Tamil Madhura தொடர்கள் சாவியின் வாஷிங்டனில் திருமணம் – 3

சாவியின் வாஷிங்டனில் திருமணம் – 3

அத்தியாயம் 3. ங்

 
“இதுதான் வாஷிங்டன் டி.ஸி. என்றான் டில்லி பஞ்சு.

 

“அதென்னடா டி.ஸி. ஏ.ஸி.ன்னு?… வாஷிங்டன் என்று சொன்னால் போதாதோ?” என்று கேட்டார் மாமா.

 

“ஒருவேளை இங்கெல்லாம் டி.ஸி. கரெண்ட்டா யிருக்கும்” என்றார் சாம்பசிவ சாஸ்திரிகள்.

 

அம்மாஞ்சி வாத்தியாருக்குச் சிரிப்புத் தாங்கவில்லை. “சாஸ்திரிகளே! உமக்குத் தெரியாவிட்டால் அசட்டுப் பிசட்டென்று உளறாதேயும். டி.ஸி. என்றால் அது இனிஷியலய்யா. இதுகூடத் தெரியாமல் அமெரிக்காவுக்குக் கிளம்பி வந்துவிட்டீரே!” என்று பரிகாசம் செய்தார்.

 

“அது கரெண்ட்டுமில்லை, இன்ஷியலுமில்லை; டி.ஸி. என்றால் டிஸ்டிரிக்ட் ஆப் கொலம்பியா என்று அர்த்தம்” என்றான் டில்லி பஞ்சு.

 

“ஒகோ, அப்படியா விஷயம்?” என்றார் மாமா.

 

விமானம் வாஷிங்டன் நகரை நெருங்கிக் கொண்டிருந்தது. –

 

“அதோ வெள்ளி ரிப்பன் மாதிரி தெரிகிறதே, அது என்னம்மா?” என்று ஏர்ஹோஸ்ட்டஸ் லல்லியைப் பார்த்துக் கேட்டாள் அத்தை.

 

“அதுதான் பொடோமாக் நதி” என்றாள் லல்லி.

 

“போடா மக்கு நதியா?” என்று கேட்டுவிட்டுச் சிரித்தார் சாஸ்திரிகள்.

 

“போடா மக்குமில்லை. வாடா புத்திசாலியுமில்லை… ‘பெடோமாக்’ என்று சரியாகச் சொல்லும் ” என்று சாஸ்திரிகளைத் திருத்தினார் அம்மாஞ்சி.

 

“திவ்யமான தீர்த்தம். மெட்ராஸுக்குப் போகிறபோது நாலைந்து செம்பிலே எடுத்துக் கொண்டு போகனும்!” என்றார் சாஸ்திரிகள்.

 

“இது கூட கங்கா தீர்த்தமா என்ன, செம்பிலே அடைத்துக் கொண்டு போவதற்கு? அம்மாஞ்சி வாத்தியார், சாஸ்திரிகளின் அசட்டுத்தனத்தை எண்ணித் தலையில் அடித்துக் கொண்டார்.

 

“நதிக்குப் பக்கத்திலே குளம் மாதிரி ஒன்று தெரிகிறதே, அது என்னடா பஞ்சு?” என்று கேட்டார் மாமா.

 

“அதுக்கு ‘டைடல் பேஸின்’ என்று பெயர். வாஷிங்டனிலேயே ரொம்ப அழகான இடம் அது. அதைச் சுற்றிலும் இருப்பது ஜப்பான் தேசத்து செர்ரி மரங்கள். ஏப்ரல் மாதத்திலே அந்த மரங்கள் பூத்துக் குலுங்கறபோது கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும். அதைப் பார்க்கப் பல தேசங்களிலிருந்து காதலர்கள் ஜோடி ஜோடியாக வருவார்கள்” என்று கூறிக்கொண்டே லல்லியை ஒருமுறை கடைக் கண்ணால் கவனித்தான் பஞ்சு.

 

“சாஸ்திரிகளே! நாம் இரண்டு பேரும் இன்றைக்கே ஜோடியாகப் போய் ஸ்நானம் செய்துவிட்டு வந்து விடலாம்” என்றார் அம்மாஞ்சி. .

