காலி.. நான் வரலன்னு சொல்லிட்டேன்.. எனக்கு வெயில் ஒத்துக்காதுன்னு.. பீரியட்ஸ்னு பொய் சொல்லிட்டேன்..
ராம்கி இருந்தான்.. ஜி யும் வரலன்னு சொன்னது எனக்கு தெரியாது..
திடிர்ன்னு பாத்தா எதிர் வீட்ல ஜி நிக்கறான்.. போகலயான்னு சிக்னல் பண்ணி கேட்டேன்.. இல்லன்னு சொன்னான். நான் அங்க வரட்டான்னு கேட்டேன்..
ராம்கிக்கு தேங்க்ஸ்.. நாங்க பேசணும்னு சொன்ன உடனே ஒண்ணும் சொல்லாம போய்ட்டான்.. அதுக்குள்ள ஜி இங்கே வந்தான்..
“உன்கிட்ட கொஞ்சம் பேசணும் ப்ரியா”
“நானும்..”
“ப்ரியா… நீ என்ன நெனைச்சிட்டு இருக்கேன்னு நல்லா புரியுது.. நான் உன்கிட்ட ஒரு வாரமா சொல்லனும்னு நெனைச்சிட்டு இருந்தேன்.. எனக்கு உன்ன ரொம்ப பிடிக்கும்.. நா ஒப்பனாவே சொல்றேனே.. ரியல் லைப் ரொம்ப வேற.. இப்போ போய் நான் வீட்ல சொல்ல முடியாது.. உனக்கும் அது தான்…”
“நான் வெயிட் பண்றேன் ஜி.. நீங்க வர வரைக்கும்… எப்ப வந்தாலும்.. என் வீட்ல நான் பேசறேன்.. நீங்க எதுவும் சொல்ல வேணாம்.. நானும் இன்னும் படிக்கணும்.. ஆனா ப்ளீஸ் உங்களுக்காக நான்…”
அதுக்கு மேல பேச முடியல..
என் கையை பிடித்துக்கொண்டான்… அவ்ளோ தான். அவன் நினைச்சிருந்தால் என்ன வேணாலும் பண்ணி இருக்கலாம்.. இல்லை.. பிரதோஷம் அன்னிக்கு புடவை கட்டிட்டு கோவிலுக்கு வர சொன்னான்..அவனுக்கு பிடித்த அரஞ்சு கலர்ல தேடி தேடி வாங்கி குடுத்தான்.. அது எனக்கு பொக்கிஷம்…
****
எனக்கே புரியல. ரெண்டு மாசமா தான் ஒருத்தர தெரியும்.. அதுக்குள்ள இவ்ளோவான்னு. ஆனா அது தான் உண்மை.. அது எனக்குள்ள இன்னும் பல வருஷமா அப்டியே இருக்கு.. அவனிடம் பேசிடனும்.. எப்படியாவது நடந்ததை சொல்லணும்.. நேர்ல ஒரே முறை பாக்கணும்..
ஜி, நான் இங்க ஏர்போர்ட்ல இருக்கேன்..
நீ என்ன மென்டலா.. எங்க இருக்க.
இங்க தான்.. பஹ்ரைன் இன்டர்நேஷனல் ஏர்போர்ட்..
ப்ரியா விளையாடாத…
கவலை படாதிங்க.. என்னால உங்க லைப் ல எந்த ப்ராப்ளம் வராது.. உங்கள பாக்க தான் வந்துருக்கேன்.. உங்கள ஒரே ஒரு முறை பாக்கணும் ப்ளீஸ்.. ஒரே ஒரு டைம்… உங்க கிட்ட கொஞ்சம் பேசணும். நேர்ல மீட் பண்ணனும்..
(நான் பைத்தியம் தான்… என்றோ அறுந்து போன காதல்.. அது காதலான்னு கூட தெரியல..)
நீங்க வரமாட்டிங்கன்னு சொன்னா அப்டியே அடுத்த பிளைட்ல போய்டறேன்..
****
நான் ஊருக்கு கெளம்பற ரெண்டு வாரம் அப்புறம் ஜி கெளம்பினான்… எனக்காக வீட்டில் போய் சொன்னான். சென்னைல ஒரு வேலை இருக்கு..
