Tamil Madhura தொடர்கள் ராணி மங்கம்மாள் – 18

ராணி மங்கம்மாள் – 18

18. சேதுபதியின் சந்திப்பு

    • மதுரைப் பெருநாட்டைச் சேர்ந்தவையும் அப்போது ராணி மங்கம்மாளின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தவையுமான சேலம், கோயமுத்தூர்ப் பகுதிகளைக் கவனித்துக் கொண்டிருந்த சிற்றரசர்களை மெல்ல மெல்ல அடக்கித் தன் வசப்படுத்திக் கொண்டு அப்பகுதிகளின் மூலமாகப் படை எடுத்துத் திரிசிரபுரத்தை முற்றுகையிட்டிருந்தன மைசூர்ப்படைகள். எதிர்பாராத அபாயமாக இது நேர்ந்திருந்தது.

 

    • அப்போது மைசூர் அரசன் சிக்க் தேவராயனின் படைத் தலைவர்களில் மிகவும் சாமர்த்தியசாலியான குமரய்யாவின் தலைமையில் இந்தப் படையெடுப்பு நடந்திருக்கிறது.

 

    • வடக்கே மைசூரிலிருந்து வழி நெடுகிலுமுள்ள சிற்றரசர்களின் ஒத்துழைப்போடு படையெடுப்பு நடந்ததன் காரணமாக மிகவும் இரகசியமாகவே எல்லாக் காரியங்களும் முடிந்திருந்தன.

 

    • குமரய்யாவும், அவனது படைகளும் திரிசிரபுரம் வந்து கோட்டையை வளைத்துக் கொண்டு முற்றுகையிடுகிறவரை அந்தப் படையெடுப்புத் தகவல் பரம இரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.

 

    • இராயசமும் மற்றவர்களும் அந்தத் தகவலைத் தன்னிடம் வந்து கூறியபோது ராணி மங்கம்மாளுக்கு ஓரிரு கணங்கள் அதிர்ச்சியாகத் தானிருந்தது. மங்கம்மாள் அவர்களை வினவினாள்:

 

    • “இப்படிப் பலகாத தூரம் படை நடத்தி வந்து குமரய்யாவும் அவன் படைவீரர்களும் திரிசிரபுரத்தைப் பிடிக்கிறவரை நம் ஒற்றர்களும் ராஜ தந்திரிகளும் தூங்கிக் கொண்டா இருந்தார்கள்?”

 

    • “வழி நெடுகிலும் உள்ள சிற்றரசர்களின் ஒத்துழைப்போடு குமரய்யாவும் அவனுடைய ஆட்களும் திவ்ய தேசயாத்திரை செல்லும் தேசாந்திரிகளைப் போல முன்னேறி வந்து விட்டார்கள். இளவரசரும் சின்னராணி முத்தம்மாளும் அடுத்தடுத்துக் காலமான துயரத்தினாலும் கவலையாலும் நாம் தளர்ந்திருந்தோம். திரிசிரபுரத்திலிருந்து மதுரைக்கு வேறு வந்து விட்டோம்.”

 

    • “இப்படி நடக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.”

 

    • “சில சமயங்களில் எதிர்பார்த்தபடி நடப்பதில்லை. எதிர்பாராதபடி ஏதாவது நடந்து விடுகிறது மகாராணீ!”

 

    • “எதிர்பார்க்க முடிந்த அபாயங்களுக்கு ஆயத்தமாக இருக்க வேண்டியதோடு எதிர்பாராத அபாயங்களுக்கும் ஆயத்தமாக இருக்க வேண்டியது என் கடமை.”

 

    • “உண்மைதான் மகாராணீ! ‘திரிசிரபுரம் கோட்டையை வளைத்து வெற்றி கொள்ளாமல் மைசூருக்குத் திரும்ப மாட்டேன்’ என்று சிக்க தேவராயனிடம் சூளுரை கூறிய பின்பே குமரய்யா படைகளோடு புறப்பட்டிருக்கிறான் என்கிறார்கள். எப்படியோ இது நேர்ந்துவிட்டது. சமாளித்தாக வேண்டும்.”