 

“அதோ ஒரு மண்டபம் தெரிகிறதே, அதுதான் லிங்கன் மண்டபம்” என்றான் பஞ்சு.

 

“ஆப்ரஹாம் லிங்கன் மண்டபமா?” என்று கேட்டார் மாமா.

 

“ஆமாம்” என்றான் பஞ்சு.

 

‘ஹர ஹர’ என்று அந்த மண்டபத்தை நோக்கிக் கன்னத்தில் போட்டுக் கொண்டார் சாஸ்திரிகள்.

 

“சாஸ்திரிகளே, எதுக்காக இப்போது கன்னத்தில் போட்டுக் கொள்கிறீர்கள்?” அம்மாஞ்சி கேட்டார்.

 

“லிங்கம் வைத்து மண்டபம் கட்டியிருக்காளே! மஹாலிங்கம், ஜம்புலிங்கம் மாதிரி அமெரிக்காவிலே ஆப்ரஹாம் லிங்கம் விசேஷம் போலிருக்கு” என்றார் சாஸ்திரிகள்.

 

சாஸ்திரிகள் சொன்னதைக் கேட்டுக் குலுங்கிச் சிரித்தனர் அனைவரும்.

 

“பாவம், சிரிக்காதீங்க! சாஸ்திரிகள் அப்பாவி மனிதர்! அமெரிக்காவுக்குப் புதுசோல்லியோ? கழுத்திலே லிங்கம் கட்டிக்கிறவாளுக்குத்தான் லிங்கன்னு பேருங்கறது அவருக்குத் தெரியாது” என்று வியாக்கியானம் செய்தார் அம்மாஞ்சி.

 

‘பேஷ் இவர் அவரைவிட பிரகஸ்பதி!’ என்று எண்ணிக் கொண்டான் பஞ்சு. –

 

“எல்லோரும் அங்கே பாருங்கள். கேபிடல் டோம் தெரிகிறது” என்றாள் ஏர்ஹோஸ்ட்டஸ்.

 

அனைவரும் லல்லி சுட்டிக் காட்டிய அந்தக் கட்டடத்தையே கண் கொட்டாமல் பார்த்தார்கள்.

 

“அடேயப்பா இவ்வளவு பெரிய கட்டடம்? இட்டிலிப் பானை மூடி மாதிரி பிரமாண்டமா இருக்கே!” என்று அதிசயப்பட்டனர் அத்தையும், பாட்டியும்.

 

“உலகிலேயே மிகவும் முக்கியமான கட்டடம் இது” என்றான் பஞ்சு.

 

“அமெரிக்காள் சாமான்யப்பட்டவாளா என்ன? இந்தியாவுக்குக் கோடி கோடியா ‘ஹெல்ப்’ பண்ணுகிறவாளாச்சே! அவா தீர்க்காயுசா யிருக்கணும்” என்று ஆசீர்வதித்தார்.அம்மாஞ்சி வாத்தியார்.

 

“இப்போது விமானம் கீழே இறங்கப் போகிறது. எல்லோரும் பெல்ட்டைப் போட்டுக் கொள்ளுங்கள்” என்று எச்சரித்தாள் ஏர்ஹோஸ்ட்டஸ்.

 

சாஸ்திரிகளும், அம்மாஞ்சியும் பெல்ட்டை மாட்டிக் கொண்டனர்.

 

“சாஸ்திரிகளே, உம்ம ஆயுசிலே “பெல்ட் போட்டுக் கொள்ளுவதற்கு உமக்கு ஒரு சான்ஸ் கிடைச்சுது பாரும்!” என்று சாஸ்திரிகளைப் பரிகாசம் செய்தார் அம்மாஞ்சி.

 

“அது மட்டுமா? ‘சாம்பசிவ சாஸ்திரிகள்… வாஷிங்டன் ரிடர்ன்ட்’ என்று வேறு சொல்லிக் கொள்ளலாமே! : என்றான் டில்லி பஞ்சு.

 

விமான நிலையத்தில் மேரேஜ் பார்ட்டியை அழைத்துச் செல்ல ராக்ஃபெல்லர் உறவினர்கள் கார்களோடு வந்து காத்திருந்தனர்.

