Tamil Madhura Uncategorized ராணி மங்கம்மாள் – 27

ராணி மங்கம்மாள் – 27

27. விஜயரங்கன் தப்பி விட்டான்

    • ராணி மங்கம்மாளின் மனம் நிம்மதியிழந்து தவித்தது. பேரன் விஜயரங்க சொக்கநாதன் பேசிவிட்டுச் சென்ற சொற்களை அவளால் மறக்கவே முடியவில்லை.

 

    • பேரன் வலுவில் வந்து தன்னிடம் ஏறுமாறாகப் பேசி இப்படியெல்லாம் வற்புறுத்தியிராவிட்டால், அவளே ஒருவேளை அவனைக் கூப்பிட்டுச் சில நாட்களில் ஆட்சிப் பொறுப்பை அவனிடம் ஒப்படைக்கவேண்டும் என்றுகூட எண்ணியிருக்கலாம். ஆனால் அவனே வற்புறுத்தி நிர்ப்பந்தப்படுத்தியதால் அவளது சந்தேகம் அதிகமாயிற்று. அதில் ஏதோ பிறர் தூண்டுதல் அல்லது சதியிருக்க வேண்டும் என்று அவள் சந்தேகப்பட்டாள்; கலங்கினாள்.

 

    • அரச பதவியை அடைய அவன் பறந்ததும் அவசரப்பட்டதும் சிறுபிள்ளைத்தனமாகத் தோன்றியது. இவ்வளவு நாட்களாகத் தான் கட்டிக் காத்த பொறுப்புகளை அவன் சீரழித்து விடுவானோ என்று அஞ்சினாள் அவள்.

 

    • ‘அநுபவமோ, பக்குவமோ இல்லாமல் அவன் வயதுக்கு மீறி ஆசைப்படுகிறான்’ என்பது அவளுக்குப் புரிந்தது. அதைப்பற்றிக் கலந்து ஆலோசிக்க வேண்டுமென்று கருதி உடனே தளவாய் அச்சையாவைக் கூப்பிட்டனுப்பினாள் அவள்.

 

    • அச்சையா வந்தார். எல்லா விவரங்களையும் ராணி மங்கம்மாள் அவரிடம் கூறினாள். அவர் மிகவும் சிந்தனை வயப்பட்டவராகச் சிறிதுநேரம் மௌனமாய் ஏதும் கூறாமல் இருந்தார். இந்த அதிர்ச்சி நிறைந்த செய்தியை அவரே எதிர்பார்த்திருக்க மாட்டார் என்று தோன்றியது. பின்பு நிதானமாகக் கூறினார்:

 

    • “இப்படி ஒன்று நடந்தது என்பதை யாரிடமும் கூற வேண்டாம்! இது மிகவும் இரகசியமாக இருக்கட்டும். ‘ராணி மங்கம்மாளுக்கும் அவள் பேரனுக்கும் ஆகவில்லை, விரோதம் மூண்டுவிட்டது’ என்ற செய்தி அவ்வளவு நல்ல விளைவுகளைத் தராது. உங்கள் எதிரிகளை மனம் மகிழச் செய்யும். அதனால் இப்படி ஒன்று நடந்தது என்பதையே மறந்து விட்டுப் பேசாமல் இருப்பதுதான் உத்தமம்.”

 

    • “‘எரியும் நெருப்பைப் பஞ்சால் மூடிவிட்டு அப்புறம் பேசாமல் இரு’ என்பது போலிருக்கிறது நீங்கள் சொல்வது.”

 

    • “விஜயன், தானே ஓய்ந்து போய் விடுவான் என்று எனக்குத் தோன்றிகிறது.”

 

    • “எனக்கு அப்படித் தோன்றவில்லை! இந்தக் கலகம் தொடர்ந்து நடக்கும் என்றே படுகிறது.”

 

    • “சிறுபிள்ளைகளுக்கு அவ்வப்போது ஏதேனும் புதிய விளையாட்டு விளையாடிப் பார்க்க வேண்டும் என்று ஆசையாயிருக்கும். இரண்டு நாள் ஒன்றும் பேசாமல் இருந்தால் பின்பு மூன்றாவது நாள் அவர்களுக்கே அது மறந்து போய் விடும்.”

