Tamil Madhura தொடர்கள் ராணி மங்கம்மாள் – 6

ராணி மங்கம்மாள் – 6

6. கிழவன் சேதுபதியின் கீர்த்தி 

    • ரங்ககிருஷ்ணன் முற்றிலும் எதிர்பாராத பகுதியிலிருந்து சலனமும் தயக்கமும் ஏற்பட்டிருந்தன. திரிசிரபுரம் கோட்டையிலும், மதுரைக்கோட்டையிலும் இருந்த படைவீரர்களில் பெரும் பகுதியினர் மறவர் சீமையைச் சேர்ந்தவர்கள். வெகு தொலைவில் இருந்து வந்து ஒரு புதிய நிலப்பரப்பில் சாம்ராஜ்யத்தை நிறுவ நேர்கிற அனைவருக்கும் இது ஏற்படக்கூடியது தான் என்று தோன்றியது. அரசு என்கிற மாளிகையைத் தாங்கும் நான்கு இன்றியமையாத தூண்களில் ஒன்றாகிய படை உள்நாட்டு மக்களைக் கொண்டதாகத்தான் அமைய முடியும். அமைந்திருந்தது.

 

    • ஒரு படையில் உட்பகை உண்டாகிவிட்டாலோ, உண்டாவது போலத் தோன்றினாலோ, அது எள்ளை இரண்டாகப் பிளந்தது போலச் சிறியதானாலும் கூடப் பெரிதும் ஆபத்தானது. அப்படி ஆபத்தின் அடையாளங்கள் இப்போது தெரியத் தொடங்கியிருந்தன. வெளிப்படையாக அது தனக்குத் தெரிந்ததை ரங்ககிருஷ்ணன் யாரிடமும் காட்டிக் கொள்ளவில்லை என்றாலும் மனதில் அந்தச் சலனம் ஏற்பட்டுவிட்டது. இதைக் கருத்திற் கொண்டுதான் தாய் ராணி மங்கம்மாளும், இராயசம் அச்சையாவும் கிழவன் சேதுபதியைச் சிக்கலான எதிரி என்று வர்ணித்தார்களோ என்று கூட இப்போது அந்தத் தொடருக்குப் புது விளக்கமே தோன்றியது அவனுக்கு.

 

    • தன்னுடைய உள்நாட்டு மக்களிடமும் தன் நாட்டிலும் முழுநம்பிக்கைக்குரியவராகக் கீர்த்தி பெற்றிருக்கும் ஒருவரை வெளியேயிருந்து படையெடுத்து வந்து செல்வது எத்தனை சிரமமான காரியமாயிருக்கும் என்பது மெல்ல மெல்லப் புரிந்தது. தீர்க்க தரிசனம் பிடிபடாத வரை அரசியல் பொறுப்புகள் சிரம சாத்தியமானவையாகவே இருக்குமென்று தோன்றியது. அரசியலுக்குத் தீர்க்க தரிசனம் மிகமிக முக்கியமென்றும் புரிந்தது.

 

    • மறுநாள் அதிகாலையில் படைகள் பயணத்தைத் தொடர்ந்தன. திட்டமிட்டபடி எல்லாமே நடந்தன. ஆனால் பெரிய அதிசயம் என்னவென்றால் மறவர் சீமை எல்லைக்குள் நுழைந்ததும் அங்கே இவர்களை எதிர்த்து யாரும் சீறிப்பாயவில்லை. இலட்சியம் செய்யவுமில்லை. “புதிதாகப் பட்டமேற்றுள்ள சின்ன நாயக்கர் படை பரிவாரங்களோடு தரிசனத்துக்காகவும் தீர்த்தமாடிப் புண்ணியம் அடைவதற்காகவும் இராமேஸ்வரம் போகிறார் போலிருக்கிறது” என்பதுபோல் பேசிக் கொள்ளவும் செய்தார்கள். ரங்ககிருஷ்ணன் மனதை இது மிகவும் உறுத்திற்று.

