Tamil Madhura தொடர்கள் சாவியின் வாஷிங்டனில் திருமணம் – 8

சாவியின் வாஷிங்டனில் திருமணம் – 8

அத்தியாயம் 8. ரு

 

    • ஆர். ஸ்ட்ரீட் முழுதும் பந்தல் போட்டு முடித்ததும், ஜோடனைகளில் வல்லவர்களான தஞ்சாவூர் நெட்டி வேலைக்காரர்கள், வாழைத்தார், தென்னங் குருத்து, மாவிலைக் கொத்து, பாக்குச்சரம், சாமந்தி மாலை, காகிதப் பூ, ஜிகினாத் தகடு, சல்லாத் துணி இவ்வளவையும் கொண்டு கம்பக் கால்களையும், கூரை முகட்டையும் அலங்கரித்து முடித்தனர்.

 

    • பாட்டிமார்கள், அந்தத் தெருவெங்கும் பெருக்கி மெழுகி, மாக்கோலம் போட்டு வைத்தார்கள்.

 

    • “இந்த ஊர் காக்காய் கோல மாவைக் கொத்தித் தின்ன மாட்டேன் என்கிறதே!” என்று வருத்தப்பட்டாள் அத்தை.

 

    • “இதென்ன பிரமாதம்! காட்டன் ஸார் கிட்டே சொன்னா, ஒரு நொடியிலே நம் ஊர்க் காக்காய்களைக் கொண்டு வந்து பறக்க விடமாட்டாரா?” என்றார் அம்மாஞ்சி.

 

    • “நம் ஊர்க் காக்காய்கள் வந்தாலும் தேவலைதான். குழந்தைகளுக்குச் சாதம் ஊட்டுகிறபோது வேடிக்கை காட்ட ஒரு காக்காய் கூட வரமாட்டேன் என்கிறது” என்றாள் பாட்டி.

 

    • “தோட்டத்திலே விழப் போகிற பந்தி இலைகளையாவது இந்தக் காக்காய்கள் சாப்பிடுகிறதோ, இல்லையோ?” என்று கவலைப்பட்டார் சாஸ்திரிகள்.

 

    • “அதற்குத்தான் நரிக்குறவர்கள் வரப் போகிறார்களே! என்றார் அம்மாஞ்சி. –

 

    • “உஷ்! அவர்களைப் பற்றிக் கேவலமாகப் பேசாதேயும். ராக்ஃபெல்லர் மாமியிடம் அவர்களெல்லாம் பெரிய மகாராஜாக்கள் என்று சொல்லி வைத்திருக்கிறேன் நான்” என்றான் பஞ்சு.

 

    • “ஆமாம், அவர்களைப் பற்றி எதற்காக அப்படி ஒரேயடியாய் ‘கப்ஸா’ அளந்து விட்டீர்?” என்று கேட்டார் அம்மாஞ்சி.

 

    • “அவர்கள் எச்சில் இலை சாப்பிடுகிறவர்கள் என்றால் நம் நாட்டுக்குத்தானே கேவலம்? அதற்காகத்தான் அப்படி கெளரவமாகச் சொல்லி வைத்தேன். “

 

    • “அவர்கள் இங்கே வந்து தங்கள் சுயரூபத்தைக் காட்டிவிட்டால்?…”

 

    • “கவலைப்படாதேயும். அதெல்லாம் முன் ஏற்பாடாக பாப்ஜியிடம் சொல்லி வைத்திருக்கிறேன். நரிக்குறவர்கள் இங்கே எப்படி எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அவன் அவர்களுக்குப் பாடம் சொல்லி அனுப்புவான். ஆயிரம் பேரையும் இங்கே வேளா வேளைக்கு தனிப் பந்தியில் உட்கார வைத்துச் சாப்பாடு போடப் போகிறேன். ராக்ஃபெல்லர் செலவழிக்கச்சே நமக்கென்ன கவலை!” என்றான் பஞ்சு.

 

    • “காட்டன் ஸாரா, கொக்கோன்னானாம்! தெரியாமலா ராக்ஃபெல்லர் மாமி எதுக் கெடுத்தாலும் ‘பஞ்ச் பஞ்ச்’!ன்னு தொளைச்சு எடுக்கிறா?”என்றார் சாஸ்திரிகள்.