ராம்கியை அப்பா சாமின்னு. கெஞ்சி கூத்தாடி.. ராம்கி தான் என்னோடு சென்னை வருவதாக இருந்தான்..
ராம்கி நீ யாராவது லவ் பண்ணா கண்டிப்பா நான் ஹெல்ப் பண்றேண்டா ப்ளீஸ் எப்படியாவது ஜியும் என்னோட வரட்டும் டா.. வீட்ல சொல்லாத..
நான் போற அன்னிக்கு ஜி என்னோடவே வந்தான்.. பத்து மணி நேர ஒன்றாக பயணம் என்னோட பல வருஷம் தாங்கும்னு கடவுள் நினைசிட்டார் போல.
****
நாலு மணி நேரம் கழித்து.. நம்ப முடியாமல் ஜி வந்தான்..
“இப்போ என்ன பாத்தா ஏன்டா FBல மெசேஜ் குடுத்தோம்னு இருக்கா..”
சின்ன சிரிப்பு தான் பதில்..
“நீங்க இன்னும் மாறவேயில்லை அப்படியே தான் இருக்கீங்க.”
நீயும் தான் ப்ரியா.. எதுவுமே மாறல. நீ பேசறது பாக்கறது எதுவுமே மாறல.. அப்டியே எல்லாம் தஞ்சாவுர்ல நடக்கறது மாதிரியே இருக்கு.. நிச்சயமா உன்ன இங்க எக்ஸ்பெக்ட் பண்ணல..
“ரொம்ப தேங்க்ஸ் நான் உங்கள ஏமாத்திட்டேன்னு நினைக்கறிங்களா? நிச்சயமா இல்ல.. உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போறிங்களா? உங்க வைப் கொழந்தைங்கள் எல்லாம் பாக்கணும்..
பதிலேதும் கூறவில்லை..
******
ஹோட்டல் செக்-இன் பண்ணிட்டு..
நீ ரெஸ்ட் எடு, காலைல பாக்கலாம்..
உங்களுக்கு எப்ப பிரீயோ சொல்லுங்க.. நான் வெயிட் பண்றேன். ஆனா கண்டிப்பா வரணும்.. ஒரே ஒரு நாள் மட்டும்.. எனக்காக ப்ளீஸ்..
என்னை பாக்க பைத்தியம் மாதிரி இருக்கு.. எதுக்காக இவ்ளோ செலவு பண்ணிட்டு எந்த ஒரு காரணமும் இல்லாம இங்க வந்துருக்கேன்? புரியல..
****
ஜி கெளம்பின அப்போ யாருக்கும் தெரியாம ஏர்போர்ட் போய் திருட்டு தனமா பாத்துட்டு வந்தேன்.. சந்தோசமா இருந்தது.. தெரியாது.. அதுக்கு அப்புறம் பத்து வருஷம் கழிச்சு தான் பாக்க போறோம்னு அப்போ தெரில..
வீட்ல கல்யாணம் பேச்சு எடுத்தா தட்டி கழிச்சி படிச்சேன்..
அந்த நாலு வருஷம் கழிச்சு அவன பாக்க போறோம்னு சந்தோஷத்துல தஞ்சாவூர் போனேன்.. வீட்லயும் சொல்லிட்டானாம். ராம்கி தான் இன்பார்மர்..
வீட்ல ஜி இல்லையாம். எனக்கு பெரிய ஷாக்.. ஊர்லேந்து வந்தான்னு ராம்கி சொன்னானே..
அவங்க வீட்ல என்ன கூப்டங்கன்னு போனேன். ஜி எதாவது விளையடறானோ?
இல்ல.. பணம் எல்லார் லைப்லையும் எவ்ளோ விளையாடுதுன்னு அப்போ தான் புரிஞ்சது.. ஜி யை எல்லாரயும் அந்த வீட்ல ஒரு ATM மாதிரி பாக்கறாங்க.. அவன் அப்பா நேரவே சொன்னார்.. மறக்கவே முடியாது..