 

    • “அவன் வந்து நின்ற விதம், மிகவும் ஆத்திரப்பட்ட தோரணை, பேசிய சீற்றம், எல்லாவற்றையும் சேர்த்து நினைத்துப் பார்த்தால் அப்படி இது அவனுக்கு மறந்து போய்விடும் என்று தோன்றவில்லை.

 

    • “இருக்கட்டுமே! இளங்கன்று. அதனால் தான் பயமறியாமல் துள்ளுகிறது. கொஞ்சம் ஆறப்போட்டால் தானே மறந்து விடும்.”

 

    • தளவாய் அச்சையா கூறியபடி விஜயரங்க சொக்கநாதன் எதையும் மறப்பான் என்று ராணி மங்கம்மாளுக்குத் தோன்றவில்லை.

 

    • இங்கே அரண்மனையில் மற்றவர்களிடமும் மற்றும் வெளியே பிறர் பலரிடமும் விஜயரங்கன் கண்டபடி பேசி வருவதாகத் தெரிந்தது. ராணி மங்கம்மாள் பதவி வெறி பிடித்தவள் என்றும் அவளுக்கும் அச்சையாவுக்கும் கள்ளக்காதல் நிலவுகிறது என்றும் செய்திகளைப் பரப்பினான் விஜயரங்கன். சொந்தப் பாட்டி என்று கூட நினையாமல் அவளை எதிர்த்து ஏறக்குறையப் போர்கொடியே உயர்த்தியிருந்தான் அவன். வதந்திகளாலும் குழப்பமான செய்திகளாலும் அரண்மனை நாறியது; குழம்பியது; கலங்கியது.

 

    • இவற்றையெல்லாம் கேள்விப்பட்டவர்களே இரண்டு விதமாகப் பேசினார்கள். ‘சொந்தப் பாட்டி என்றுகூடப் பாராமல் விஜயரங்கன் விசுவாசத் துரோகம் செய்கிறான்’ என்று அவனைத் தூற்றினார்கள் சிலர்.

 

    • ‘நெருப்பில்லாமல் புகையுமா? இவளும் அச்சையாவுமாகச் சேர்ந்துகொண்டு தாங்கள் உல்லாசமாக இருப்பதற்காகப் பேரப் பிள்ளையாண்டானை முடிசூடி அரசாளவிடாமல் தொல்லை கொடுக்கிறார்கள் போலிருக்கிறது’ என்றும் பேசினார்கள் சிலர். இப்படி வம்புகளும் வதந்திகளும் பொறுமையைச் சோதிக்கிற அளவு வளர்ந்தன. அதை நீடிக்கவிடக்கூடாது என ராணி மங்கம்மாள் நினைத்தாள். விஜயரங்கனைக் கூப்பிட்டு மறுபடியும் கண்டிப்பாகப் பேசிவிட வேண்டும் என்று அவளுக்குத் தோன்றியது.

 

    • அவனைக் கூப்பிட்டு அனுப்பினாள். அவளுடைய கட்டளையைப் பொருட்படுத்தி வராமல் முதலில் அவன் அலட்சியப்படுத்தினான். மறுபடியும் கூப்பிட்டு அனுப்பினாள். வேண்டா வெறுப்பாகவும், கோபமாகவும் வந்தான். அவனை ராணி மங்கம்மாள் எதிர்கொள்ளும்போது தளவாய் அச்சையாவும் உடனிருந்தார். சிறிதும் மதிப்போ மரியாதையோ இல்லாமல் அவர்களிருவரையும் அலட்சியமாகவும் ஏளனமாகவும், இகழ்ச்சி தோன்றவும் ஏறிட்டுப் பார்த்தான் அவன்.

 

    • அவர்கள் முன் அவன் எதிர்கொண்டு வந்த விதமும் பார்த்த விதமும் வெறுப்பூட்டக் கூடியவையாக இருந்தன. அந்தப் பார்வையில் எரிச்சலடைந்தாள் ராணி மங்கம்மாள். எனினும் பொறுமையை இழந்து விடாமல், “விஜயா! உன் போக்கு நன்றாக இல்லை! சேர்வதற்குத் தகாத கெட்டவர்களோடு சேர்ந்து நீ வீணாகச் சீரழியப் போகிறாய்! அதற்கு முன் உன்னை எச்சரிக்கலாம் என்றுதான் கூப்பிட்டனுப்பினேன்” என்று அவனுக்கு அறிவுரை கூறினாள் அவள்.