 

    • “சாஸ்திரிகளே, பாட்டிகளெல்லாம் பருப்புத் தேங்காய் செய்து முடித்து விட்டார்களா? இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?” பஞ்சு கேட்டான்.

 

    • “இந்தத் தெருவிலுள்ள வாசல் படிகளுக்கெல்லாம் மஞ்சள் பூசி, குங்குமப் பொட்டு வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இன்று மாலை அவர்களுக்கு ‘சர்க்காரமா’ பார்க்க வேண்டுமாம். தேனாம்பேட்டையில் ‘சர்க்காரமா’ காட்டியபோது க்யூ வரிசையில் நின்று பார்க்க முடியவில்லையாம்” என்றார் சாஸ்திரிகள். –

 

    • “இங்கே போய்ப் பார்க்கட்டுமே. அதற்கு நான் என்ன செய்ய வேண்டுமாம்?”

 

    • “திரும்பி வரதுக்குக் கார் அனுப்ப வேண்டுமாம்.”

 

    • “ஆயிரம் பேருக்கும் கார் வேணுமாமா? பேஷ் வேறே வேலை இல்லே இந்தப் பாட்டிகளுக்கு? சர்க்காரமாவும் வேணாம், ஒண்ணும் வேணாம். ‘கிருஷ்ணா ராமா’ என்று வீட்டோடு இருக்கச் சொல்லும்” என்றான் பஞ்சு.

 

    • “வைதிகாள் கோஷ்டியெல்லாம் எப்படி வராளாம்?” என்று கேட்டார் சாஸ்திரிகள்.

 

    • “வைதிகர்கள், சமையல்காரர்கள், நாதஸ்வரக்காரர்கள், கிளாரினட் கோஷ்டியினர் இவ்வளவு பேரும் இரண்டு மணிக்கெல்லாம் வந்துவிடுவார்கள். பூக்கூடை, வெற்றிலைக் கூடை, வடு மாங்காய், வாழைத்தார் இதெல்லாம் திருச்சியிலேருந்து தனி ப்ளேனில் வருகின்றன. வெற்றிலை, சீவல், கறிகாய், புஷ்ப மாலை இந்த நாலுக்கும் மட்டும் – இனிமேல் தினமும் திருச்சியிலேயிருந்து ஸ்பெஷலா ஒரு ப்ளேன் விடச் சொல்லியிருக்கேன்” என்று கூறிக் கொண்டே வேகமாக நடந்தான் பஞ்சு.

 

    • “காட்டன் ஸார் நாளைக்குப் பூ வண்டி வருகிறபோது கொஞ்சம்…” என்று இழுத்தார் அம்மாஞ்சி.

 

    • பஞ்சு, தன்னுடைய ஆள் காட்டி விரலைக் கட்டை விரல் மீது வைத்து தட்சிணாமூர்த்தி ஸ்வாமி மாதிரி அபிநயம் பிடித்தபடியே, “பொடிதானே ஐயா, அது ஏற்கெனவே வந்தாச்சு பாப்ஜி அனுப்பியிருக்கான். அவனும் பொடி போடறவனாச்சே! பொடி போடுகிறவர்களின் கஷ்டம் அவனுக்குத் தெரியாதா?” என்றான்.

 

    • “ஆமாம், நாதஸ்வரம் எந்த ஊர் செட்” என்று கேட்டார் சாஸ்திரிகள்.

 

    • “நாமகிரிப் பேட்டை கிருஷ்ணன், ஷேக் சின்ன மெளலானாசாகிப் இவ்விரண்டு செட் வருகின்றன. தவிர, அறந்தாங்கியிலிருந்து உள்ளுர் நாதஸ்வரக்காரர்களும் வருகிறார்கள். அவர்கள்தான் நலங்கு ஊஞ்சலுக்கெல்லாம் வாசிப்பார்கள்” என்றான் பஞ்சு.

 

    • “பேஷ் பேஷ்! பாண்டு வாத்தியம்?”

 

    • “ஏ.ஐ.ஆர். ராதாகிருஷ்ணன்” என்றான் பஞ்சு.

 

    • “அதுவும் அபாரமாய்த்தானிருக்கும். அடாடா! இந்த வாஷிங்டன் வீதியிலே ராத்திரி பதினொரு மணிக்கு அவா ‘சக்கனி ராஜ’ வாசித்துக் கொண்டு பவனி போறப்போ தேவலோகமாயிருக்குமே…” என்றார் சாஸ்திரிகள்.