 

    • தங்கள் சீமைக்குள் தங்களை யாரும் எதுவும் செய்து விடமுடியாது என்ற மிதப்பில் அவர்கள் இருப்பதாகப்பட்டது. ஆள்கட்டும் ஒற்றுமையும், அந்நியருக்கு விட்டுக் கொடுத்துத் தளர்ந்துவிடாத உறுதியும், எதற்காகவும் தங்களைச் சேர்ந்தவரை அந்நியரிடமோ, வெளியாரிடமோ காட்டிக் கொடுத்துவிடாத இயல்பும், மறவர் சீமையின் தனித்தன்மைகள் என்பதை ரங்ககிருஷ்ணன் அறிந்திருந்தான். எவ்வளவு பெரிய எதிர்ப்பையும் பகையையும் சமாளிக்கக்கூடிய நிலைமையை இந்த ஆள்கட்டும் ஒற்றுமையுமே அவர்களுக்கு அளித்திருந்தன என்பதும் அவனுக்குப் புரிந்திருந்தது. ஒரு முறை இராமேஸ்வரத்தில் தரிசனம் செய்ய வந்திருந்த சேர அரசன் ஒருவன் திரும்பும் போது சேதுபதியைக் காண இராமநாதபுரம் வந்து ஏழுநாள் காத்திருக்க வேண்டியதாயிற்று. பேரரசனாகிய சேரனே சிற்றரசனாகிய சேதுபதியைச் சந்திக்க ஏழுநாள் காத்திருக்க நேர்ந்தது. இராமேஸ்வர தரிசனத்தின் பயன் சேதுபதியையும் கண்டு முடித்தாலொழியப் பூர்த்தியாகாது என்ற ஐதீகத்தால் சேரன் பொறுமையாக ஏழுநாள் தங்கிக் காத்திருந்து, சேதுபதியையும் பார்த்துவிட்டுத் திருவனந்தபுரம் புறப்பட்டுச் சென்றான் என்பதைத் தனது தாய் சொல்லிக் கேள்விபட்டிருந்தான் ரங்ககிருஷ்ணன்.

 

    • சிவகங்கையைக் கடந்து மானாமதுரை ஊர் எல்லைக்குள் புகுந்த பின்னும் ரங்ககிருஷ்ணனையோ, அவனது படைகளையோ, யாரும் பொருட்படுத்தவில்லை. ‘ஊர் எல்லையிலோ, எதிர்பார்த்த இடங்களிலோ சேதுபதியின் படை வீரர்கள் எதிர்ப்பதற்குத் திரண்டு நிற்கவில்லை. எங்கும் வாழ்க்கை எப்போதும் போல் சகஜமாயிருந்த்து.

 

    • எதிரியின் பகைமை அல்லது கோபத்தைக் கூடப் பொறுத்துக் கொண்டு விடலாம். ஆனால் அலட்சியத்தையோ அவமதிப்பையோ பொறுத்துக் கொள்வதென்பது முடியாத காரியம். கிழவன் சேதுபதி குமாரப்ப பிள்ளையைக் குடும்பத்தோடு கொன்றதாகவும், மறவர் நாட்டைச் சுவாதீனப் பிரகடனம் செய்ததற்காகவும் தன்னைக் கண்டித்து யாரேனும் படையெடுத்து வரமுடியும் என்று எதிர்பார்த்து ஆயத்தமாயிருப்பதாகவே தெரியவில்லை. ஒரு படையெடுப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கும் போர்க்கால ஆயத்தங்களோ அவசரங்களோ பரபரப்புகளோ எங்கும் இம்மியளவுகூடத் தென்படவில்லை என்பது ஏமாற்றமளித்ததோடு போகாமல் எரிச்சலும் ஊட்டியது.

 

    • ரங்ககிருஷ்ணன், ‘முத்துராமலிங்க பூபதி’ என்னும் தனது முன்னணிப் படைத்தலைவன் ஒருவனை அழைத்துப் பேசிப் பார்த்தான். அந்தப் படைத்தலைவனும் மறவர் சீமையைச் சேர்ந்தவன் தான்.

 

    • “ஒரு பாவமும் அறியாத மக்களை நாமாக வலிந்து தாக்கக் கூடாது! எங்கே நம்மை எதிர்கொண்டு மோதி எதிர்க்கிறார்களோ, அங்கேதான் நாம் போரைத் தொடங்கவேண்டும் மகாராஜா! இல்லாவிட்டால் தீவட்டிக் கொள்ளைக்காரர்களுக்கும் நமக்கும் வித்தியாசமில்லாமல் போய்விடும்” என்றான் முத்துராமலிங்க பூபதி. ரங்ககிருஷ்ணன் அவனைக் கேட்டான்.