 

மேரேஜ் பார்ட்டி வரப் போகிற சேதி இதற்குள் வாஷிங்டன் முழுவதும் பரவிவிடவே, விமான நிலையத்தில் பெருங்கூட்டம் கூடிவிட்டிருந்தது.

 

“அம்மாஞ்சி வெளியே பார்த்தீரா கூட்டத்தை… எள்ளுப் போட இடமில்லை” என்றார் சாஸ்திரிகள்.

 

அப்படியா!” என்று கூறிய அம்மாஞ்சி வாத்தியார் சட்டென்று இடுப்பில் செருகியிருந்த பொட்டலத்திலிருந்து நாலு எள்ளை எடுத்துப் போட்டுப் பார்த்தார்.

 

“இதெல்லாம் வெள்ளைக்காராள் தேசம். கண்ட இடத்தில் குப்பை போடக் கூடாது” என்றார் சாஸ்திரிகள்.

 

அம்மாஞ்சி வாத்தியார் விமானத்தை விட்டு இறங்கியதுதான் தாமதம், பத்திரிகை நிருபர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். காமிராக்காரர்கள் பல கோணங்களில் அவரைப் படமெடுத்துக் கொண்டனர்.

 

“உங்கள் பெயர்?” ஒரு நிருபர் கேட்டார்.

 

“அம்மாஞ்சி!”

 

“நீங்கள் கீழே போட்டீர்களே, அதற்கு என்ன பெயர்?

 

“எள்!”

 

“என்ன ஹெல்லா? அதை ஏன் கீழே போட்டீர்கள்?

 

“நான் ஆகாசத்திலேதான் விட்டேன். அது கீழே விழுந்துவிட்டது.”

 

“ஹெல்லுக்குள் என்ன இருக்கிறது?”

 

“எண்ணெய்!”

 

“எண்ணெய் என்றால்…?”

 

“ஆயில்…!”

 

“ஆயிலா? அவ்வளவு சிறிய வஸ்துக்குள் ஆயிலா? ஒண்டர்புல்!…” என்றனர் நிருபர்கள்.

 

அவ்வளவுதான்! வாஷிங்டன் பத்திரிகைகளிலெல்லாம் அம்மாஞ்சியின் புகைப்படத்துடன் “எள்ளுக்குள் ஆயில் இருக்கிறது என்னும் மகத்தான உண்மையைக் கண்டுபிடித்துள்ள இண்டியன் சாஸ்திரி! அதாவது,ஸயண்டிஸ்ட்!” என்ற செய்தியைப் பிரசுரித்துப் பெரும் பரபரப்பை உண்டாக்கி விட்டனர்.

 

உடனே அமெரிக்காவிலுள்ள எண்ணெய்க் கம்பெனி முதலாளிகளும், பூதத்துவ ஆராய்ச்சி நிபுணர்களும் அவசரம் அவசரமாக ஸயண்டிஸ்ட் அம்மாஞ்சியைப் பேட்டி காணப் புறப்பட்டுவிட்டார்கள்!

 

“எள்ளுக்குள் எண்ணெய் இருக்கிற மர்மத்தை ஸயண்டிஸ்ட் அம்மாஞ்சி டெலிவிஷன் பேட்டியில் விளக்கிச் சொல்வார்” என்று மாலைப் பத்திரிகைகளில் இன்னொரு செய்தி வெளியாயிற்று!

 

ராக்ஃபெல்லர் உறவினர்களுக்கு, கல்யாண கோஷ்டியினரை ஒவ்வொருவராக அறிமுகப்படுத்தி வைத்தனர் மூர்த்தி தம்பதியர். அப்புறம் எல்லோரும் ‘கான்ஸ்டிடியூஷன் அவென்யூ’ வழியாக ஜார்ஜ் டவுனுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

 

பக்கத்தில் பக்கத்தில் எட்டுக் கார்கள் செல்லக்கூடிய அளவுக்கு மிக விசாலமா யிருந்தது அந்தச் சாலை.

 

“ஜானவாச ஊர்வலத்துக்கு ஏற்ற இடம்… ரொம்ப அழகாயிருக்கிறது” என்றார் மாமா.