 

    • “அது சரி; ரிஸப்ஷனுக்கு யார் கச்சேரி?” என்று கேட்டார் அம்மாஞ்சி. –

 

    • “அரியக்குடி, லால்குடி, பாலக்காடு” என்றான் பஞ்சு.

 

    • “பலே, பலே! டாப் கிளாஸ் கச்சேரின்னு சொல்லுங்க. ஒரு டான்ஸுக்கும் ஏற்பாடு பண்ணியிருக்கலாம்” என்றார் சாஸ்திரிகள். –

 

    • இந்தச் சமயம் கையிலே ஜல்லிக் கரண்டியுடன் அங்கே வந்து நின்ற கும்பகோணம் வைத்தா, “பஞ்சு ஸார் இன்று சாயந்தரம் என்ன டிபன் போடலாம்?” என்று கேட்டார்.

 

    • “ராக்ஃபெல்லர் மாமி வெளியே போயிருக்கிறார். அவர் வந்து விடட்டும். அப்புறம் முடிவு செய்யலாம்” என்றான் பஞ்சு. அப்படிச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அந்தச் சீமாட்டி, காரிலிருந்து இறங்கி வந்தாள். வரும்போதே, “பஞ்ச், ப்ரொஸெஷனுக்கு ரூட் பர்மிஷன் வாங்கிட்டேன். ஊர்வலத்தை டெலிவிஷன் செய்யறத்துக்கும் ஏற்பாடு செய்துட்டேன். ஜான்வாசத்துக்குக் காரும் ‘அரேஞ்ச்’ பண்ணியாச்சு. ஆமாம்; மாப்பிள்ளை ஈவினிங் எத்தனை மணிக்கு வருகிறார்? ‘ரிஸீவ்’ பண்றதுக்கு ஏர்போர்ட் போக வேண்டாமா?”

 

    • “ஐந்து மணிக்கு வருகிறார். அதுக்கு முன்னாலே நாதஸ்வரக்காரர்கள், பாண்டு வாத்தியக்காரர்கள் எல்லாரும் வராங்க. முதல்லே நான் போய் அவங்களை அழைச்சுக்கிட்டு வந்துடறேன். “

 

    • “வெரி குட்! எனக்கும் கொஞ்சம் வேலையிருக்குது. சிக்காகோவிலேருந்து நாளைக்கு என் ரிலேடிவ்ஸும், பிரண்ட் ஸும் வராங்க. அவங்களையெல்லாம் ஹோட்டல்லேதான் இறக்கணும். இன்னும் ரொம்பப் பேர் வரப் போறதா லெட்டரும், தந்தியும் வந்து குவிஞ்சுக்கிட்டே இருக்குது. இதெல்லாம் பார்த்தால், மேரேஜ் டே அன்று வாஷிங்டன்லே ஒரு ஹோட்டல்லே கூட இடம் கிடைக்காது போல இருக்குது. எதுக்கும் இப்பவே போய் ‘ஸ்டேட்லர் ஹில்டன்’, ‘வெடிராடன் பார்க்-ஹோடேல் ‘, ‘மே ப்ளவர்’ இந்த மூன்று ஒட்டல்களிலும் ரூம்ஸ் ரிஸர்வ் செய்துவிட்டு வந்துடறேன். ஆமாம், கையிலே ஏதோ வெபன் வெச்சுக்கிட்டு நிற்கிறாரே, இவர் யார்?” என்று கேட்டாள் மிஸ்ஸ் ராக்.

 

    • “இவர்தான் ஹெட் குக் வைத்தா. அது வெபன் இல்லை. காராபூந்தி தேய்க்கிற ஜாரணி!” என்றான் பஞ்சு.

 

    • – “இவர் இதுக்கு முன்னாலே எங்கே ஒர்க் பண்ணிக்கிட்டிருந்தார்?” –

 

    • “தாமஸ் குக் அண்ட் ஸ்ன்லே இருந்தார்.”

 

    • “ஒ, வெரிகுட் இன்றைக்கு என்ன டிபன் போடச் சொல்லியிருக்கே?” –

 

    • “வீட் அல்வாவும், காரலோமாஸும் போடச் சொல்லலாம்னு நினைக்கிறேன்” என்றான் பஞ்சு.