 

    • “பேசிக் கொண்டிருக்கவோ திட்டமிட்டுக் கொண்டிருக்கவோ நேரமில்லை. உடன் முற்றுகையை எதிர்த்துப் போரிட வேண்டும்” என்றாள் ராணி மங்கம்மாள்.

 

    • மதுரையிலிருந்தும் மற்ற இடங்களிலிருந்தும் படைகள் ஆயத்தமாயின. படைத் தலைவர்கள் போர்க்கோலம் பூண்டனர். படைகள் திரிசிரபுரம் நோக்கி விரைந்தன.

 

    • நல்ல வேளையாக ராணி மங்கம்மாளின் நல்வினைவயத்தால் மலைபோல வந்த துயரம் பனிபோல் நீங்கிற்று.

 

    • குமரய்யா படைகளுடன் திரிசிரபுரத்தைப் பிடிக்க வந்த சமயத்தில் மைசூரை மராத்தியர்கள் எதிர்பாராத விதமாகத் தாக்கவே, குமரய்யாவும் அவனுடன் வந்த பெரும் படையினரும் உடனே மைசூருக்குத் திரும்ப வேண்டியிருந்தது. மைசூருக்குத் திரும்பாத எஞ்சிய வீரர்களைத் திரிசிரபுரம் கோட்டையிலிருந்தவர்களே அடித்துத் துரத்தி விட்டார்கள். இந்தத் தகவல் தெரியச் சில நாட்கள் ஆயின. அதுவரை கவலையோடு இருந்த ராணி மங்கம்மாள் இது தெரிந்ததும் நிம்மதியடைந்தாள்.

 

    • திரிசிரபுரத்திற்கு அனுப்பிய பெரும்படையை வீணாக்காமல் எந்தப் படையெடுப்பிற்காவது பயன்படுத்தியாக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. மைசூர்ப் படைத்தலைவன் குமரய்யாவும், அவனது வீரர்களும் இப்படித் திடீரென்று திரும்பி ஓடுவார்கள் என்று எதிர்பார்க்காததால் பெரும் படையைப் பல திசைகளிலிருந்தும் திரட்டியிருந்த ராணி மங்கம்மாளின் தளபதிகள் அந்தப் படை வீரர்களின் உத்வேகத்தை அப்படியே முடக்கிவிடாமல் உடனே எதற்காவது உபயோகப்படுத்தியாக வேண்டும் என்பது உணரப்பட்டதைத் தெரிவித்தார்கள்.

 

    • படைகள் திரிசிரபுரத்திலிருந்து திரும்பிக் கொண்டிருந்த போதே இங்கே தமுக்கம் ராஜ மாளிகையில் ஆலோசனை நிகழ்ந்தது.

 

    • “அவசரமாக நாலுகால் பாய்ச்சலில் ஓடப் புறப்பட்ட குதிரையைத் தடுத்து நிறுத்தியது போல் ஆகிவிட்டது மகாராணீ! குமரய்யாவின் முற்றுகையைத் தகர்க்க வேண்டுமென்று திரிசிரபுரத்துக்குத் திரட்டி அனுப்பிய படைகள் குமரய்யா மைசூருக்கு ஓட்டமெடுத்து விட்டதால் ஏமாற்றத்தோடு திரும்பி வருகின்றன! திரும்பி வருகிற படைகளுக்கு வேலை கொடுத்தாக வேண்டும்” என்றார் இராயசம்.

 

    • ராணி மங்கம்மாள் யோசித்தாள். இராயசமும் பிரதானிகளும் ராணி என்ன சொல்லப் போகிறாளோ என்று காத்திருந்தனர். ராணி மங்கம்மாள் பேச ஆரம்பித்தாள்.

 

    • “மராத்தியர்கள் மைசூரைத் தாக்கத் தொடங்கியது நல்லதாயிற்று. மைசூருக்கு ஆபத்து வந்திருக்கவில்லையானால் குமரய்யா படைகளோடு திருச்சி முற்றுகையை விட்டுவிட்டு ஓடியிருக்க மாட்டான். குமரய்யா ஓடியதால் இப்போது இந்தப் படைகளுக்கு வேறு ஒரு பொன்னான வாய்ப்புக் கிடைக்கப் போகிறது.”

 

    • “அது என்ன வாய்ப்பு என்பதை மகாராணியார் சொல்லியருள வேண்டும்.”