“இங்க பாரும்மா.. என் பையன கஷ்டப்பட்டு படிக்க வெச்சி வெளிநாட்டுக்கு அனுப்பி இருக்கேன்.. இப்போ தான் நல்ல வசதியா இருக்கோம்.. நீ பாட்டுக்கு எதாவது வந்து பண்ண அப்புறம் நல்லா இருக்காது.. அவனுக்கு எப்போ கல்யாணம் பண்ணனும்னு எனக்கு தெரியும்…நல்ல சம்பாதிக்கறான்.. பாக்கவும் நல்லா இருக்கான் அதான். பாரீன் பையன்னா நல்ல அலையறிங்க…” என்னால அவங்களுக்கு எந்த ப்ராப்ளம் வராதுன்னு சத்தியம் பண்ணி கொடுத்து.. என்னை விட ராம்கிக்கு ரொம்ப அசிங்கமா போச்சி..
****
எங்க இருக்க.. ஹோட்டல்கு கால் பண்ணா நீ ரூம்ல இல்லன்னு சொன்னங்க.. வீட்டுக்கு போகலாம்.. நான் வந்து பிக்கப் பண்ணிக்கறேன்..
இங்க தான் மால்ல இருக்கேன் ஜி.. ஷாப்பிங்.. பசங்களுக்கு என்ன பிடிக்கும்.. சொல்லுங்களேன் வாங்கிட்டு வரேன்..
அதெல்லாம் ஒன்னும் வேணாம்..ரெடியா இரு..
பத்து நிமிடத்தில் வந்தான்..
ரொம்ப நல்லா டிரைவ் பண்றீங்க ஜி..
அவன் வீட்டில் இருந்து பாதி உலகம் தெரிந்தது.. என்னுடைய உலகம் அவனுக்குள் தான்.
வீட்ல யாரும் இல்ல?
இல்ல, நான் மட்டும் தான்..
எல்லாரும் ஊர்ல இருக்காங்களா?
ம்ம்ம்
இந்தாங்க.. என்று ஒரு ரெண்டு மூணு பாக்ஸ் எடுத்து குடுத்தேன்.. என்னோட கிப்ட்ஸ்.. உங்க வைப்க்கு அண்ட் கிட்ஸ்க்கு.. ஆள் தான் இல்ல, போட்டோ காட்டுங்களேன். எப்படி இருக்காங்கன்னு பாக்க வேணாமா?
காட்றேன்.. இப்போ எதுக்காக என்ன பாக்க வந்தே?
வர கூடாதா ஜி?
ஒரு பாக்ஸ் பிரித்தான்.. அதில் அரஞ்சு கலர் புடவை.. பிரித்துப் பார்த்து அவனுக்கு ஷாக்..
அன்னிக்கும் இப்படி தான் ஒரு நாள் உங்க வீட்டுக்கு வந்தேன்.. ஆனா உங்களுக்கு தெரியாது.
எனக்கு தெரியும்.. எல்லாம் எனக்கு தெரியும் ப்ரியா. ராம்கி எனக்கு சொன்னான்.. ஆனா உனக்கு கல்யாணம் ஆனது மட்டும் சொல்லல..
அப்போ என் மேல உங்களுக்கு எந்த கோபம் இல்லையே.. நான் உங்கள ஏமாதிட்டேன்னு நினைக்கலேயே?
காபி குடிக்கிறியா??
நல்லா பேச்ச மாத்தறிங்க.. நான் போட்டு தரவா?
சிரிப்பு தான் பதில்..
******
காபி குடிக்கும் போது… தலை முதல் கால் வரை பார்த்தான்?
என்ன அப்படி பாக்கறிங்க?
நெறைய விஷயம் உன்னையும் மாத்திருச்சி போல?
புரியல ஜி.. என்ன கேக்கறிங்கன்னு
இல்ல நேத்தியே பாத்தேன்.. மெட்டி இல்ல.. சின்னதா ஒரு செயின் தான் போட்ருக்க.. அண்ட் நெத்தில குங்குமம் இல்ல.. நீ சொல்லிட்டே இருப்பல.. நெத்தி வகிட்டில் குங்குமம் வெச்சிக்கணும்.. அதுக்காகவே சீக்கரமா கல்யாணம் பண்ணிக்கணும்னு.. அதான் கேட்டேன்.. உன் வீட்ல ஒன்னும் சொல்ல மாட்டாரா.