 

    • “வீட் அல்வா எதுக்கு ரைஸ் அல்வாவே போடச் சொல்லு. ஸெளத்

 

    • இண்டியாவிலே ரைஸ்தானே முக்கியம்?” என்றாள் மிஸஸ் ராக்.

 

    • “ரைஸ் அல்வா போடலாம். ஆனால் அது டெய்லி சாப்பிட்டு அலுத்துப் போச்சு… அதனாலே ஒரு சேஞ்சுக்கு வீட் அல்வா இருக்கட்டுமே என்று பார்த்தேன்.”

 

    • “அதுவும் சரிதான்; வீட் அல்வாவே போடட்டும் என்றாள் மிஸஸ் ராக்.

 

    • “ஒரு நிமிஷம் கார்டன் பக்கம் வறீங்களா?” என்று கூப்பிட்டான் பஞ்சு.

 

    • “ஹொய்?” என்று கேட்டாள் மிஸஸ் ராக்.

 

    • “காடி அடுப்பு வெட்டணுமாம். எந்த இடம்னு சொல்லிட்டா அந்த வேலையை முடிச்சுடலாம்” என்றான் பஞ்சு.

 

    • “ஓபன் ஏர்லயா அடுப்பு வெட்டப் போறிங்க? கண்டபடி புகை வருமே!” என்றாள் மிஸஸ் ராக். –

 

    • “புகை போக்கி கட்டிவிட்டால் போச்சு” என்று கூறினான் பஞ்சு.

 

    • “நோ நோ! வாஷிங்டன்லே புகைபோக்கி கட்டக் கூடாது. பாக்டரி மாதிரி ஆயிடும். இது கவர்ன்மெண்ட் ஹெட்குவார்ட்டர்ஸ். அதனாலே, இந்த ஸிடிலே உயரமான கட்டடமோ பாக்டரியோ சிம்னியோ கட்டக் கூடாதுன்னு ஆர்டர்…!”

 

    • “சரி மேடம்! சிம்னி இல்லாமலேயே கட்டி விடச்சொல்றேன். அந்த மூலையிலே கலாய் பூசறவங்க அடுப்பு போட்டுக்கு வாங்க ….-

 

    • “அது யார் கலாய் பூசறவங்க?” என்று கேட்டாள் மிஸ்ஸ் ராக்.

 

    • “பாத்திரங்களுக்கெல்லாம் கலாய் பூசல்லேன்னா, ரசம் மோரெல்லாம் ஸ்பாயிலாயிடும். “

 

    • “கலாய் பூசறதுன்னா அது எப்படி?”

 

    • “ஈயம் பூசறது மேடம்”

 

    • “ஈயம் எதுக்கு ஸில்வர் பூசட்டுமே!”

 

    • “ஸில்வர் பூசலாம். சம்பந்திங்களுக்கு ஈயம்தான் பிடிக்கும். அவங்க ஏதாவது சொல்லுவாங்க. அப்புறம் வீணா மனஸ்தாபத்திலே முடியும்…”

 

    • “வேண்டாம் வேண்டாம்! சம்பந்திங்க இஷ்டப்படியே செஞ்சுடு. அவங்களுக்கு எதுக்கு குறை?… பஞ்ச்! சம்பந்தி சண்டை வரும்னு சொல்லிக்கிட்டிருந்தயே, அது எப்ப வரும்? எனக்கு சம்பந்திச் சண்டை பார்க்கணும் போல ரொம்ப ஆசையாயிருக்கு பஞ்ச்!” என்றாள் மிஸஸ் ராக்.

 

    • “அது எப்ப வேணாலும் வரும் மேடம்! பெண் வீட்டாருக்கும் பிள்ளை வீட்டாருக்கும் தகராறு வந்து பெரிய சண்டையிலே முடிஞ்சுடும். அதனாலே கல்யாணமே கூட நின்னு போயிடறதும் உண்டு. ஸெளத் இண்டியாவிலே இது ரொம்பக் காமன்…”

 

    • “எதுக்கு சண்டை போடுவாங்க?”