 

“நடத்திவிட்டால் போச்சு! அதையெல்லாம் தீர்மானிக்கத்தானே வந்திருக்கோம். நகரம் பூராவையும் ஒரு முறை நன்றாகச் சுற்றிப் பார்த்துவிடலாம். பிறகு ஒவ்வொன்றாக முடிவு செய்வோம். ஜார்ஜ் டவுனில்தான் நாமெல்லாம் தங்கப் போகிறோம்” என்றார் மூர்த்தி.

 

“மெட்ராஸ் மாதிரி இங்கேயும் ஒரு ஜார்ஜ் டவுன் இருக்கிறதா? அப்படீன்னா ரொம்ப செளகரியமாப் போச்சு! கொத்தவால்சாவடி கூட இருக்கும்” என்றார் சாஸ்திரிகள்.

 

“ஒய்! கொத்த வால் சாவடியும் கிடையாது. கொண்டித்தோப்பும் கிடையாது. பேஷான இடமய்யா இது வந்து பாரும் ஒவ்வொரு வீட்டையும்” என்றார் பஞ்சு.

 

“நமக்கெல்லாம் ஜார்ஜ் டவுனில் தான் ஜாகை ஏற்பாடு செய்யப் பட்டிருக்கிறது என்றாள் மிஸஸ்” மூர்த்தி.

 

கார்கள், ஜார்ஜ் டவுன் ஜாகைக்கு முன்னால் போய் நின்றன.

 

அம்மாஞ்சியும், சாம்பசிவ சாஸ்திரிகளும் காரைவிட்டு இறங்கியதுதான் தாமதம். உடனே ஸ்நானத்துக்குப் புறப்பட்டுவிட்டனர். இருவரும் இன்னொரு காரை எடுத்துக் கொண்டு பொடோமாக் நதிக்கரை ஓரமாகவே துணி துவைப்பதற்கு வசதியாகக் கல் இருக்கிறதா என்று பார்த்தபடியே போய்க் கொண்டிருந்தார்கள்.

 

“அதோ, அதோ ஒரு கல்!” என்றார் சாஸ்திரிகள்.

 

“டிரைவர் ஸார்! நிறுத்துங்கோ!” என்றார்.அம்மாஞ்சி. டிரைவர் காரை நிறுத்தியதும் இருவரும் நதியில் இறங்கிக் கல்லை வாட்டமாகப் புரட்டிப் போட்டுக் கொண்டு வேட்டி துவைக்கத் தொடங்கினர்!

 

அவர்கள் இருவரும் துணி துவைக்கும் சத்தத்தைக் கேட்டுவிட்டுச் சாலையில் போய்க் கொண்டிருந்தவர்கள் வேடிக்கை பார்க்க வந்துவிட்டனர். சற்று நேரத்துக் கெல்லாம் அந்த இடத்தில் பெரும் கூட்டம் கூடி விட்டது. –

 

“வாஷிங்டனில் கூட ரொம்பப் பேர் வேலை வெட்டி இல்லாமல் இருப்பார்கள் போலிருக்கிறதே! நாம் வேட்டி துவைப்பதை ஒரு அதிசயமாகப் பார்த்துக் கொண்டு நிற்கிறார்களே! என்றார் சாஸ்திரிகள்.

 

“ஆமாம்; மெட்ராஸில் கூவம் நதியிலே எருமை மாடுகள் குளிப்பதை நம் ஊர்க்காரர்கள் வாராவதி மேல் கவிந்து கொண்டு வேடிக்கை பார்ப்பதில்லையா? அந்த மாதிரி தான்” என்றார் அம்மாஞ்சி.

 

“மடேர்! மடேர்!” என்று கல் மீது வேட்டியை ஓங்கி அறைந்தார் சாம்பசிவ சாஸ்திரிகள். –

 

“துணியால் ஓங்கி அடித்துக் கல்லை உடைக்கப் பார்க்கிறார்…” என்றார் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்களில் ஒருவர்.

 

சாம்பசிவ சாஸ்திரிகளைச் சுட்டிக்காட்டி, “அவர் குருஷேவ் மாதிரி இருக்கிறார்” என்றார் ஒர் அமெரிக்கர்.

 

“ஒருவேளை குருஷேவ்தான் இப்படி வேஷம் போட்டுக் கொண்டு வந்திருக்கிறாரோ, என்னவோ? “என்றார் இன்னொரு அமெரிக்கர்.