******
அன்னிக்கு பிரதோஷம்.. வழக்கம் போல சிவனே கதின்னு வந்தேன். ஆனால் ஆரஞ்சு புடவையில்.. ரொம்ப நேரமா தேடியும் ஜி காணல… சாமியும் பாக்க முடில கூட்டத்துல.. ஒரு மாதிரி நொந்து போய் வெளி பிரகாரத்துல மெதுவா.. சட்னு ஒரு கை என்னை இழுத்தது.. கொஞ்சம் ஷாக் ஆகிட்டேன்..
சிரித்தபடியே ஜி தான்.
ச்சே… நீங்க தானா. நான் யாரோன்னு நெனைச்சிட்டேன்..
இந்த குங்குமம் வெச்சிக்கோ… கூட்டம்.. உள்ள போய் இருக்க முடியாதுன்னு தெரியும்.. அதன் உனக்காக எடுத்துண்டு வந்தேன்..
ஜி கண்ட பொண்ணுக்குலாம் குங்குமம் தர கூடாது.. உங்களுக்கு தெரியாதா?
நான் யாருக்கு தரேன்னு எனக்கும் தெரியும் அவளுக்கும் தெரியும்…
வெட்கத்துடன் சிரித்தேன்..
ம்ம் இந்தா..
ஜி உங்களுக்கு ஒண்ணு தெரியுமா? எனக்கு வகிட்ல குங்குமம் வெச்சிக்கணும்னு ரொம்ப ஆசை.. அதனாலேயே சீக்கரமா கல்யாணம் பண்ணிக்கணும்.. இந்த நாலு வருஷம் ஓடிரனும்..
****
நாலு இல்ல பத்து வருஷம்.. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது.. ரெண்டு பேருமே அன்னைக்கு நடந்தத நெனைச்சு பாத்து சிரிச்சோம்..
சில விஷயங்கள் லைப்ல அர்த்தமே இல்லாம போய்டுது.. இல்ல ப்ரியா..
நான் பதில் சொல்லல..
உன் கொழந்தை உன்ன மாதிரியே இல்லையே.. உன் ஹஸ்பன்ட் மாதிரியா?
என் கொழந்தையா. யார சொல்றிங்க?
FB DP வெச்சிருக்கியே.. அதான்.
சிரிப்பு வந்தது.. ஆமாம்.. என்ன மாதிரி இல்ல.. அவன் அப்பா மாதிரி..
கொஞ்ச நேரம் எதுவும் பேசல..
ஜன்னல் வழியா பார்த்தேன்..
உன்ன விட்டுட்டு இருப்பனா?
ஆரம்பத்துல எல்லாருக்குமே கஷ்டம் தான். அப்படியே பழகிடும்.. கண்களின் ஓரத்தில் நீர் வழிந்தது..
பக்கத்தில் வந்தான்.
ப்ரியா என்னோட அப்பா அப்படி பேசினதுக்கு ஸாரி..
ஏன் ஜி அதுக்கு அப்புறம் ஒரு டைம் கூட என்கிட்டே பேச ட்ரை பண்ணல…நான் நிஜமாவே அப்படி தான்னு நினைச்சிட்டிங்களா
அதற்கு மேல என்னால முடியல.. அவன் மேல் சாய்ந்து அழுதேன்..
ஹேய்.. சத்யமா அப்போ தெரியாதும்மா… உன் மேல ரொம்ப கோவத்துல தான் இருந்தேன்.. ஆனா..
அணைத்துக்கொண்டான்.. அவனுக்குள் புதைந்து போனேன்.. இத்தனை வருஷமா இதுக்கு தான் வெயிட் பண்ணேன் போல..
ப்ரியா உன்ன எவ்ளோ மிஸ் பண்றேன் தெரியுமா. இப்போ வரைக்கும் .. இந்த நிமிஷம் வரைக்கும்..
ஜி…. ஐ லவ் யு..
முத்தமிட்டான்..