 

    • “அது அவங்களுக்கே தெரியாது! திடீர்னு சண்டை வரும். அது எப்படி வரும்? எதுக்காக வரும்? எந்த மாதிரி வரும்? எப்படி முடியும்?” என்று யாராலும் சொல்லவே முடியாது. “

 

    • “இந்தக் கல்யாணத்திலே கூட வருமா?”

 

    • “ஒ! எந்தக் கல்யாணத்திலேயும் வரும்!”

 

    • “பஞ்ச்! சண்டை வரச்சே நான் ஒருவேளை தூங்கிக் கிட்டு இருந்தாக்கூட என்னை எழுப்பிவிடு. மறந்துடாதே; சண்டையை நான் பார்க்காமல் மிஸ் பண்ணிவிடக் கூடாது.

 

    • இவ்வளவு கஷ்டப்பட்டு கல்யாணம் செய்து, சம்பந்தி சண்டை பார்க்கல்லேன்னா என்ன பிரயோஜனம்? ஏன் பஞ்ச்! ஒரு வேளை சண்டையே வராமல் போயிட்டா?… என்று கவலைப்பட்டாள் மிலஸ் ராக்.

 

    • “கவலைப்படாதீங்க மேடம்! கட்டாயம் வரும்! “

 

    • “ஆமாம், கல்யாணப் பெண்ணும் அவங்க கோஷ்டியும் எத்தனை மணிக்கு வராங்க?”

 

    • “நைட் பதினொரு மணிக்கு வராங்க. வசண்டாவும், அவள் ஹஸ்பெண்டும் கூட ராத்திரி ப்ளேன்லேதான் வராங்க. நாளைக்கு சுமங்கலிப் பிரார்த்தனையாச்சே!”

 

    • “அவங்களை யார் ரிலீவ் பண்ணப் போறீங்க?”

 

    • “நான், லல்லி, அய்யாசாமி, மிஸஸ் மூர்த்தி, கேதரின், லோரிட்டா எல்லோரும் போய் அழைச்சுக்கிட்டு வந்துவிடுகிறோம்.”

 

    • “நானும் வரணுமா, ஏர்போர்ட்டுக்கு?”

 

    • “வேண்டாம்; ஏற்கனவே நீங்க அலைஞ்சு அலைஞ்சு ரொம்ப டயர்டாப் போயிருக்கீங்க. இந்த ஒரு மாசத்திலே உங்க உடம்பே துரும்பா இளைச்சுப் போச்சு மேடம்” என்றான் பஞ்சு.

 

    • “பட்டுப் புடவை, சரிகை வேஷ் டி எல்லாம் வந்தாச்சா?”

 

    • “இரண்டாயிரம் ஸாரீஸும், மூவாயிரம் வேஷ்டீஸும் மார்னிங்கே வந்தாச்சு. காஷ்மீர், பனாரஸ் வெரைட்டி மட்டும் நாளைக்கு வரது. உங்களுக்கு மட்டும் மேடம், ஸ்பெஷல் தறி போடச் சொல்லி ஒரு புடவை வரவழைச்சிருக்கேன். க்வீன் எலிசபெத் இண்டியாவுக்குப் போனப்போ கொடுத்தாங்களே, அந்த மாதிரி ஸாரி!” என்றான் பஞ்சு.

 

    • “வெரிகுட் எங்கே புடவைகளைக் கொண்டு வரச் சொல்லு பார்க்கலாம்” என்று கூறி நாற்காலியில் அமர்ந்து கொண்டாள் மிஸஸ் ராக். பஞ்சு ஒவ்வொரு புடவையாக எடுத்துக் காண்பித்தான்.

 

    • “பியூட்டிபுல் பார்டர்ஸ்! அட்ராக்டிவ் கலர்ஸ்!” என்று வியந்தாள் மிஸஸ் ராக்.

 

    • “எல்லாம் பதினெட்டு முழம் மேடம் முழம்! முழம் போட்டுப் பார்க்கிறீங்களா?”

 

    • “பதினெட்டு முழம்னா எத்தனை யார்ட்?”

 

    • “ஒன்பது கெஜம்!” –

 

    • “ஒன்பது யார்ட்னா ரொம்ப தூரம் நடந்து போய் முழம் போட வேண்டியிருக்குமே. காலையிலேருந்து அலைஞ்சு அலைஞ்சு என் காலெல்லாம் வலிக்குது பஞ்ச்! அதனாலே இப்ப என்னாலே ஒன்பது கெஜ தூரம் நடக்க முடியாது” என்று கூறிவிட்டாள் மிஸஸ் ராக்.