 

    • “சொல்கிறேன். முன்னோர்களின் காலத்திலேயே திருவாங்கூர் மன்னன் வேண்டாவெறுப்பாக நமக்குத் திறை செலுத்தி வந்தான். இப்போது அதுவும் நின்று போயிற்று. இங்கு இன்று நிலவுகின்ற வலிமையற்ற அரசியல் சூழ்நிலையைத் தனக்குச் சாதகமானதாகக் கருதிக்கொண்டு நமக்குச் செலுத்திக் கொண்டிருந்த திறைப் பணத்தை நிறுத்திவிட்டான். பெண் ஆள்வதால் மதுரைச் சீமையை எப்படி வேண்டுமானாலும் ஏமாற்றலாம் என்ற நினைப்பைப் பொறுத்துக் கொள்வதற்கில்லை! திருவாங்கூர் மேல் படையெடுத்தாவது திறை வாங்கியாக வேண்டும்.”

 

    • “அருமையான யோசனை. ரவிவர்மன் மேல் படையெடுத்துச் சென்று அவனுக்குப் பாடம் புகட்டுவதன் மூலம் நம்மை வலிமை குறைந்தவர்களாக நினைக்கும் மற்றவர்களுக்கும் எச்சரிக்கை செய்தது போலிருக்கும்! இந்தப் படையெடுப்பு யோசனை சமயோசிதமானது.”

 

    • “சமயோசிதமானது மட்டும் இல்லை! இராஜதந்திரம் நிறைந்தது. இதைப் பார்த்த பின்பாவது மைசூரை ஆளும் சிக்க தேவராயனுக்குத் திரிசிரபுரம் கோட்டையைப் பிடிக்கும் பேராசை தோன்றாமல் இருக்கட்டும். நம்மைக் குறைத்து மதிப்பிடுகிறவர்களுக்கு நாம் யாரென்பது புரியட்டும்.”

 

    • – ராணி மங்கம்மாளின் கட்டளைப்படியே திரிசிரபுரத்திலிருந்து திரும்பிய படைகள் நேராகத் திருவாங்கூரை நோக்கித் திசை திரும்பின.

 

    • உடனே திரிசிரபுரம் கோட்டைப் பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டன. வீரர்களின் எண்ணிக்கை அதிகமாயிற்று.

 

    • மதுரைப் பெருநாட்டின் ஆட்சி வலிமையும், ஆளும் திறமையும் அக்கம் பக்கத்து அரசர்களுக்கும், நாடுகளுக்கும் நன்றாகப் புரியும்படி செய்யப்பட்டது. எல்லாப் பெருமைகளும் ஒரு பக்கம் இருந்தாலும் ஒரு பின்னிரவில் கண்ட அந்தக் கெட்டச் சொப்பனம் முறிந்த முள்ளாக ராணியின் மனத்திற்குள் உறுத்திக் கொண்டே இருந்தது. சோதிடர்களையும் பெரியவர்களையும் கூப்பிட்டுக் கனவை அதிகமாக விவரிக்காமல் பரிகாரம் செய்ய மட்டும் வழிகளைக் கேட்டறிந்தாள். பரிகாரங்களைச் செய்தாள் மங்கம்மாள்.

 

    • சில மாதங்களில் தெற்கே சென்ற படை பெருந்திறைப் பொருளுடனும், வெற்றியுடனும் திரும்பியது. “மகாராணீ! இம்முறை ரவிவர்மனுக்கும், அவனுடைய அமைச்சர் முறையினரான எட்டு வீட்டுப் பிள்ளைமார்களுக்கும் ஒற்றுமை இல்லை. அதனால் நமது வெற்றி மிகவும் எளிதாகிவிட்டது. எட்டு வீட்டுப் பிள்ளைமார்களின் விரோதம் நீடிக்கிறவரை நம் திறைப்பணம் ஒழுங்காகக் கிடைக்கும். எட்டு வீட்டுப் பிள்ளைமார்களை அழித்து ரவிவர்மன் கை ஓங்கினாலோ, எட்டு வீட்டுப் பிள்ளைமார்களும் அவனும் ஒற்றுமை அடைந்து விட்டாலோ ஒரு வேளை மறுபடி நம்மைப் புறக்கணிக்கும் துணிவு அவர்களுக்கு வரலாம்!” என்று படைத் தளபதி திருவாங்கூர் நிலைமையை விவரித்தான்.