 

    • “எனக்கு யாருடைய எச்சரிக்கையும் தேவையில்லை. என் ஆட்சி உரிமையான நாட்டை என்னிடம் ஒப்படைத்தாலே போதுமானது!”

 

    • “தற்போது அது சாத்தியமில்லை அப்பா! குருவி தலையில் பனங்காயை வைத்தால் தாங்காது.”

 

    • “நீங்கள் எதை எதையோ சொல்லி என்னை ஏமாற்றப் பார்க்கிறீர்கள்!”

 

    • இப்படிக் கூறிய அவனை இடைமறித்து அச்சையா ஏதோ சமாதானம் சொன்னார். விஜயரங்கன் உடனே அவரையும் எடுத்தெறிந்து பேசிவிட்டான். ராணி மங்கம்மாள் கடும் கோபத்தோடு அவனை எச்சரித்தாள்.

 

    • “நீ கேட்பார் பேச்சைக் கேட்டு நாசமாய்ப் போகாமல் தடுப்பதற்காகவே உன்னைக் கூப்பிட்டேன். நாயக்க வம்சத்தின் நல்லாட்சியைச் சீரழிக்க விரும்பும் கலகக்காரர்களின் தொடர்பால் தான் நீ அழியப் போகிறாய்.”

 

    • “உண்மையில் அழியப் போவது யார், நீங்களா, நானா என்று பொறுத்திருந்து பாருங்கள்.”

 

    • முகத்திலடித்தாற்போல இப்படிக் கூறிவிட்டு விரைந்து சென்றுவிட்டான் விஜயரங்கன். அவனைத் திருத்த முடியாதென்று அவர்களுக்குத் தெரிந்துவிட்டது.

 

    • அவன் சென்றபின் இனி அவனுக்கு அறிவுரைகள் கூறிப் பயனில்லை என்ற முடிவுக்கு வந்த ராணி மங்கம்மாளும் தளவாய் அச்சையாவும் விஜயரங்கனின் நடவடிக்கைகளை இடைவிடாமல் கண்காணிக்க ஒற்றர்களை ஏற்பாடு செய்தார்கள். நேரடியாக முழு ஆட்சிப் பொறுப்பையும் அவனிடம் அளிக்காவிட்டாலும் ஒரு சில பொறுப்புகளை அவனிடம் விட்டுவிடலாம் என்று முதலில் நினைத்தாள் ராணி மங்கம்மாள். ஆனால் தளவாய் அச்சையா அதற்கும் இணங்கவில்லை. அப்படிச் செய்வது விஷப் பரீட்சையாக முடிந்துவிடும் என்று அபிப்பிராயம் தெரிவித்தார் அவர்.

 

    • இவ்வளவுக்கும் பின்புதான் அவன் எங்கெங்கே போகிறான் என்னென்ன செய்கிறான் என்று இரகசியமாகக் கண்காணிக்க ஏற்பாடு செய்தாள் ராணி மங்கம்மாள்.

 

    • சில நாட்கள் கழிந்தன. ஒற்றர்கள் வந்து தெரிவித்த தகவல்கள் ராணி மங்கம்மாள் மேலும் கலக்கமடைவதற்குக் காரணமானவையாக இருந்தன. விஜயரங்க சொக்கநாதன் விஷமிகளும் கலகக்காரர்களுமாகிய பலரது ஒத்துழைப்போடு கலகத்தில் இறங்கிவிடத் தீர்மானம் செய்திருப்பது புரிந்தது. அதிக இடையூறாயிருக்கும் பட்சத்தில் ராணி மங்கம்மாளையும் தளவாய் அச்சையாவையும் ஒழித்துவிடக் கூடத் தயங்காத கல்நெஞ்சம் படைத்தவனாக அவன் இருப்பானென்று தெரிந்தது. ஒற்றர்கள் வந்து கூறிய செய்திகள் பல அச்சையாவையும் ராணியையும் துணுக்குற வைத்தன.

 

    • விஜயரங்கனைத் தூண்டி விடுவதற்கு மிகவும் பலம் வாய்ந்த கூட்டம் ஒன்று பின்னாலிருப்பது அவர்களுக்குப் புரிந்தது.

