https://youtu.be/rxRiOwoytOU
கற்பூர நாயகியே கனகவல்லி
ராகம்: ஹிந்தோளம் தாளம்: ஆதி
கற்பூர நாயகியே கனகவல்லி
காளி மகமாயி கருமாரியம்மா
பொற்கோவில் கொண்ட சிவகாமியம்மா
பூவிருந்த வல்லி தெய்வ யானையம்மா
விற்கோல வேதவல்லி விசாலாட்சி
விழிகோல மாமதுரை மீனாட்சி
சொற்கோவில் நானமைத்தேன் இங்குதாயே
சுடராக வாழ்விப்பாய் என்னை நீயே (கற்பூர நாயகியே)
புவனம் முழுதாளுகின்ற புவனேஸ்வரி
புரமெரித்தோன் புறமிருக்கும் பரமேஸ்வரி
நவ நவமாய் வடிவாகும் நாகேஸ்வரி
நம்பினவர் கைவிளக்கே சர்வேஸ்வரி
கவலைகளைத் தீர்த்துவிடும் காளீஸ்வரி
காரிருளின் தீச்சுடரே ஜோதீஸ்வரி
உவமானப் பரம்பொருளே ஜகதீஸ்வரி
உன்னடிமைச் சிறியேனை நீயாதரி (கற்பூர நாயகியே)
நெற்றியினுன் குங்குமமே நிறைய வேண்டும்
நெஞ்சினிலுன் திருநாமம் வழிய வேண்டும்
கற்றதெல்லாம் மேன்மேலும் பெருக வேண்டும்
கவிதையிலே உன் நாமம் வாழ வேண்டும்
சுற்றமெல்லாம் நீடூழி வாழ வேண்டும்
ஜோதியிலே நீயிருந்து ஆள வேண்டும்
மற்றதெல்லாம் நானுனக்குச் சொல்லலாமா
மடிமீது பிள்ளை என்னைத் தள்ளலாமா (கற்பூர நாயகியே)
காற்றாகி கனலாகி கடலாகினாய்
கருவாகி உயிராகி உடலாகினாய்
நேற்றாகி இன்றாகி நாளாகினாய்
நிலமாகி பயிராகி உணவாகினாய்
தோற்றாலும் ஜெயித்தாலும் வாழ்வாகினாய்
தொழுதாலும் அழுதாலும் வடிவாகினாய்
போற்றாத நாளில்லை தாயே உன்னை
பொருளோடு புகழோடு வைப்பாய் என்னை (கற்பூர நாயகியே)
கும்பிடவோ கையிரண்டும் போதவில்லை
கூப்பிடவோ நாவொன்றால் முடியவில்லை
நம்பிடவோ மெய்யதனில் சக்தியில்லை
நடந்திடவோ காலிரண்டால் ஆகவில்லை
செம்பவள வாயழகி உன் எழிலோ
சின்ன இரு கண்களுக்குள் அடங்கவில்லை
அம்பளவு விழியாளே உன்னை என்றும்
அடிபணியும் ஆசைக்கோர் அளவுமில்லை (கற்பூர நாயகியே)
அன்புக்கே நான் அடிமை ஆக வேண்டும்
அறிவுக்கே என்காது கேட்க வேண்டும்
வம்புக்கே போகாமல் இருக்க வேண்டும்
வஞ்சத்தை என்நெஞ்சம் அறுக்க வேண்டும்
பண்புக்கே உயிர்வாழ ஆசை வேண்டும்
பரிவுக்கே நானென்றும் பணிய வேண்டும்
என்பக்கம் இவையெல்லாம் இருக்கவெண்டும்
என்னோடு நீ என்றும் வாழவேண்டும் (கற்பூர நாயகியே)