 

    • மங்கம்மாள் தன் காலத்தில் மதுரைப் பெருநாட்டுக்குத் திறைப்பணம் செலுத்தாத மறவர்களைப் பற்றி நினைத்த போது கிழவன் சேதுபதி முதலில் நினைவிற்கு வந்தார். மறவர் நாட்டைச் சுயாதீனமாக ஆளத் தொடங்கியிருந்தார் அவர்.

 

    • சேதுபதி மேல் படையெடுப்பதைவிட முதலில் ஓர் எச்சரிக்கை ஓலை அனுப்பிப் பார்க்கலாம் என்று ராணி மங்கம்மாள் நினைத்தாள்.

 

    • இராயசத்தையும், பிரதானியையும் கலந்து பேசி ஓர் எச்சரிக்கைக் கடிதம் அனுப்பினாள். சேதுபதியிடமிருந்த சில நாட்களில் ஒரு தூதன் மூலம் வாய் வார்த்தையாகப் பதில் கிடைத்தது.

 

    • “மன்னர் சேதுபதி விரைவில் கூடல்மாநகருக்கு வருவார். அப்போது தங்களைக் கண்டு பேசுவார்.”

 

    • தான் எழுதி அனுப்பிய ஓலையை மதித்துப் பதில் ஓலைகூட எழுதியனுப்பாமல் சேதுபதி தட்டிக்கழிப்பது புரிந்தது. சேதுபதி மதுரை நாட்டையோ, மங்கம்மாளின் ஆட்சியையோ இலட்சியம் செய்ததாகவே தெரியவில்லை.

 

    • படையெடுக்கலாம் என்றால், ‘சேதுபதி விஷயத்தில் சிறிதும் அவசரப்படக்கூடாது!’ என்று இராயசமும் பிரதானிகளும் எச்சரித்தனர். பழைய உதாரணங்களை எடுத்துக் காட்டினர்.

 

    • சொல்லியனுப்பியபடி சில நாட்களில் சேதுபதி மதுரைக்கு வந்தார். லவாயண்ணலையும் அங்கயற்கண்ணம்மையையும் தரிசனம் செய்து மகிழ்ந்தார். பின்பு தன் பரிவாரங்கள் புடைசூழ ஒரு பேரரசன் மற்றொரு பேரரசியைச் சந்திப்பதுபோல வந்து ராணி மங்கம்மாளைச் சந்தித்தார்.

 

    • அப்போது ராணி மங்கம்மாளோடு இராயசமும், பிரதானிகளும் உடனிருந்தனர். சேதுபதி வழக்கம் போல் பழகினார் எனினும் அதில் ராஜ தந்திரம் இருந்தது. அழுத்தம் இருந்தது. பணிவது போல் பணியாமை இருந்தது.

 

    • மதுரை நாட்டுக்குத் தான் எந்த விதத்திலும் கட்டுப் பட்டிருப்பதாகவோ, திறைப்பணம் செலுத்த வேண்டிய கடமை இருப்பதாகவோ காட்டிக் கொள்ளாமல் உரையாடினார் அவர்.

 

    • “மீனாட்சியையும், சொக்கரையும் தரிசித்து அதிக நாளாயிற்று அம்மா! தரிசித்துவிட்டுப் போகலாம் என்று வந்தேன்.”

 

    • “இந்த வயதான காலத்தில் இப்படிப் பிரயாணங்கள் உங்களுக்கு ஒத்துக் கொள்கிறதா?”

 

    • “உங்களைப் போல் யாராவது இப்படி நினைவூட்டிப் பேசினால்தான் எனக்கு வயதாகியிருப்பதே தெரிகிறது. என்னைப் பொறுத்தவரை என் வயதே எனக்கு நினைவிருப்பதில்லை.”

 

    • “வயது ஒன்றுதானா? உங்களுக்குப் பல விஷயங்கள் மறந்து விடுகின்றன. நினைவிருப்பதில்லை…”

 

    • “எனக்கா? நான் சிலவற்றை மறப்பதில்லை; சிலவற்றை நினைப்பதே இல்லை. நினைப்பதும் மறப்பதும் என்னை மீறி எனக்குள் நடக்காது.”