 

    • தவிர்க்க முடியாத வலிமையுள்ள படை வீரர்கள் போன்ற சதியாளர்கள் அவனோடு ஒத்துழைக்கிறார்கள் என்ற உண்மையும் தெரியவந்தது. வன்முறையில் ஈடுபட்டுத் தாங்கள் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு எதிராக இருப்பவர்களைக் கொன்று குவித்தாவது ஆட்சியைக் கைப்பற்றிவிடுவது என்று விஜயனும் அவனை ஊக்குவிப்பவர்களும் முயன்று கொண்டிருந்தார்கள் என்பதை ஒற்றர்கள் வந்து தெரிவித்தார்கள்.

 

    • வேறு வழியின்றி ராணியும் தளவாயும் ஒரு முடிவுக்கு வந்தார்கள். விஜயரங்கன் நினைத்தபடி நினைத்த இடங்களுக்குப் போகவும், வரவும், பேசவும் முடிவதால் தான் இதெல்லாம் சாத்தியமாகிறது. அவனுடைய இயக்கத்தைக் கட்டுப்படுத்தி அவனைக் காவலில் வைத்துக் கண்காணித்து வந்தால் இதெல்லாம் ஓரளவு குறையும் என்று அவர்கள் கருதினார்கள். அவனைத் தூண்டிவிட்டுக் கொண்டிருப்பவர்களை அவனும், அவனை அவர்களும் சந்தித்துக் கொள்ள முடியாத படி செய்து விட்டாலே போதுமென்று இருவரும் எண்ணினார்கள்.

 

    • அரண்மனையில் விஜயரங்கன் தங்கியிருந்த பகுதிக்குள்ளேயே அவனைச் சிறைப்படுத்திவிடத் தந்திரமாக ஏற்பாடாயிற்று. அவனுக்குத் தெரியாமலே அவனைச் சுற்றி இந்த ஏற்பாடு நடந்து கொண்டிருந்தது. கெட்ட எண்ணத்தோடு அவர்கள் இதைச் செய்யவில்லை. நல்லெண்ணத்தோடுதான் செய்தார்கள். தீயவர்களின் சகவாசத்திலிருந்து அவனை மீட்பதற்காகவே இந்த ஏற்பாடு அவசியம் என்ற எண்ணத்தில்தான் இது செய்யப்பட்டிருந்தது. இந்தக் கட்டுக்காவல் ஏற்பாடு தொடங்கிய பின்னர் முதல் நாலைந்து நாட்கள் அவர்கள் நினைத்த படியே எல்லாம் நடந்தன. விஜயரங்கன் அரண்மனையில் அவன் வசித்துக் கொண்டிருந்த பகுதியை விட்டு எங்குமே வெளியேற முடியவில்லை.

 

    • தாங்கள் நினைத்தபடி விஜயனை ஒடுக்கிவிட்டதில் அவர்களுக்குத் திருப்தியாயிருந்தது. விஜயனுடைய நன்மைக்காகவும் ஆட்சியின் நன்மைக்காகவும் அவர்கள் செய்த இந்தக் காரியம் விஜயனால் மிகமிகத் தவறாகவும் கடுமையாகவும் புரிந்து கொள்ளப்பட்டது. தன் நன்மைக்காக என்று அவன் இதைப் புரிந்து கொள்ளவே இல்லை. பாட்டி தனக்கும் தன்னைச் சேர்ந்தவர்களுக்கும் விரோதமாக இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாகவே உணர்ந்தான். அவன் அப்போதைக்கு ஆட்சியையோ அரச பதவியையோ அடையாமல் தடுக்கும் திட்டத்துடன் பாட்டி தன்னைச் சிறைப்படுத்திவிட்டாள் என்பதே இது பற்றி அவனது அநுமானமாக இருந்தது. வெளியே இருந்த அவனுடைய ஆட்களில் சிலர் ரகசியமாக அவனை வந்து பார்த்தனர். அவர்களுக்கும் இப்படியே செய்தியைத் தெரிவித்துப் பரப்பினான் விஜயரங்கன்.

 

    • அவன் மனநிலை இப்படி இருப்பதை அறியாமல் ராணி மங்கம்மாளும், தளவாய் அச்சையாவும் வேறு விதமாகத் தீர்மானித்துக் கொண்டார்கள்.

 

    • “அரண்மனைக்குள்ளேயே தங்க வைத்துத் தீயவர்களின் சகவாசத்தைத் தடுத்தது நல்லதாகப் போயிற்று! விஜயரங்கன் இதற்குள் கெட்ட எண்ணங்கள் எல்லாம் மாறித் திருந்தியிருக்க வேண்டும். என்னைப்பற்றிக்கூட அவன் நல்லபடி புரிந்து கொண்டிருப்பான். இன்றோ நாளையோ அவனை மறுபடி பார்த்துப் பேசினால் அவன் மனநிலை நமக்குப் புரியலாம்!” என்றாள் ராணி மங்கம்மாள்.