 

    • “எங்கேயும் யாரும் நாம் படையெடுத்து வந்திருப்பதைப் பற்றிய பிரக்ஞையோ, கவலையோ, அக்கறையோ, காட்டுவதாகத் தெரியவில்லையே! வயல்களில் உழவர்கள் நிர்ப்பயமாக உழுது கொண்டிருக்கிறார்கள். வீடுகளில் குழந்தைகளைத் தாய்மார்கள் தாலாட்டும் பாடல்கள் இனிதாக ஒலிக்கின்றன. ஏற்றம் இறைப்பவர்கள் பாடும் ஏற்றப்பாட்டு நம் செவிகளில் ஒலித்த வண்ணமாயிருந்தன. வயல்களில் களை எடுக்கும் பெண்களின் குரவை ஒலி விண்ணை எட்டுகிறது. களத்து மேடுகளில் நெற்குவிப்போர் உல்லாசமாகப் பாடியபடி வேலைகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். தெருக்களில் போவோர் வருவோரும், சாவடிகளில் அமர்ந்து வம்புபேசுவோரும் கவலையின்றி உரையாடிக் கொண்டிருக்கிறார்கள். மரத்தடிகளிலும் வீட்டு முற்றங்களிலும் தாளலயத்தோடு உரலில் நெல் குத்தும் பெண்கள் வள்ளைப்பாட்டு பாடிக் கொண்டிருக்கிறார்கள். பயத்தையும் போர் வந்திருப்பதையும் இவர்களுக்கு நான் எப்படித்தான் உணர்த்துவது?”

 

    • “யாரோ சொல்லித் தூண்டி இப்படி இருக்கச் சொல்லியதால் இவர்கள் இப்படி இருக்கவில்லை மகாராஜா! இது இம்மக்களின் இயல்புகளில் ஒன்று”.

 

    • முத்துராமலிங்க பூபதியின் இந்த பதிலைக் கேட்டுச் சந்தேகப்பட்டு அவன் முகத்தை ஊடுருவிப்பார்த்தான் ரங்ககிருஷ்ணன். தனது சந்தேகத்தைக் கூட அந்த முரட்டு மறவன் புரிந்து கொள்ளவில்லை என்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ரங்ககிருஷ்ணன் தன் மனத்தில் அப்போது பெருகும் தாழ்வு மனப்பான்மையைத் தவிர்க்க முடியாமல் தவித்தான். போரைத் தொடங்குவதற்கு முன்பே எதிரில் கூட வராமலே தன் எதிரியின் மனத்தில் தாழ்வு மனப்பான்மையை உண்டாக்கிவிட்ட அந்தக் கிழட்டுச்சிங்கம் இரகுநாத சேதுபதியின் மேல் ஆத்திரம் ஆத்திரமாக வந்தது அவனுக்கு. அவன் மனநிலை புரியாமல் “இந்த இராமநாதபுரம் சீமைக்காரர்களுக்குச் சொல்லிக் கொடுத்தாலும் பயமும் கலக்கமும் என்னவென்று புரியவைப்பது சிரமம் மகாராஜா!” என்றான் முத்துராமலிங்க பூபதி. நிஷ்களங்கமாக அவன் இப்படிக் கூறியவுடன், ‘நீ இந்தச் சீமையைச் சேர்ந்தவன் என்ற திமிரில் பேசுகிற பேச்சா இது?’ என்று சுடச்சுடக் கேட்க வேண்டும் போலிருந்தது ரங்ககிருஷ்ணனுக்கு. வாய் நுனி வரை வேகமாக வந்துவிட்ட அந்த வார்த்தைகளைக் கேட்டுவிடாமல் சிரமப்பட்டு அடக்கிக் கொண்டான்.

 

    • இன்னும் பொழுது சாயவில்லை என்றாலும் மானா மதுரையிலேயே அவர்கள் தங்கினார்கள். மறவர் நாட்டு எல்லைப்பகுதிக்கு அப்பால் நள்ளிரவுத் தங்கலை வைத்துக் கொள்வதற்குப் பதில் மானாமதுரையிலேயே தங்கிக் கொண்டு, தான் படையோடு வந்திருப்பதை ஒரு குதிரை வீரன் மூலம் இராமநாதபுரத்திலுள்ள சேதுபதிக்கு முன் தகவலாகச் சொல்லி வர அனுப்பலாமென்று தீர்மானித்து அதன்படி செய்திருந்தான் ரங்ககிருஷ்ணன்.

 

    • போய் வருகிற வீரன் திரும்பி, என்ன தகவல் கொண்டு வருகிறானோ அதற்கேற்ப மறுநாள் முடிவு செய்யலாமென்று ரங்ககிருஷ்ணன் அபிப்பிராயம் கொண்டிருந்தான். எதிர்ப்பே இல்லாத பிரதேசத்திற்குள் படை நடப்பைத் தொடருவதா கூடாதா என்று குழம்பியிருந்தது அவனுக்கு.