 

“டஃப்ட் இருக்கிறதே!” என்றார் மற்றொருவர்.

 

இதற்குள் அம்மாஞ்சி ஈர வேட்டியைப் பிழிந்து கொசுவி ஒற்றைக் கையால் நாலு தடவை தும்முகிற மாதிரி ‘படார் படார்’ என்று உதறினார். கரையில் கூடியிருந்தவர்கள் அதைக் கண்டு சிரித்தார்கள்.

 

“வேட்டியைப் பிழிந்து உதறுவதைக்கூட ஒரு பெரிய கலை என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்களே இந்த அமெரிக்கர்கள்” என்றார் அம்மாஞ்சி.

 

வேட்டியை செர்ரி மரம் ஒன்றில் கட்டிக் காய வைத்துவிட்டு, இருவரும் நதியில் முங்கிக் குளித்தார்கள்.

 

சாஸ்திரிகள் தண்ணீரில் முங்கி எழுகிறபோதெல்லாம் ‘ஹாரி ஹாரி’ என்று ஹரி நாமத்தைச் சொல்லிக் கோஷித்தார்.

 

கரையில் நின்று கொண்டிருந்த ஹாரி (Harry) என்ற பெயருடையவர்கள் எல்லாம் தங்கள் பெயரைத் தான் சொல்லுகிறார் என்று எண்ணி மகிழ்ந்தார்கள்.

 

குளித்து முடித்ததும், சம்புடத்திலிருந்து விபூதியை எடுத்துக் குழைத்து நெற்றியில் இட்டுக் கொண்டார் அம்மாஞ்சி. ஈரமாக இருந்த விபூதி உலர்ந்தபோது அம்மாஞ்சியின் நெற்றியில் பட்டையாக மூன்று வெள்ளைக் கோடுகள் பளிச்சிட்டன.

 

அதைக் கண்டுவிட்டப் பத்திரிகை நிருபர்கள் பாய்ந்தோடி வந்து, அம்மாஞ்சியையும், சாஸ்திரிகளையும் நிற்க வைத்துப் படமெடுத்துக் கொண்டார்கள்.

 

நெற்றியில் பளிச்சிட்ட மூன்று கோடுகளையும் ஒரு நிருபர் இஞ்ச் டேப்பால் அளந்து கொண்டு போனார்.

 

“டூ இண்டியன் ஸயண்டிஸ்ட்ஸ் டேக் தேர் பாத் இன் ரிவர் பொடோமாக்!”

 

“தி ஸீக்ரெட் ஆப் தி ஸேக்ரட் பவுடர் ! ” என்று பத்திரிகைகளில் வெளியான செய்திகளை அமெரிக்க மக்கள் ஆர்வத்தோடு வாங்கிப் படித்தனர். அம்மாஞ்சியும், சாஸ்திரிகளும் செர்ரி மரத்தில் உலர்த்தியிருந்த வேட்டியை எடுத்துக் கட்டிக் கொள்ளுகிறபோது காமிராக்காரர்கள் அவர்களைத் துரத்திச் சென்றனர்.

 

“அடாடா இந்த நிருபர்கள் நம்மை வேஷ்டி மாற்றிக் கொள்ளக் கூட விடமாட்டார்கள் போலி ருக்கே!” என்றார் சாஸ்திரிகள்.

 

“அது மட்டுமா? டெலிவிஷன்லே வேறே இன்டர்வியூ இருக்காம்” என்றார் அம்மாஞ்சி.

 

“நீர் எள்ளைப் பற்றிப் பேசும்; நான் விபூதியைப் பற்றி ஒரு லெக்சர் அடிச்சுடறேன்” என்றார் சாஸ்திரிகள்.

 

அவர்களிருவரும் ஜாகைக்குத் திரும்பி வந்ததும், “இரண்டு பேரும் எங்கே போய்விட்டீர்கள் இவ்வளவு நேரம்? மணி பன்னிரண்டு ஆகப் போகிறதே… வந்த வேலையைக் | கவனிக்க வேண்டாமா?…” என்று கேட்டார் அய்யாசாமி.