 

    • “நீங்க நடக்க வேணாம் மேடம்! நாற்காலியில் உட்கார்ந்து கொண்டே முழம் போடுங்க. மிஸஸ் மூர்த்தி அந்தப் பக்கம் பிடிச்சுக்குவாங்க. நீங்க முழம் போடப் போட அவங்க உங்க கிட்டே நடந்து வருவாங்க” என்றான் பஞ்சு.

 

    • “வெரிகுட் ஐடியா, பஞ்ச்! உனக்கு எப்படித்தான் தோணுதோ இந்த ஐடியாவெல்லாம்!” என்று வியந்தாள் மிஸஸ் ராக். பின்னர், மிஸஸ் மூர்த்தி புடவையைப் பிடித்துக்கொள்ள, ராக்ஃபெல்லர் மாமி உட்கார்ந்தபடியே முழம் போட்டுப் பார்த்துவிட்டு, “ரொம்புத் கரெத்டர இருக்குது. கேதரின், லோரிட்டா, லோசனா எல்லோருக்கும் இதே மாதிரி புடவைங்களுக்கு ஆர்டர் பண்ணி யிருக்கயா?” என்று கேட்டாள்.

 

    • “ஓ! காஞ்சிபுரத்தையே ஏற்றி அனுப்பச் சொல்லியிருக்கிறேன். எந்த ரகம் பிடிக்குதோ அதை எடுத்துக்கலாம்” என்றான் பஞ்சு.

 

      • Washington Wedding:

 

      • Bridegroom and Party arrive

 

      • R Street busy with marriage preparations !

 

      • Thousands of Sastries Roaming about Washington !

 

      • Bridegroom is having a small mole on the red cheek !

 

      • Shambandy Shanday expected any moment !

 

    • “டயமாச்சு, ஐந்து மணிக்கு எல்லோரும் ஏர்போர்ட் போகணும். மாப்பிள்ளை வரார். நீங்க எல்லோரும் ரெடியா இருங்கோ. இதோ வந்துடறேன்” என்று கூறிவிட்டுக் காரில் ஏறிச் சென்றாள் மிஸஸ் ராக்.

 

    • பெண்டுகள் அவசர அவசரமாக அலங்காரத்தில் ஈடுபடலானார்கள்.

 

    • ‘ஆச்சா, போச்சா?’ என்று குறுக்கும் நெடுக்கும் பறந்து கொண்டிருந்த பஞ்சு, “இந்த லேடீஸே இப்படித்தான்; வெளியே புறப்படனும்னா சட்டென்று புறப்பட முடியாது உங்களால்” என்று விரட்டினான்.

 

    • “எல்லோரும் தலை பின்னிக் கொண்டாகிவிட்டது. பூ வந்ததும், புறப்படவேண்டியதுதான்” என்றாள் அத்தை.

 

    • “பூ வண்டி வந்து அரை மணியாச்சு. தஞ்சாவூர் கதம்பம், மல்லி, முல்லை, ரோஜா, கனகாம்பரம், தாழம்பூ எல்லாம் வந்திருக்கின்றன. வேண்டியதை எடுத்துக் கொள்ளுங்கள். நாலு கூடை புஷ்பங்களை சம்பந்தி வீட்டுக்கு அனுப்ப வேண்டும். எல்லாவற்றையும் தீர்த்து விடாதீர்கள் !” என்றான் பஞ்சு.

 

    • டாஞ்சூர் ஃப்ளவர் பஞ்சைக் கண்டதும் லோரிட்டாவுக்குச் சந்தோஷம் தாங்கவில்லை. அதை ஆசையோடு எடுத்துத் தன் தலையில் சுற்றிக் கொண்டு, “இன்றைக்கு நைட் வசண்டா வரப் போகிறாள். கமர்கட் கொண்டு வருவாள், என் பாடு ஜாலி!” என்று மகிழ்ச்சி பொங்கத் துள்ளினாள் அவள். .

 

    • “டயம் மூணு – நாற்பது; அம்மாஞ்சி எங்கே? நேரமாச்சே! வைதிகாளை ரிஸீவ் பண்றதுக்கு ஏர் போர்ட்டுக்குப் புறப்பட வேண்டாமா?” என்றான் பஞ்சு.