 

    • கிழவன் சேதுபதியின் பதிலில் உறுதியும் உரமும் உள்ளடங்கிய ஆத்திரமும் ஒலித்தன். எப்படி முயன்றும் தன் மனத்தாங்கலை அந்தக் கிழட்டுச் சிங்கத்திடம் தெரிவிக்க முடியவில்லையே என்று தவித்தாள் அவள். ராணி மங்கம்மாள் திறைப்பணத்தை நினைவூட்டி ஜாடைமாடையாகப் பேசிய எந்தப் பேச்சுக்குமே பிடிகொடுக்காமல் பேசினார் சேதுபதி. புரிந்து கொண்டே அதைச் சாதுர்யமாகத் தவிர்த்தார்.

 

    • “உங்கள் மனத்தில் பல குழப்பங்கள் இருப்பது தெரிகிறது. ஒரு முறை புறப்பட்டு வந்து சேதுஸ்நானம் செய்து இராமேஸ்வர தரிசனம் பண்ணினால் எல்லாம் சரியாகிவிடும்! சேதுநாட்டின் அரசன் என்ற முறையில் உங்களை அழைப்பதில் மகிழ்கிறேன்” என்று தன்னுடைய சுயாதீனத்தை மறைமுகமாக வற்புறுத்தியே பேசிக் கொண்டிருந்தார் சேதுபதி.

 

    • ஆயிரம் இருந்தாலும் விருந்தினராக வந்திருக்கும் ஒரு முதியவரிடம் எப்படிக் கண்டிப்பாகக் கடிந்து பேசுவது என்று புரியாமல் திணறினார்கள் மங்கம்மாளும் இராயசமும்.

 

    ஆனால் சேதுபதி எதற்கும் திணறவோ திகைக்கவோ செய்யாமல் நிதானமாகவே பேசினார், பழகினார். திறை கேட்கும் நாட்டு மகாராணியிடம் திறை தரமறுக்கும் உறுதியுடன், அதை இனிமையான உபசாரம் பூசிய மாற்று வார்த்தைகளால் மெல்ல மெல்லச் சொல்லிக் கொண்டிருந்தார் கிழவன் சேதுபதி.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

கடவுள் அமைத்த மேடை – 16கடவுள் அமைத்த மேடை – 16

ஹாய் பிரெண்ட்ஸ், போன பகுதிக்கு கமெண்ட்ஸ் போட்ட அனைவருக்கும் நன்றிகள். இன்றைக்கு சிவபாலனின் பிளாஷ்பேக் முடிகிறது. இந்தப் பகுதி உங்களுக்குப் பிடிக்கும் என்று நம்புகிறேன். சைலென்ட் ரீடர்ஸ் இப்போதாவது மௌனத்தை கலைக்கலாமே? கடவுள் அமைத்த மேடை -16 கதையில் வந்த பாடல்

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 27ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 27

27 – மனதை மாற்றிவிட்டாய் மாலையில் அனைவரும் வீட்டில் இருக்க ஆதி உள்ளே நுழைந்தவுடன் அவனுக்கும் சிற்றுண்டியை கொடுத்துவிட்டு மதி “பாட்டி, தாத்தா பேசுனாங்க ராஜா… ஊருல திருவிழா வருதாம்… எல்லாரும் இருக்கோம். நீயும் வந்திருக்க..அதனால 3 நாள் அங்க வரச்சொல்றாங்க.

கணபதியின் ‘காதல் யுத்தம் ‘ – 12கணபதியின் ‘காதல் யுத்தம் ‘ – 12

கவிதாவைக்  கடலில் தூக்கி வீசிவிட்டு உள்ளே வந்தான் அந்த உயரமனிதன். “சார் சுறாவுக்கு இரை போட்டாச்சு” பீட்டரின் கண்களில் ஒரு மகிழ்ச்சி தெரிந்தது. ‘இவன் தன்னை பயமுறுத்த அவ்வாறு சொல்கிறான் ‘ என நினைத்திருந்த விஷ்ணுவிற்கு இந்த செய்தி இதயத்தை நிறுத்தியது போல