****
ராம்கி மேல் கோவம் கோவமா வந்தது.. எனக்காக வருத்தப்பட்ட ஜென்மம் அவன் ஒருத்தன் தான்.. அப்புறம் அத்தையும் கூட… சில நிமிடங்கள் கழித்து..
இது போதும் ஜி.. எனக்குள்ள குற்ற உணர்ச்சி.. அது சரியா போச்சி.. அதுக்கு தான் வந்தேன்.. நீங்க சந்தோஷமா இருக்கீங்க இல்ல? அது போதும் எனக்கு..
ஆமா ப்ரியா என்ன சுத்தி இருக்கறவங்களுக்கு என்னால ரொம்ப சந்தோஷம்..
நான் கெளம்பறேன்.. இதுக்கு மேல இங்க இருக்கறது சரியா இருக்காது.. நெக்ஸ்ட் டைம் வரும் போது கண்டிப்பா மீட் பண்ணனும்.. உங்க வைப் பசங்கலாம் பாத்துக்கோங்க..
ப்ரியா ஒரு நிமிஷம்.. இந்த கிப்ட்ஸ்லாம் எடுத்துக்கோ…
ஏன்?
இங்க யாரும் இல்ல…
ஏன்.. இங்க கூட்டிட்டு வரலையா?
இல்ல…
நான் எதுவும் கேக்கல..
ஜி அப்புறம் ஒரு நிமிஷம்.. ராம்கி ஏன் கல்யாணம் பத்தி சொல்லலன்னு கேட்டிங்கல்ல.. எனக்கு இன்னும் மேரேஜ் ஆகல.. நீங்க பேஸ்புக்ல பாத்தது என்னோட அண்ணன் பையன்.. நான் இன்னும் மிஸ். ப்ரியா தான்.. என்னிக்குமே.. தேங்க்ஸ்..
அவனுக்கு முதலில் புரியவில்லை… என்ன சொல்ற?
என்னோட பிசினெஸ் நல்லா போகுது.. அப்பா போய் சேந்துட்டார்.. அம்மா இப்பவோ அப்பவோன்னு இருக்காங்க.. அண்ணாக்கு நான் சம்பாதிக்கற பணத்து மேல பெரிய ஆசை.. அவன் குழந்தை என் மேல ரொம்ப ஆசை.. FB ல பாத்தது அவன் தான்..
அவன் கண்களில் அப்படி ஒரு சந்தோஷம்.. எனக்கு புரியவேயில்லை..
இந்த புடவை நீயே கட்டிக்கோ.. உனக்கு ரொம்ப அழகா இருக்கும்.. நான் குடுத்ததா வெச்சிக்கோ.. வேணாம்னு சொல்லாத..
ஏன் ஜி.. உங்க வைப்கு வாங்கிட்டு வந்தேன்..
என்னோட வைப் தான தர சொன்ன.. அதான் குடுக்கறேன்..
எனக்கு புரியவில்லை..
ஜி என்ன சொல்றிங்க…
நான் கொஞ்ச நேரம் முன்னாடி சொன்னனே.. புரியலயா? ப்ரியா உன்ன எவ்ளோ மிஸ் பண்றேன் தெரியுமா. இப்போ வரைக்கும் .. இந்த நிமிஷம் வரைக்கும்..
********
Saipriyadharshini..ஆரஞ்சு சிறப்புகளை மனசு கொள்ளை யடித்தவிட்டது. இது முதல்கதையான்னு தெரியலை. ஆனா இன்றும் அன்றும் முறையில் சொல்லும் பாணி எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது. வார்த்தையாடல் கம்மி. ஆனால் மனசு பேசினது ரொம்பவும் அதிகம். அதுவே பத்தாண்டுகள் கழித்து பஃஹ்ரைனில் சேர்த்து வைத்துவிட்டது.அப்பாவும் பிரியாதான் வாய்திறந்து பேசுகிறாள். ஜி சரியான அமுக்குணி……I loved the story. Actually.. ஒரு நாவலுக்கான input உள்ள கதை இது. நறுக் சுருக்னு கொடுத்ததற்கு பாராட்டுகள்.
Thank you 🙂