 

    • நிலவுகிற இந்த அமைதி சகஜமானதா, தந்திரமானதா என்று வேறு புரிந்து கொள்ள முடியாமல் இருந்தது. ஓர் எதிர்ப்பும் எங்கும் இராதென்று நினைத்துப் படையெடுத்து வருபவர்களை நாட்டுக்கு உள்ளே வெகுதூரம் வரவிட்டுக் கொண்டு பாதியில் மடக்கித் தாக்குவதற்குச் சேதுபதி சதி செய்கிறாரோ? என்று அவனுக்குச் சந்தேகமாயிருந்தது. நிலைமை கிணற்றில் கல்லைப் போட்டதுபோல் இருந்தது. எதுவுமே புரியவில்லை. இராமநாதபுரத்துக்கு நேரில் போயிருக்கும் குதிரை வீரன் திரும்பினால் ஒரு வேளை ஏதாவது விவரம் புரியலாம். அவன் திரும்புகிற வரை மேற்கொண்டு எதுவும் செய்வதில்லை என்று அந்தரங்கமாக முடிவு செய்து கொண்டு ரங்ககிருஷ்ணன் மானாமதுரையிலேயேத் தங்கி இருந்தான்.

 

    • அன்று பொழுது சாயும் நேரத்துக்கு முன் ஊர் மக்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்று யாருக்கும் தெரியாமல் தானே அறிந்து வரச் சென்றான் அவன். ஊரிலிருந்து சற்று ஒதுக்குப்புறமாக இருந்த மறவர் சாவடி ஒன்றருகே ஒரு மரத்தடியில் இரண்டு மறவர்குலப் பெண்கள் நெல்லுக்குத்திக் கொண்டிருந்தார்கள்.

 

      • “ரகுநாத சேதுபதி

 

      •       மகராசன் சீமையிலே

 

      • மாதமும்மாரி பெய்யுதுன்னு

 

      •       சுகபோக வாழ்க்கையைச்

 

      • சொல்லுங்கடி பெண்டுகளா!

 

      •       இகபர சௌக்கியத்துக்கு

 

      • ரகுநாத சேதுபதி

 

      •       ஏதும் கவலை இல்லாத

 

      • ராஜ்யத்தின் கீர்த்திகளை

 

      •       இதமாகப் பாடுங்கடி இந்த

 

      • சுகபோக வாழ்க்கையைச்

 

      •       சொல்லிக் குத்துங்கடி”.

 

    • என்று அவர்கள் பாடிக் கொண்டிருந்த இனிய குரலில் ரங்ககிருஷ்ணனனே ஓரிரு கணம் தன்னை மறந்து சொக்கிப் போய் விட்டான். வைரம் பாய்ந்த கருந்தேக்கில் இழைத்து இழைத்து மெருகேறியது போன்ற அந்தப் பெண்களின் கட்டான உடலழகும் ஒன்றோடொன்று போட்டியிட்டன. அவர்களது வள்ளைப் பாட்டில் இருந்த கிழவன் சேதுபதியின் கீர்த்தியைக் கேட்டபோது ஐந்தாறு வயதுச் சிறுவனாக இருந்த காலை, தாய் ராணி மங்கம்மாளுடன் தான் இராமேஸ்வரம் சென்றிருக்கையில் பார்த்திருந்த அந்தச் சிங்கம் போன்ற தோற்றத்தை உடைய கம்பீரமான ஆகிருதியை நினைவில் ஒன்று கூட்டிப் பார்க்க முயன்றான் ரங்ககிருஷ்ணன்.

 