 

“ஸ்நானம் செய்ய பெர்டோமாக் ரிவருக்குப் போயிருந்தோம். அங்கே ஜனங்கள் எங்களைச் சூழ்ந்து கொண்டு விட்டார்கள். அவர்களிடமிருந்து தப்பித்து வருவதற்குள் பெரும் பாடாகிவிட்டது. எள்ளுக்குள் எண்ணெய் இருக்கிறது என்கிற ரகசியத்தைக் கண்டுபிடித்து விட்டேனாம். நல்ல வேளை! எள்ளையே நான்தான் கண்டுபிடித்தேன் என்று சொல்லாமல் விட்டார்களே! ” என்றார் அம்மாஞ்சி.

 

“ஒரு மணிக்கு நாம் எல்லோரும் மிஸஸ் ராக்ஃபெல்லருடன் வெளியே போய் ‘டம்பர்ட்டன் ஓக்ஸ்’, ‘ஸம்மர் ஹவுஸ்’ஆகிய இரண்டு மாளிகைகளையும் பார்த்துவிட்டு வரவேண்டும். ரொம்பப் பெரிய மாளிகையாம். ஒன்றில் பெண் வீட்டுக்காரர்களும், இன்னொன்றில் பிள்ளை வீட்டுக்காரர்களும் இறங்கிக் கொள்ளலாம் என்று மிஸஸ் ராக்ஃபெல்லர் சொல்கிறார்…” என்றார் மூர்த்தி.

 

“ராகு காலத்துக்கு முந்தியே புறப்பட்டு விடலாமா?” என்று கேட்டார் மாமா.

 

“முக்கியமாக அப்பளம் இடுவதற்கும், உலர்த்துவதற்கும் இடத்தைப் பார்த்து முடிவு செய்யணுமே…” என்று கவலைப்பட்டாள் அத்தை.

 

“ஸம்மர் ஹவுஸில் நமக்காக ஹெலிகாப்டர் காத்துக் கொண்டிருக்கிறதாம். மிஸஸ் ராக்ஃபெல்லர், அத்தையையும், பாட்டியையும் ஹெலிகாப்டரில் அழைத்துக் கொண்டு போய், வாஷிங்டனிலுள்ள மொட்டை மாடிகளையெல்லாம் ஒன்றுவிடாமல் காட்டப் போகிறாளாம். எந்த மாடி தேவையானாலும் அந்த மாடியில் அப்பளம் உலர்த்துவதற்கு சர்க்காரிடம் பர்மிஷன் வாங்க முடியுமாம்…” என்றாள் மிஸஸ் மூர்த்தி.

 

“ஹெலிகாப்டரில் ஏரியல் ஸர்வேயா?” என்று கேட்டார் மாமா.

 

“ரொம்ப செளகரியமாப் போச்சு. ஒவ்வொரு மாடியாக ஏறி இறங்கணுமே என்று பயந்து கொண்டிருந்தேன்” என்றாள் அத்தை.

 

பகல் ஒரு மணி இருக்கும். எல்லோரும் கிளம்பி, வழியிலுள்ள தெருக்களையெல்லாம் பார்த்துக்கொண்டே ஸம்மர் ஹவுஸுக்குப் போனார்கள்.

 

“ஜார்ஜ் டவுன் ரொம்ப நன்றாயிருக்கிறது. பேஷான வீடுகள். தெருக்களும் அகலமாயிருக்கின்றன. ஷாப்புக்களும், ஸ்டோர்களும் நிறைய இருக்கின்றன” என்றார் அய்யாசாமி. –

 

“வெற்றிலை பாக்குக் கடைதான் இல்லை…” என்று குறைப்பட்டார் அம்மாஞ்சி.

 

“ஏன்? பொடி மட்டை காலியாகிவிட்டதோ?” என்று கேட்டார் சாஸ்திரிகள்.

 

பேசிக் கொண்டே எல்லோரும் ஸம்மர் ஹவுலை அடைந்தார்கள்.

 

“அடாடா எவ்வளவு பெரிய மாளிகை! மயனே சிருஷ்டித்த மாதிரி அல்லவா இருக்கிறது?” என்று வியந்தார் மாமா.

 

“இந்த இடம் போதுமா?” என்று கேட்டாள் மிஸஸ் ராக்ஃபெல்லர். – .