 

    • “அம்மாஞ்சியும் சாஸ்திரியும் தோட்டத்திலே சூளை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்” என்றார் அய்யாசாமி.

 

    • “சூளையா? எதுக்கு?” என்று கேட்டான் பஞ்சு.

 

    • “விபூதி சூளை! நாலு நாளாகச் சாண உருண்டைகளை உருட்டி உருட்டிக் காய வைத்துக் கொண்டிருக்கிறாரே, அதையெல்லாம் ஓரிடத்திலே கும்பலாக வைத்து பஸ்மம் பண்ணிக் கொண்டிருக்கிறார். ஆயிரம் வைதிகாளுக்கும் விபூதி சப்ளை செய்யனுமாம். அதுக்காகத்தான்…” என்றார் அய்யாசாமி.

 

    • “அவரைக் கூப்பிடு இங்கே! இப்பதானா நேரம் கிடைச்சது அதுக்கு?” என்று அதட்டல் போட்டான் பஞ்சு.

 

    • “பஞ்சு! மெட்ராஸிலேருந்து கால் வந்திருக்கு: பாப்ஜி கூப்பிடுகிறாராம்” என்றார் அய்யாசாமி.

 

    • பஞ்சு டெலிபோனை எடுத்துப் பேசினான்.

 

    • “ஹல்லோ! பாப்ஜி பேசறேன்…”

 

    • “என்ன பாப்ஜி?”

 

    • “சாஸ்திரிகள், நாதஸ்வரக்காரர்கள் எல்லாம் வந்து சேர்ந்தாச்சா?”

 

    • “ஒ, இப்பத்தான் வந்தாங்க. ஐந்து மணிக்கு மாப்பிள்ளை வருகிறார். நாளைக்குப் பூ வண்டி வரச்சே வெற்றிலையும், பாக்கும் கொஞ்சம் அதிகமாகவே அனுப்பிவை. நீ இருபத்தெட் டாம் தேதி புறப்பட்டு வருகிறாயா? ராக்ஃபெல்லர் மாமி உன்னிடம் ஸ்பெஷலா சொல்லச் சொன்னா…” – – – – –

 

    • “பார்க்கலாம்… இருபத்தாறாம் தேதி, இருபத்தேழாம் தேதி இந்த இரண்டு நாளும் மெட்ராஸ், பம்பாய், கல்கத்தா, டில்லி, கோயம்புத்துர், திருச்சி, மதுரை இந்த ஏழு இடத்திலே ருந்தும் ஸ்பெஷல் விமானங்கள் விடறதுக்கு ஏற்பாடு செய்யணும். இங்கே ஏகப்பட்ட பேர் வாஷிங்டன் வரணும்னு ஆசைப்படறாங்க…” – –

 

    • “ஓ… எஸ். அதுக்கென்ன, ஏற்பாடு பண்ணிடறேன்.”

 

    • “வைதிகாள் போதுமா? கிருஷ்ணப்ப நாய்க்கன் அக்ரகாரத்திலே இன்னும் கொஞ்சம் பேர் இருக்காங்க. அவாளையும் அனுப்பி வைக்கட்டுமா?”

 

    • “போதும் போதும்! இப்பவே இங்கே வைதிகாள் கூட்டம் நிறைஞ்சு போச்சு.”

 

    • “சரி; மறுபடியும் நாளைக்குப் பேசுவோம்.”

 

    • மாப்பிள்ளை வரப் போகிற செய்தி இதற்குள் வாஷிங்டன் முழுவதும் பரவி விடவே, ஏர்போர்ட்டில் ஏகக் கூட்டம் கூடிவிட்டது.

 

    • பத்திரிகை நிருபர்களும், புகைப் படக்காரர்களும் குறுக்கும் நெடுக்கும் அலைந்து கொண்டிருந்தார்கள்.

 

    • சரியாக ஐந்து மணிக்கு சம்பந்தி விமானங்கள் வந்து நின்றன.

 

    • நாதஸ்வரக்காரர்கள் சக்கைப் போடு போட்டு, விமான நிலையத்தையே திருவிழாக் கோலமாக்கிக் கொண்டிருந்தனர். விமானத்திலிருந்து மாப்பிள்ளை ராஜ கோபாலன் தான் முதலில் இறங்கி வந்தார்.