    • அந்த நினைப்பே ஒரு சிம்ம சொப்பனமாக இருந்தது. மலை உயர்ந்து எதிரே வந்து நின்றது போன்ற அந்தத் தோற்றமும் வீரகம்பீரத்தை எடுத்துக் காட்டிய வளமான மீசைகளும், கூரிய விழிப்பார்வையும் பாறை போல் பரந்த மார்பும் வலிய பருத்த தோள்களுமாகக் கிழவன் சேதுபதியின் காட்சி மனக்கண்ணில் படர்ந்தது. ‘மறவர் சீமை அவரை வீரவணக்கம் செய்து கொண்டிருந்தது. மறவர் சீமையின் ஏழைப் பெண்களுக்கெல்லாம் அரண்மனைச் செலவில் திருமணம் செய்து உதவியதன் மூலமாகத் தெற்கத்திச் சீமையில் கன்னியாகுமரி அம்மனைத் தவிர வேறு குமரிப்பெண்ணே இனிமேல் கல்யாணத்திற்கு மீதமில்லை என்கிறார்போலச் செய்து விட்டார் சேதுபதி என நாட்டில் அவருக்கு ஒரு புகழும் ஏற்பட்டிருந்தது. அந்த மரத்தடியில் உலக்கையால் நெல் குத்தும் பெண்கள் மேலும் தங்களுக்குள் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்று கேட்டான் ரங்ககிருஷ்ணன்.

 

    • “எந்த ராசா எந்தப் பட்டணம் போனா என்னடி அம்மா? நம்ம சேதுபதி மகராசன் தயவுலே நமக்கு ஒரு கொறையும் வராதுடீ வேலம்மா.”

 

    • “அது மட்டுமாடீ? தெற்கத்திச் சீமையிலே எல்லா ராசாமாரும் நம்ம சேதுபதி பேரைச் சொன்னாலே நடுங்கறாகளாம்டீ! மங்கம்மா ராணி கூட ‘நீங்க கப்பம் கட்டாட்டியும் போகுது எங்க ராச்சியத்தோட சிநேகிதமா இருந்தாலே போதும்’னு நம்ம சேதுபதி ராசாகிட்டச் சொல்றாளாம். உனக்குத் தெரியுமாடீ சேதி?”

 

    • ரங்ககிருஷ்ணன் அங்கிருந்து தற்செயலாகப் புறப்படுவது போல் மெல்ல மெல்ல மேலே நகர்ந்தான். சேதுபதியை எதிர்க்கவும் எதிர்க்க நினைக்கவுமே ஈரேழு பதினாங்கு புவனங்களிலும் ஆட்கள் இல்லை இருக்கமுடியாது என்கிற அசைக்க முடியாத தன்னம்பிக்கையோடு அந்த மறவர் சீமை மக்கள் இருக்கிற நிலைமையை அவ்வுரையாடலிலிருந்து புரிந்து கொள்ள முடிந்தது. இப்படித் திடமனமும் நம்பிக்கையும், எதற்கும் கலங்காத துணிவும் உள்ள மக்களே அவர்களை ஆள்கிறவனுக்கு ஒரு வரப்பிரசாதம் அல்லவா? கிழவன் சேதுபதிக்கு அப்படி மக்கள் வாய்த்திருந்தார்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல விளங்கியது.

 

    • அந்தி மாலை வந்தது. இரவும் வந்தது. நள்ளிரவும் கழிந்தது. இராமநாதபுரம் போன குதிரைவீரன் இன்னும் திரும்ப வரவில்லை. ரங்ககிருஷ்ணனின் குழப்பம் அதிகமாகியது. போன தூதனைச் சேதுபதியோ சேதுபதியின் ஆட்களோ பிடித்து வைத்துக் கொண்டு இருப்பார்களோ என்று கூடத் தோன்றியது. முந்திய இரவைப் போலவே அன்றும் ரங்ககிருஷ்ணனால் உறங்க முடியவில்லை. தூதனைப் பிடித்து வைத்துக் கொண்டதுமின்றி எந்த நேரத்திலும் எந்த திசையிலிருந்தும் சேதுபதியும் மறவர் சீமைப் படைகளும் அந்த நள்ளிரவில் தங்களைத் தேடி வந்து தாக்கக்கூடும் என்ற பயமும் ரங்ககிருஷ்ணனுக்கு இருந்தது. ஆனால் அவன் பயந்தபடி எதுவுமே நடக்கவில்லை.

 

    • பொழுது விடிவதற்குச் சில நாழிகைகள் இருக்கும்போது தொலைவிலிருந்து பாசறையை நெருங்கிவரும் ஒற்றைக் குதிரையின் குளம்பொலி கேட்டது. போனவன் திரும்பி வந்திருந்தான்.

 

    • ரங்ககிருஷ்ணனே ஆவல் மிகுதியினால் பாசறைக் கூடாரத்திலிருந்து வெளியே வந்து அந்த வீரனை எதிர்கொண்டு நின்றான்.

 

    • “சேதுபதியைப் பார்த்தாயா? என்ன சொன்னார்?”