 

“ஏதேஷ்டம்; முகூர்த்தத்தை இந்த வீட்டில்தான் வைத்துக் கொள்ள வேண்டும்” என்றார் அய்யாசாமி.

 

“வீடா இது? மாளிகை என்று சொல்லும் என்று திருத்தினார் சாஸ்திரிகள்.

 

“மெட்ராஸ் கோவிந்தப்ப நாயக்கன் தெரு சத்திரம் கெட்டுது போங்க! என்றார் அம்மாஞ்சி.

“இதிலே ஒரு ரூமுக்கு இணையாகுமா அது” என்றார் சாஸ்திரிகள்.

“துணி உலர்த்துவதற்குத்தான் கொடியே இல்லை” என்றாள் அத்தை.

 

“கொடி என்றால் என்ன? “வென்று கேட்டாள் மிஸஸ் ராக்ஃபெல்லர்.

 

“Flag” என்று அம்மாஞ்சி தமக்குத் தெரிந்த இங்கிலீஷில் அதை மொழி பெயர்த்துச் சொன்னபோது லல்லியும், பஞ்சுவும் சிரித்துவிட்டு, கொடி என்றால் என்ன என்பதை மிஸ்ஸ் ராக்ஃபெல்லருக்குப் புரியும்படி விளக்கிச் சொன்னார்கள்.

 

“தெருவில் முகூர்த்தப் பந்தல் போடுகிறபோது அந்த ஆட்களிடம் சொல்லி அப்படியே கொடியும் கட்டிக் கொள்ளலாம். இதற்கெல்லாம் ராக்ஃபெல்லர் மாமியைத் தொந்தரவு செய்யக் கூடாது” என்றாள் பெண்ணுக்கு மாமா.

 

“சரி, மாடியில் ஹெலிகாப்டர் ரெடியாயிருக்கிறது. அத்தை, பாட்டி, மிஸஸ் மூர்த்தி, லல்லி நாலு பேரும் வாருங்கள் போகலாம் ” என்று அழைத்தாள் மிஸஸ் ராக்ஃபெல்லர்.

 

வெங்கிட்டுவும் அவர்களோடு தொற்றிக் கொண்டான்.

 

அத்தை, பாட்டி ‘ஜமா’வை ஏற்றிக் கொண்ட ஹெலிகாப்டர் ஜம்மென்று வானில் பறக்கத் தொடங்கியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ராணி மங்கம்மாள் – 5ராணி மங்கம்மாள் – 5

5. பக்கத்து வீட்டுப் பகைமை கட்டுமஸ்தான உடலமைப்பும் அந்த வலிமையை மிகைப்படுத்தி எடுத்துக் காட்டும் கரிய நிறமும் கொண்ட மறவர்சீமை வீரன் ஒருவன் கையில் ஓலையோடு நுழைவாயிலருகே தென்பட்டான்.   மின்னலைப் போல் சரேலேன்று உள்ளே நுழைந்த அவன், “மறவர் நாட்டு

ராணி மங்கம்மாள் – 21ராணி மங்கம்மாள் – 21

21. இஸ்லாமியருக்கு உதவி  தஞ்சைப் படைகளையும், ஷாஜியையும் ஒடுக்குவதற்கு நரசப்பய்யா புறப்பட்டுச் சென்ற தினத்தன்று நல்ல நிமித்தம் என்று நினைக்கத் தக்க வேறொரு நிகழ்ச்சியும் திரிசிரபுரம் அரண்மனையில் நடைபெற்றது.   தஞ்சைக்குப் புறப்பட்டுச் சென்ற ராணி மங்கம்மாளிடம் அரண்மனைச் சேவகன் ஒருவன்

ராணி மங்கம்மாள் – 13ராணி மங்கம்மாள் – 13

13 . கண்கலங்கி நின்றாள்  மருமகளான சின்ன முத்தம்மாளின் உற்சாகமற்ற போக்கு ராணி மங்கம்மாளுக்குக் கவலையளித்தது. அவள் மனம் குழம்பித் திகைப்பு அடைந்தாள். கணவனை இழந்த துயரத்தை மகன் பிறந்த மகிழ்ச்சியில் மறந்து விடுவாள் என்று எதிர்பார்த்து வீணாயிற்று.   சின்ன