 

    • “இதற்குள் அவன் முற்றிலும் மனம் மாறியிருக்க முடியும் என்று நான் நம்பவில்லை. மாறாமலும் இருக்கலாம் என்பதற்குச் சாத்தியக் கூறுகள் உண்டு. முன்னைவிட உங்கள் மேலும் என் மேலும் விரோதங்கள் அதிகமாகி இருக்கவும் நியாயம் உண்டு. எதற்கும் போய்ப் பார்க்கலாம். எனக்கென்னவோ இதில் நம்பிக்கையில்லை…” என்றார் தளவாய்.

 

    • “நீங்கள் அதிக அவநம்பிக்கைப் படுகிறீர்கள்! என் பேரப் பிள்ளையாண்டான் அவ்வளவு கெட்டவன் இல்லை. கேட்பார் பேச்சைக் கேட்டுத்தான் இவன் கெட்டுப் போயிருக்கிறான். இப்போது திருந்தியிருப்பான்.”

 

    • அச்சையா இதற்கு மறுமொழி எதுவும் கூறவில்லை. ஆனால் அதே சமயம் அவரது மௌனம் ராணி மங்கம்மாள் கூறியதை ஏற்றுக் கொள்கிற மௌனமாகவும் இல்லை.

 

    • அடுத்த நாள் அதிகாலையில் வழக்கத்திற்குச் சிறிது முன்பாகவே எழுந்து நீராடி வழிபாடுகளை எல்லாம் முடித்து, “தெய்வமே! என் பேரனுக்கு இதற்குள் நல்ல புத்தியைக் கொடுத்திருப்பாய் என்று நம்புகிறேன். தொடர்ந்து இனி மேலும் அவனுக்கு நல்ல புத்தியைக் கொடு” என்று பிரார்த்தனையும் செய்துவிட்டுச் சிறிது நேரத்தில் விஜயரங்கனைக் காண்பதற்குச் செல்லவேண்டும் என்றிருந்தாள் ராணி மங்கம்மாள்.

 

    • அப்போது காவலர்கள் பரபரப்பும் பதற்றமுமாக அவளைத் தேடி அங்கே ஓடிவந்தார்கள்.

 

    • “மகாராணீ! இளவரசர் காவலைத் தப்பிச் சென்று விட்டார். இரவோடு இரவாக எங்களுக்குத் தெரியாமலே இது நடந்துவிட்டது. நூலேணி ஒன்றின் உதவியால் மதிலில் ஏறி மதில் துவாரத்தின் வழியே அதே நூலேணியைப் பயன்படுத்தி மறுபக்கம் கீழே இறங்கி வெளியேறியிருப்பதாகத் தெரிகிறது. இதில் எங்கள் தவறு எதுவுமில்லை. எங்களைத் தப்பாக நினைக்கக்கூடாது” என்றார்கள் அவர்கள்.

 

    அப்போது தன் செவிகள் கேட்டுக் கொண்டிருப்பது மெய்யா பொய்யா என்று முடிவு செய்து கொள்வதற்கே சில விநாடிகள் ஆயின ராணி மங்கம்மாளுக்கு.

 

3 thoughts on “ராணி மங்கம்மாள் – 27”

  1. Rani mangammal with sad end. Every one had their own tragedies and their ends also not avoidable one. But what they achieved in life is successful one. We just remember their achievement only not the end. And is this wrote by u madura? Who is the author?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ராஜம் கிருஷ்ணனின் ‘புதிய சிறகுகள்’ – 8ராஜம் கிருஷ்ணனின் ‘புதிய சிறகுகள்’ – 8

சுஜியின் இரண்டு தமக்கைகளும், அண்ணனும் மறுநாள் மாலையில் தான் வருகிறார்கள். பனிக்கட்டிகளை வைத்து உடலைக் கிடத்தியிருக்கிறார்கள். எறும்பு மொய்க்கிறது. வந்ததும் வராததுமாக அவர்கள் கூடிக் கூடி, அந்த வீட்டை விலையாக்குவது பற்றித்தான் பேசுகிறார்கள். அந்த வீடும் சேர்ந்தாற் போலிருந்த இன்னொரு வீடும்,