 

    • “ஆன மட்டும் முயன்றேன். அவரைப் பார்க்க முடியவில்லை. ஊரில் இருக்கிறாரா, இல்லையா என்பதைக் கூட அறிய முடியவில்லை. சிலர் திருப்புல்லாணி போயிருக்கிறார் என்றார்கள். சிலர் உத்திரகோசமங்கை போயிருப்பதாகச் சொன்னார்கள். வேறு சிலர் இராமேஸ்வரம் போயிருக்கிறார் என்றார்கள்.”

 

    • “நீ நம்மிடமிருந்து வந்திருக்கும் தூதன் என்பதைக் கூறிய பின்புமா அந்த நிலை?”

 

    • “ஆம் அரசே! இந்த ஊர் எப்படி அமைதியாகப் போர்க் கவலையின்றி இருக்கின்றதோ இதே போல் தான் இராமநாதபுரமும் இருக்கின்றது. யாருமே போரைப் பற்றிக் கவலைப் படவில்லை.”

 

    • “நான் படையெடுத்து மானாமதுரை வந்து தங்கியிருக்கிறேன் என்பதையாவது அவர்களுக்குத் தெரிவித்தாயா?”

 

    • “சேதுபதியின் மாபெரும் அரண்மனையில் என்னிடம் அதைப் பொருட்படுத்திக் கேட்க யாருமில்லை.”

 

    • “திமிர் அதை ஒடுக்கியே ஆக வேண்டும். வேறு வழியில்லை.”

 

    • “இந்தப் படையெடுப்பால் எதுவும் பாதிக்கப்பட்டு விடமாட்டோம் என்பது போல் ஜனங்களும், அரண்மனையிலுள்ளவர்களும் மிதப்பாக இருக்கிறார்கள், அரசே! அவர்கள் நம்மை எதிர்ப்பதற்குத் தங்கள் படைகளைக் கூட ஆயத்தம் செய்யவில்லை.”

 

    • “சேதுபதி நம்மைத் தமது எதிரியாகக் கூட அங்கீகரிக்க மாட்டார் போலிருக்கிறதே?” என்று கண்களில் சிவப்பேறிச் சினம் ஜொலிக்கத் தனக்குத்தானே சொல்லிக் கொண்டான் ரங்ககிருஷ்ணன்.

 

    கடுமையான மல்யுத்தத்தில் அந்த யுத்தத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான ஜனங்களுக்குப் புரியாதபடி அடித்தவனுக்கும் அடி வாங்கியவனுக்கும் மட்டுமே புரியக்கூடிய மர்மமான அடியைப் பட்டுக் கொண்டு விட்டாற் போன்று அந்தரங்க வலியோடு அந்தக் கணத்தில் தனக்குள் நொந்து தவித்தான் ரங்ககிருஷ்ணன்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 21ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 21

21 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன் அடுத்த வந்த நாட்களில் எல்லோரும் நிச்சயம், விழா என வேலையில் மூழ்கினாலும் அனைவரின் கவனிப்பும் ஆதர்ஷிடமே இருந்தது. அக்சராவிடம் அவன் காட்டும் அன்பு, அவளிடம் அவனது எதிர்பார்ப்பு, அனைவரிடமும் அவன் முன் போல கோபம்

ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 55ஜெனிபர் அனுவின் “உனக்கென நான்!” – 55

உனக்கென நான் 55 “ஹேய் மலை என்னடி இதெல்லாம்” என அழுக்கு சட்டை பாவைடையுடம் வந்தாள் அரிசி. “எதடி கேக்குற” “இல்ல தலைல முழச்சிருக்கே இந்த செம்பருத்தி இத யாருடி குடுத்தா” “அதுவா எங்க மாமா தோட்டத்துல பறிச்சதுடி அம்மா வச்சுவிட்டாங்க”

பேரறிஞர் அண்ணாவின் ‘ரங்கோன் ராதா’ – 19பேரறிஞர் அண்ணாவின் ‘ரங்கோன் ராதா’ – 19

மகனே! விபரீதமான சம்பவமாகத்தான் தோன்றும் உனக்கும் சரி, எனக்கும் சரி. கட்டுக்கதைகளிலும் இப்படி இராதே என்றே கூறுவர். ஆனால், எனக்கு ஏற்பட்ட மனமுறிவு என்னை எந்த விபரீதத்துக்கும் தயாராக்கிவிட்டது. ராதா சொல்வாள், பூனைகூடப் புலியாக மாறும் என்று. நம்மைக் கண்டதும் ஓடும்