 

    • தயாராக வைத்திருந்த மலர் மாலையை எடுத்து மிஸஸ் ராக்ஃபெல்லரிடம் கொடுத்தான் பஞ்சு. அந்தச் சீமாட்டி மாலையை வாங்கி மாப்பிள்ளையின் கழுத்தில் போட்டுக் கை குலுக்கியபோது பத்திரிகைக்காரர்கள் படமெடுத்துக் கொண்டனர்.

 

    • மாப்பிள்ளை வெளியே செல்ல முடியாதபடி கூட்டம் அவரைச் சூழ்ந்து கொண்டு விடவே, போலீசார் வந்து வழி செய்து கொடுக்க வேண்டியதாயிற்று. –

 

    • நிருபர்கள் மாப்பிள்ளையைச் சுற்றி நின்றுகொண்டு கேள்வி கேட்கத் தொடங்கவே, “பிரைட்க்ரூம் ரொம்ப டயர்ட் அவரை யாரும் தொந்தரவு செய்யாதீங்க. நாளைக்குத்தான் பிரஸ்காரர்களுக்குப் பேட்டி. வழிவிடுங்க” என்று கூறிய மிஸஸ் ராக், மாப்பிள்ளையைத் தன் காரில் ஏற்றிக் கொண்டு புறப்பட்டு விட்டாள்.

 

    • கார், டம்பர்ட்டன் ஓக்ஸ் வாசலில் போய் நின்றதும் மாமியும், அத்தையும் வெளியே வந்து ஆரத்தி சுற்றிக் கொட்டினார்கள். மிஸஸ் ராக்ஃபெல்லரும், அவருடைய உறவினர்களும் ஆரத்தி சுற்றுவதை அதிசயத்துடன் பார்த்துக் கொண்டே ‘கலர்டு வாட்டர்’ என்றனர்.

 

    • அன்று மாலை வெளியான ‘டெய்லி நியூஸ்’, ‘ஈவினிங் ஸ்டார்’ முதலிய பத்திரிகைகளில் பரபரப்பான செய்திகள் பிரசுரமாகியிருந்தன.

 

      • பிரைட்க்ரூம் அண்ட் பார்ட்டி அரைவ்!

 

      • ஆர். ஸ்ட்ரீட் பிலி வித் மேரேஜ் பிரபரேஷன்ஸ்!

 

      • தெளஸண்ட்ஸ் ஆப் ஸாஸ்ட்ரீஸ் ரோமிங் அபௌட் வாஷிங்டன்!

 

      • பிரைட்க்ரும் ஈஸ் ஹேவிங் எ ஸ்மால் மோல் ஆன் தி ரைட் சீக்!

 

    • “ஷம்பந்தி ஷண்டய் எக்ஸ்பெக்டட் எனி மோமெண்ட்!

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

வடுவூர் K. துரைசாமி ஐயங்கார் எழுதிய “திவான் லொடபட சிங் பகதூர்” – 05வடுவூர் K. துரைசாமி ஐயங்கார் எழுதிய “திவான் லொடபட சிங் பகதூர்” – 05

அந்த வார்த்தகர் அவனைக் கெஞ்சித் தமக்கு திவான் வரி போடாமல் செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொண்டு, அவனிடம்நூறு கொடுப்பார். இம்மாதிரி நமது சமயற்காரன் ஒவ்வொரு நாளும் பல உத்தியோகஸ்தர்களிடத்திலும் வர்த்தகர்களிடத்திலும் பெருத்த பெருத்த தொகைகளை இலஞ்சம் வாங்கத் தொடங் கினான். அவன் திவானினது

கபாடபுரம் – 3கபாடபுரம் – 3

3. தேர்க்கோட்டம்   பேரப் பிள்ளையாண்டான் வரப் போகிறான் என்ற மகிழ்ச்சியினாலும் ஆவலினாலும் அந்த அகாலத்திலும் உறங்காதபடி விழித்திருந்தார் பெரிய பாண்டியர் வெண்தேர்ச் செழியர். தந்தையார் அநாகுல பாண்டியரையும், தாய் திலோத்தமையையும் பார்த்து வணங்கி நலம் கேட்டறிந்த சுவட்டோடு, அவனிடம் நிறையப்